Friday, March 2, 2012

தொண்டு நிறுவன அரசியலும் கூடங்குளமும்





      அசோகன் முத்துசாமி


      கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்திற்கு இந்தியாவில் செயல்படும் அமெரிக்க மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகளின் உதவியால் செயல்படும் தொண்டு நிறுவனங்களின் மூலம் நிதியுதவி அளிக்கப்படுகின்றது என்று பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டினார். அநேகமாக அமெரிக்கா தொடர்பாக அதற்கு எதிராக ஒரு கருத்தை (அல்லது உண்மையை) மன்மோகன் கூறியிருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கும். இருக்கட்டும்.

      சொன்னவரின் நேர்மை கேள்விக்குறியானது என்பதால் சிலர் இதை ஏற்க மறுக்கின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைவர் சுப.உதயகுமார் இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் துhக்கில் தொங்கத் தயார் என்று சவால் விட்டிருக்கிறார். அரசியல் சார்பற்ற போராட்டம் என்னுடையது என்று கூறிக் கொள்ளும் அவர் ஒரு பக்கா அரசியல்வாதி போலவே பெரும்பாலான நேரங்களில் பேசுகிறார்.

      பெரும்பான்மை மக்கள் அணுஉலையை எதிர்க்கிறார்கள் என்று கொஞ்சமும் கூசாமல் மீண்டும் மீண்டும் கூறுகின்றார். திமுக, இரண்டு கம்யூனி°ட் கட்சிகள், காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய அரசியல் கட்சிகளும், பல்வேறு தொழில்களைச் சேர்ந்த முதலாளிகள், தொழிலாளர்கள் சங்கங்களும்,  விவசாயிகள் சங்கங்களும்  அணுஉலைக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதிமுக இன்னும் தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்கவில்லை, அவ்வளவுதான். (மதிமுகவோ கடும் மின்வெட்டு வாட்டும் சூழலில், விசைத் தொழிலாளர்கள் நிறைய இருக்கும் சங்கரன் கோவில் இடைத் தேர்தலை மனதில் வைத்து கூடங்குள எதிர்ப்பிற்கு 'புரட்சிகரமான இடைக்கால விடுமுறை' விட்டுவிட்டது).  ஆனாலும், தனக்கு பெரும்பான்மை இருப்பதாக அவர் கிளிப்பிள்ளை போல் சொல்வதைப் பார்த்தால் இவரது நம்பகத்தன்மையும் சந்தேகத்திற்குரியதாக ஆகின்றது. நிற்க.

      நாம் தொண்டு நிறுவனங்களுக்கு அந்நிய நிதி உதவி விஷயத்திற்கு வருவோம்.

      அந்நிய நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் அப்படி நிதி அளிக்கும் நாடுகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் என்றோ, அப்படிச் செயல்பட்டாலும் அந்நாடுகள் நிதியுதவி தொடர்ந்து அளிக்கும் என்றோ சொல்ல முடியாது. சொந்தச் செலவில் யாரும் சூன்யம் வைத்துக் கொள்ளப் போவதில்லை.

       பொதுவாக, பல்வேறு வகையான இன்னல்களை அனுபவித்து வரும் மக்களுக்கு சில தற்காலிக நிவாரணங்கள் வழங்குவதன் மூலம் அவர்கள் நடப்பில் இருக்கும் அரசமைப்பிற்கு எதிராகக் கிளர்ந்தெழுவதைத் தடுக்கும் வேலையை அவை கச்சிதமாகச் செய்து வருகின்றன. அத்துடன் உலகமய அமலாக்கத்திற்குப் பின்னர் அனைத்தையும் தனியார்மயமாக்கும் கொள்கைக்கான ஆதரவை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் செய்து வருகின்றன.

      கடந்த சில வருடங்களாக ஜெர்மனியைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று இரண்டு குறும்படங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் (நிச்சயமாக தமிழ்நாட்டில்) திரையிட்டு வருகின்றது.

      அதில் ஒன்று தண்ணீர் பிரச்சனை சம்பந்தப்பட்டது. இந்திய மக்கள் அனுபவிக்கும் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையை மனதைத் தொடுகின்ற மாதிரி விவரிக்கும் அப்படம் மெல்ல மெல்ல தண்ணீர் விரயம் செய்யப்படுவதைப் பற்றிப் பேசுகின்றது. அருகி வரும் இயற்கை ஆதாரமான நீருக்குக் கட்டணம் விதிப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு என்று சொல்லி முடிகிறது. இது பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளின் நலன்களுக்கான படம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

      அதே போல் குறுங்கடன் திட்டம் பற்றி விளக்கும் படம் ஒன்றும் திரையிடப்படுகின்றது. குறிப்பாக, மராட்டியம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் பருத்தி விவசாயிகளின் கடன் பிரச்சனை பற்றிச் சொல்லி பெண்கள் குழுக்களாகச் சேர்ந்து கடன் பெறுவது பற்றி விளக்கும் படம். இப்படிக் கடன் வழங்கும் மைக்ரோ பைனான்° நிறுவனங்களை பன்னாட்டு நிதி நிறுவனங்கள் இயக்குகின்றன என்பதும், லாப நோக்கமற்ற என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் லாப நோக்கத்தாலும், கடன் வசூலிக்கும் முறைகளாலும் ஆந்திராவில் பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது பற்றியும், அது தொடர்வது பற்றியும் சமீபத்தில் 'ஹிந்து' நாளிதழ் (26.2.12) விரிவான செய்தி வெளியிட்டிருந்தது. இவை உதாரணங்கள் மட்டுமே.

      தொண்டு வேலைக்காக தங்களுக்கு வந்த பணத்தை இப்படி கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்திற்குத் திருப்பி விட்டதாக மத்திய அரசாங்கத்தால் மூன்று என்ஜிஓக்கள் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. துhத்துக்குடி டையோசிஸ் அசோஷியேசன், குட் விஷன், பீப்பிள்ஸ்  எஜீகேஷன் பார் ஆக்ஷன் அன்ட் கம்யூனிட்டி எம்பவர்மென்ட் ஆகிய அந்த மூன்று அமைப்புகளில் மூன்றாவது அமைப்பை நடத்துவதே சுப.உதயகுமார்தான்.

      2010-2011ல்  ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் அந்நிய நிதி பெற்ற தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 958. அவற்றில் 186 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்குகின்றன.   அவை அந்த ஆண்டு மட்டும் 800 கோடிக்கும் மேல் அந்நிய நிதி பெற்றன. இவற்றில் உதயகுமாரின் நிறுவனம் மட்டும் 2010-11ல் 2, 64,05,409 ரூபாய் பெற்றிருக்கின்றது. இந்தப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்ற இதர அமைப்புகள் பலவும் இது போல் கோடிக்கணக்கில் அந்நிய நிதியுதவி பெறுகின்றiவைதான். தங்களுக்கு வரும் நிதியில் வெறும் 10 விழுக்காட்டை போராட்டத்திற்கு ஆதரவாகத் திருப்பி விட்டாலும் போதும். வருடம் முழுவதும் போராட்டம் நடத்தலாம்.

      இதற்கிடையே ஒரு விஷயத்தை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் கிறித்துவ தொண்டு நிறுவனங்கள் சில சம்பந்தப்பட்டிருப்பதால் இந்தப் போராட்டத்திற்கு மதச்சாயம் பூச இந்துத்துவ சக்திகள் முயலுகின்றன. (இதை கிறித்துவ மத அமைப்புகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்). ஆனால், 2010-11ல் 10 கோடிக்கும் மேல் அந்நிய நிதியுதவி பெற்ற 'தொண்டு நிறுவனங்களின்' பட்டியலில் காஞ்சி காமகோடி மருத்துவ அறக்கட்டளையும் ஒன்று.  (perspectives on pan asian-website). கண்மூடித்தனமான பார்ப்பன எதிர்ப்பு, கூடங்குள எதிர்ப்பு குழுக்கள் கவனிக்கவும்.

      அந்நிய நாடுகள் இந்திய மக்களை வாழவைப்பதற்காக நிதியுதவி செய்யப் போவதில்லை. சம்பந்தப்பட்ட நாடுகள் ஒன்றும் அப்படி தங்கள் நாட்டு சாமானிய மக்களை வாழ வைத்துவிடவில்லை.
            ---------------------------------------2.3.12

     


     

     

Wednesday, February 29, 2012

சில கவிதைகள்




பந்து போல்
திரும்பி வரும்
என்பது தெரியாதவர்கள்
நிலைக் கண்ணாடிகள் மீது
கல் வீசுகிறார்கள்
.
ஆள்பாதி ஆடைபாதி
மற்றவருக்குத்தான்

எப்போதும்
ஆள்தான் எல்லாமே
மனசாட்சிக்கு.
.
சொல்லாத சொல்லுக்கு
விலையேதுமில்லை

அவதூறுகளை நீங்கள்
அள்ளி வீசும்போது தெரிகிறது

உங்கள் மொழியின்
விலையும்

என் மௌனத்தின்
மதிப்பும்
.
மனிதர்கள் வெறும்
மரங்களல்ல

காய்த்தால்
கல் வீசுவதற்கும்

காய்க்காவிட்டால்
வெட்டிச் சாய்ப்பதற்கும்
.
வரிசைகளை மீறி
நீண்டன கைகள்

உடலை வளர்த்தவன்
அறிவை வளர்க்கவில்லை.
-அசோகன் முத்துசாமி



Friday, February 24, 2012

பங்கரமான ஆயுதம்





 




அந்தக் குரங்கு
ஊமையாகவே இருந்திருக்கலாம்

யார் அழுதார்கள்
அது பேசவில்லை என்று?

அதன் நாக்கு
சுவைக்க மட்டுமே
தெரிந்ததாக இருந்திருக்கலாம்

சுழட்டத் தெரிந்திருக்க
வேண்டியதில்லை

அதன் பற்கள்
இரையை மட்டும் கடிக்கத்
தெரிந்தவையாக இருந்திருக்கலாம்

தொண்டையிலிருந்து எழுந்து
நாவால் வழிநடத்தப்படும்
காற்றோசையை
சொல்லாக மாற்றத்
தெரிந்திருக்க வேண்டியதில்லை

சுடும் நெருப்பாகவோ
வெட்டும் கத்தியாகவோ
துளைக்கும் அம்பாகவோ
தூக்கும் கயிறாகவோ

பயங்கரமான ஆயுதமாகவேதான்
எப்போதும் இருக்கிறது
பேசத் தெரிந்த 'மிருகத்தின்'
சொல்-
பேசத் தெரியாத 'மனிதர்களுக்கு!'

-அசோகன் முத்துசாமி












Saturday, February 11, 2012

அரசியல், கலாச்சாரம், சோஷலிசம்



பிரபாத் பட்நாயக்

தமிழில்: அசோகன் முத்துசாமி


முதலாம் உலகப் போர் துவங்கி இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த வரையிலான காலகட்டம் உலக முதலாளித்துவத்திற்கு ஒரு கடுமையான நெருக்கடி காலகட்டமாகும். அந்த இரண்டு பயங்கரமான யுத்தங்கள் தவிர அந்த காலகட்டம் மாபெரும் பொருளாதார மந்த நிலையையும் சந்தித்தது; முதலாளித்துவம் தன் வரலாற்றில் அது வரையில் சந்தித்திருந்த நெருக்கடிகளில் மிகவும் கடுமையானது அதுதான். 'முதலாளித்துவத்தின் பொதுவான நெருக்கடி' காலகட்டத்திற்குள் உலகம் நுழைந்து விட்டது என்றும், அங்கிருந்து சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது ஒன்று மட்டுமே நிகழும் என்றும் கிட்டத்தட்ட உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இருந்த அறிவுஜீவிகளில் மிகக் கணிசமானோர் நம்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தக் காலகட்டம் முன்னேறிய நாடுகளில் இருந்த உழைக்கும் மக்களுக்கு மட்டுமின்றி, மூன்றாம் உலக நாடுகளில் இருந்த உழைக்கும் மக்களுக்கும் கடும் துன்பத்தைத் தந்தது. எடுத்துக் காட்டாக, மாபெரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக இந்தியாவில் விவசாயிகள் வரம்பற்ற வறுமையில் தள்ளப்பட்டார்கள்; காலனிய ஆட்சியில் நீண்ட காலமாக உணவு உற்பத்தித் தேக்கமடைந்திருந்ததும், அத்துடன் இரண்டாம் உலகப் போருக்கான செலவின் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் மிகப் பெருமளவு உயர்ந்ததும் முப்பது லட்சம் மக்களைக் கொன்ற 1943ம் ஆண்டு வங்கப் பஞ்சத்தை துரிதப்படுத்தியது.
அது எதிர்ப்பியக்கங்களின் காலமும் ஆகும். கடும் துன்பத்தில் உழன்ற விவசாயிகளிடமிருந்து பெற்ற ஆதரவின் காரணமாக காலனிய எதிர்ப்பு இயக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உந்துதலையும், வீச்சையும் பெற்றது. மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த விழிப்புணர்ச்சி உழைக்கும் மக்கள் தொடர்ச்சியாக நடத்திய போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. ஆதலால், இந்த உலக முதலாளித்துவ நெருக்கடி காலகட்டம் உலகளாவிய அளவில் மாபெரும் புரட்சி அலை வீசியதையும் குறிக்கும் கட்டமாகும்; அது யுத்தம் முடிந்த பின்னரும் சில காலம் தொடர்ந்தது; ஆனால், நீண்ட காலம் தாமதமான வியட்நாம் புரட்சியின் வெற்றி அந்த எழுச்சியின் கடைசி அத்தியாயமாகும்.
இந்தியாவிலும் வேறு பகுதிகளிலும் எழுந்த முற்போக்கு கலாச்சார இயக்கங்கள் இந்த புரட்சி அலைக்கு வலு சேர்க்கும் கூறுகளாக அதிலிருந்தே உருவானவையாகும். என்றபோதிலும், அது போலவே பழைய வடிவிலான கலாச்சார இயக்கம் 1950களிலும், அதற்கு அப்பாலும் தன்னுடைய அதே இயங்கு விசையை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்பது அந்த புரட்சி அலை ஓய்ந்து விட்டது என்பதன் பிரதிபலிப்பாகும். ஐம்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் உலக முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு புதிய புரட்சி அலையை உலகம் இப்போது கண்டு கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன்; ஆம், அது தன்னுடைய வளர்ச்சிப் போக்கில், மக்களைத் திரட்டும் விதத்தில், முன்னேற்றம் குறித்த தன்னுடைய அளவுகோலில், முந்தைய அலையுடன் ஒப்பிடும்போது வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதுவும் தன்னுடைய சொந்த புரட்சிகர முற்போக்கு கலாச்சார இயக்கத்தை உருவாக்கும்; அதன் தன்மை இன்று நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் பழைய இயக்கத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.
இந்த புதிய கலாச்சார இயக்கத்தின் தன்மை என்னவாக இருக்கும் என்று ஊகிப்பது இங்கு என் நோக்கமல்ல. பழைய கலாச்சார இயக்கத்தைக் கொண்டாடும்போது முற்போக்கு கலாச்சார இயக்கங்களின் பணி பழைய இயக்கம் தனக்கான பணி என்று  எதை விதித்துக் கொண்டதோ அதுவாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நம்பிவிடக் கூடாது என்பதை நினைவுறுத்துவதுதான் என் நோக்கம்; அதாவது, சொத்து உறவுகளில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் சுரண்டலை முடிவிற்குக் கொண்டு வரும் போராட்டத்திற்குப் பங்களிப்பதுதான் முற்போக்கு கலாச்சார இயக்கத்தின் பணி என்ற நம்பிக்கையில் வீழ்ந்துவிடக் கூடாது. மக்கள் விடுதலை அடைவதற்கு நடப்பில் இருக்கும் ஆளும் வர்க்கங்களைத் தூக்கி எறிவதன் மூலம் சொத்து உறவுகளில் மாற்றம் கொண்டு வருவது மட்டும் போதாது; ஆனால், கலாச்சார நடவடிக்கைகளின் மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் பழைய சமூக அமைப்பைக் குறிக்கும் சமூகப் பழக்க வழக்கங்களையும், நிறுவனங்களையும் தாண்டிச் செல்லவும் வேண்டும்; அதற்காக முற்போக்கு கலாச்சார இயக்கங்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும். பெரிய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் தலைமையிலான சுரண்டல் அமைப்பை வெற்றி கொள்வதை மட்டுமே தங்களது மாபெரும் குறிக்கோளாக முற்போக்கு கலாச்சார இயக்கங்கள் நிர்ணயித்துக் கொள்ளக் கூடாது. சாதி அடிப்படையிலான ஆணாதிக்க சமூக அமைப்பு அதற்குத் தலைமை தாங்கும் குறிப்பிட்ட சுரண்டும் வர்க்கங்களை விடவும் மிகவும் நீடித்து நிற்கக் கூடியது என்பதால் அதற்கு எதிராக அன்றாடம் தொடர்ச்சியான போராட்டம் நடத்துவது பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், விடுதலை அடைவதற்கு நிரந்தரமான 'கலாச்சாரப் புரட்சி' தேவை. (லியோ டிராட்ஸ்கியின் 'நிரந்தரப் புரட்சி'யிலிருந்தும், சீனாவின் 'கலாச்சாரப் புரட்சி'யிலிருந்தும் இந்த சொற்றொடரை வேறுபடுத்தி பார்க்க வேண்டும்). முற்போக்கு இயக்கங்கள் இந்தக் கடமையையும் தங்களுடையதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதை விளக்கமாகச் சொல்கிறேன்.

1

வரலாற்று மாற்றம் இரண்டு கட்டங்களாக நிகழ்வதாக மார்க்சியம் கருதுகிறது: பழைய சமூகம் அழிக்கப்படுதல் மற்றும் புதிய சமூகம் உருவாக்கப்படுதல். பழைய சமூகத்தை ஒழிப்பதற்கான கருவி முதலாளித்துவமாகும். முதலாளித்துவத்தின் கீழ் இருப்பிற்கு வரும் புதிய சமூகம் முதலாளித்துவத்தையே அழிக்கும் கருவியாக ஆகிறது. சோஷலிசம் நிறுவப்படுவதில் புதிய சமூகம் தன்னுடைய உச்ச நிலையை அடைகின்றது. பழைய சமூகத்து மக்கள் அதில் யதேச்சையாக பிறக்கிறார்கள்; அவர்களாக விரும்பி அதனுள் நுழைவதில்லை. புதிய சமூகத்தில் மக்கள் தாங்களாகவே விரும்பி நுழைகிறார்கள். ஏனெனில், முதலாளித்துவ உற்பத்தி முறையில் அவர்கள் ஒரே மாதிரியான நிலையில் இருப்பதானது அவர்களை ஒன்று சேரும்படி கட்டாயப்படுத்துகின்றது; முதலில் பொருளாதார கோரிக்கைகளுக்காகவும், ஆனால் அதைத் தொடர்ந்து, வரலாற்றுப் போக்கை அவர்கள் தத்துவார்த்த ரீதியாகப் புரிந்து கொள்வதால், அமைப்பையே மாற்றுவதற்காக ஒத்திசைவான அரசியல் செயல்பாட்டிற்காக ஒன்று சேர்கிறார்கள். பழைய சமூகம் அதற்கு வெளியே இருக்கும் ஒரு சக்தியான நிலப்பிரபுவால் சுரண்டப்படுகிறது என்கிற குணஇயல்பால் மட்டும் குறிக்கப்படுவதில்லை; ஆனால், அதற்கு உள்ளேயே சமூக அந்தஸ்தில் ஏற்றதாழ்வுகள் இருக்கிறது என்கிற குணஇயல்பாலும் அது குறிக்கப்படுகின்றது. மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அது தனிநபரை முடக்கிப் போடும் சமூகமாகும். முதலாளித்துவம் பெயரளவிற்கு தனிநபரை விடுவிக்கின்றது; ஆனால், தனிநபர் சாராத, சுயமாக இயங்கும் ஒரு அமைப்பின் வெறும் பல்சக்கரமாக தனிநபரை ஆக்குகின்ற வகையில் அவனையோ அல்லது அவளையோ தன்னுடைய உள்ளியல்பான போக்குகளுடன் பிணைத்து விடுகின்றது. இந்த 'தன்னிச்சையான' சமூக அமைப்பை தூக்கி எறிந்து, சோஷலிச சமூகத்தை உருவாக்குவதற்காக தனிநபர்கள் ஒன்று சேர்ந்து அரசியல் ரீதியாகத் தலையிடும்போது புதிய சமூகத்தின் மூலம்தான் தனிநபரின் விடுதலை நிகழ்கின்றது. ஆதலால், தனிநபரின் விடுதலை கூட்டு முயற்சியின் மூலம் மட்டுமே நிகழ்கின்றது.
ஆனால், முதலாளித்துவம் தாமதமாகத் தோன்றும் சமுதாயங்களில் பழைய சமுதாயத்தால் நேரடியாக புதிய சமுதாயமாக மாற்றமடையவும், அவ்வாறு முதலாளித்துவ கட்டத்தை முழுமையாக தவிர்க்கவும் முடியுமா? வேரா ஜாசுலிச் இந்தக் கேள்வியை மார்க்சிடம் கேட்டார். ரஷ்யாவின் பழைய கிராம சமுதாயமான மிர்-ரை அடிப்படையாகக் கொண்டு நேரடியாக சோஷலிசத்தைக் கட்டுவது சாத்தியமா என்று அவர் சந்தேகப்பட்டார். 1881ம் ஆண்டில் ஜாசுலிச்சுக்குப் பதிலாக நான்கு நகல் கடிதங்களை எழுதுகின்ற அளவிற்கு இந்தக் கேள்வி மார்க்சை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. அத்தகைய நேரடியான மாற்றத்திற்கான சாத்தியத்தை மார்க்ஸ் மறுக்கவில்லை; ஆனால், அதே வேளையில், ரஷ்ய கிராம சமுதாயத்தில் நிலத்தின் உடமை சமுதாயத்திடம் இருந்தாலும் நிலத்தைப் பயன்படுத்துவது தனித் தனிக் குடும்பங்களிடம் இருந்ததாலும், அக்குடும்பங்களின் அளவிற்கு ஏற்ப நிலம் அவ்வப்போது மறுவிநியோகம் செய்யப்பட்டாதாலும், அது தன்னுள்ளேயே ஒரு இரட்டைத் தன்மையை கொண்டிருந்தது; அது 'சமுதாய உடமையின் பொருளாதார மேல்நிலையைக்' குறைக்கின்ற வகையில் விவசாயிகளுக்கு மத்தியில் வேறுபாடுகள் உருவாக வழி வகுக்கக் கூடும் என்று மார்க்ஸ் சுட்டிக் காட்டினார். கிராம சமுதாயத்திற்குள் உள்ள வேறுபாடுகளிலிருந்து முதலாளித்துவம் வளரக் கூடும் என்பது மட்டுமல்ல, அது உண்மையில் அவ்வாறாக வளர்ந்து கொண்டிருந்தது என்று லெனின் 'ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி' என்கிற தன்னுடைய அற்புதமான நூலில் அழுத்தமாகக் கூறியிருந்தார். உண்மையில், ஜாசுலிச்சிற்கு மார்க்ஸ் பதில் எழுதிய காலத்தோடு ஒப்பிட்டாலும், நூற்றாண்டின் முடிவில், ரஷ்யாவின் கிராமப்புறங்களில் கணிசமான மாற்றங்கள் ஏற்பபட்டிருந்தன; இந்த மாற்றங்களை லெனின் மிகக் கவனமாக ஆவணப்படுத்தியிருந்தார்.
ஆனால், இருபதாம் நூற்றாண்டில் மூன்றாம் உலக நாடுகளின் புரட்சிகர நிகழ்ச்சி நிரலுக்கு அடிப்படையை கொடுக்கவிருந்த லெனினின் ஆய்வும் கூட மற்றொரு விதமாக முதலாளித்துவத்தைத் தவிர்ப்பதை மனங்கண்டது. வரலாற்று களத்திற்கு தாமதமாக வருகின்ற முதலாளிகள், பிரான்சில் முழுமையான முதலாளித்துவப் புரட்சியின் போது முதலாளித்துவ வர்க்கம் செய்தது போல் பழைய நிலப்பிரபுத்துவ அமைப்பை அடித்து நொறுக்காமல் அதனுடன் அணி சேர்ந்தது. நிலப்பிரபுத்துவ நுகத்தடியில் சிக்கியிருந்த விவசாயிகள் வர்க்கம் எண்ணி எண்ணி ஏங்கிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் பணி பாட்டாளி வர்க்கத்தின் மீது விழுந்தது; ஏனெனில், நிலப்பிரபுத்துவ சொத்துடமையின் மீதான தாக்குதல் முதலாளித்துவ சொத்துடமையின் மீதான எதிர்த் தாக்குதலாக தன் மீது திரும்பக் கூடும் என்று அஞ்சிய முதலாளி வர்க்கம் அந்தப் பணிக்கு தகுதியானதாக இருக்கவில்லை. லெனின் மனங்கண்டது என்னவெனில், ஒரு தொழிலாளர்-விவசாயி கூட்டணி ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும்; அங்கிருந்து சோஷலிசப் புரட்சிக்கு முன்னேறும்; எனினும், இந்தப் போக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் விவசாயிகளுக்குள் இருக்கும் வர்க்கங்களில் தொழிலாளி வர்க்கம் அணி சேரும் வர்க்கம் மாறிக் கொண்டே இருக்கும். இந்த கண்ணோட்டத்தின் உள்பொருள் என்னவெனில், சோஷலிசத்திற்கான போராட்டம் முதலாளித்துவம் போதுமான அளவு வளருகின்ற வரையில் காத்திருக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு மறுக்கப்படுவதாகும். (இந்த வாதத்திற்குள் ஏகாதிபத்தியம் குறித்த தன்னுடைய கோட்பாட்டையும், ஏகாதிபத்தியச் சங்கிலியின் 'பலவீனமான கண்ணியை' நொறுக்க வேண்டிய தேவையையும் சேர்த்ததன் மூலம் 1907 வாக்கில் தான் வளர்த்த இந்த வாதத்திற்கு லெனின் பின்னர் வலு சேர்த்தார்).
என்றபோதிலும், பழைய சமுதாய அமைப்பை முதலாளித்துவம் அழிப்பது என்பது இரண்டு கூறுகளைக் கொண்டதாகும்: நிலப்பிரபுத்துவச் சொத்துடமையின் மீது தாக்குதல் நடத்துவதும், சிறு சொத்துடமையை உருவாக்குவதும் முதலாவது கூறு; தனிநபரின் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட தனிச் சொத்தை அகற்றி, அதற்குப் பதிலாக  மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டுவதையும், கூலி உழைப்பையும் அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவத் தனிச் சொத்தை அதனிடத்தில் வைப்பதற்காக சிறு உடமையின் மீது தாக்குதல் நடத்துவதும், முதலாளித்துவ சொத்துடமையை உருவாக்குவதும் இரண்டாவது கூறு.1 பால் பாரன் பின்னர் குறிப்பிட்டபடி, முதலாளித்துவம் வளர்ச்சி பெற வேண்டும் எனில், நாட்டுப்புறத்தில் முதலில் விவசாயிகளுக்குச் சாதகமாக ஒரு புரட்சியும், பின்னர் அதற்கு எதிராக ஒரு எதிர்ப்புரட்சியும் தவிர்க்க முடியாதவை.2 இதற்கு மாறாக, ரஷ்யாவிலும் முதலாளித்துவம் தாமதமாக வரும் இதர சமுதாயங்களிலும் புரட்சிகர மாற்றம் பற்றிய லெனினியக் கருத்தாக்கம் நிலப்பிரபுத்துவச் சொத்துடமை அழிக்கப்படுவதும், அது சிறு உடமையாக மாற்றப்படுவதும் தவிர்க்க முடியாதவை என்கிறது; ஆனால், சிறு உற்பத்தியாளரின் சொத்து பறிமுதல் செய்யப்படுவது தவிர்க்க முடியாதது என்று கூறவில்லை. அதாவது, அது இரண்டு கூறுகளில் முதலாமாவதை மனங்கண்டது, இரண்டாவதை அல்ல. அதற்குப் பதிலாக, கூட்டுறவு மற்றும் கூட்டுப் பண்ணைகள் அல்லது நிறுவனங்களை அமைப்பதற்காக சிறு உற்பத்தியாளர்கள் ஒன்று சேர்வதன் மூலம் சிறு சொத்துக்கள் பெரிய அளவிலான சொத்தாக மாற்றுவதுதான் திட்டமாகும்.
ஆதலால், பழைய சமூக அமைப்பின் மீது முதலாளித்துவம் நடத்திய தாக்குதலைப் போலவே மீண்டும் நடத்த வேண்டும் என்று இருபதாம் நூற்றாண்டின் கம்யூனிஸ்ட் தத்துவ ஆய்வு மனங்காணவில்லை; அது நிலப்பிரபுத்துவச் சொத்துடமை அழிக்கப்படுவதை மனங்கண்ட அதே வேளையில் சிறு சொத்துடமை அழிக்கப்படுவதை மனங்காணவில்லை; மாறாக, சிறு சொத்துடமை கூட்டுச் சொத்துடமையாக மாற்றமடைவதை மனங்கண்டது. ஆனால், கம்யூனிஸ்ட் தத்துவம் பழைய சமூகம் அழிக்கப்படுவதை மனங்காணவில்லை என்றும் இது பொருள் படும்; ஆனால், அதற்குப் பதிலாக, பல கட்டங்களின் வழியாகவும், மாறும் வர்க்கக் கூட்டணிகளின் அடிப்படையிலும், பழைய சமூகம் மற்றொன்றாக மாற்றமடைவதை மனங்கண்டது; அந்த மற்றொன்று சோஷலிசத் திட்டத்திற்கு பொருத்தமற்றதாக இருக்காது; அதாவது, பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படையிலான புதிய சமூகம் எதைச் சாதிக்கப் பாடுபடுகின்றதோ அதற்குப் பொருத்தமற்றதாக இருக்காது.

2

ஆனால், இது அனைத்திலும் முக்கியமான கேள்வியை எழுப்பியது: பழைய சமூகத்தை, அது நிலப்பிரபுத்துவச் சுரண்டல் நீக்கப்பட்டதாக இருந்தாலும் கூட, எந்த அளவிற்கு புதிய சமுகத்தின் தலைமையில் இருப்பிற்கு வரும் புதிய அமைப்பிற்கு இணக்கமானதாக ஆக்கப்பட முடியும்? ஏனெனில், அதை இணக்கமானதாக ஆக்க முடியவில்லை என்றால், அப்போது சோஷலிசத்திற்கு மாறிச் செல்வதே முற்றிலும் நிலைகுலைந்து போகக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது; அது எந்தெந்த வழிகளில் நடக்கும் என்பதை பின்னர் விவாதிக்க நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
தன் பங்கிற்கு இந்தக் கேள்விக்கு இரு வேறுபட்ட பரிமாணங்கள் இருக்கின்றன; இது வரையில் அவற்றில் ஒன்று மட்டுமே ஓரளவிற்கு விரிவாக கம்யூனிஸ்ட் இலக்கியத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. சிறு சரக்கு உற்பத்தி தனக்குள்ளே நிகழும் ஒரு உள் வேறுபாட்டு போக்கின் மூலம் முதலாளித்துவத்தை உண்டாக்குவது சம்பந்தப்பட்டதாகும் இது. வேறு வார்த்தைகளில் கூறினால், சிறு உற்பத்தியாளர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதன் மூலம் முதலாளித்துவம் மீண்டு வரவில்லை என்றாலும் கூட சிறு உற்பத்தியாளர்களின் மத்தியில் ஏற்படும் வேறுபாடுகள் மூலம் அது தோன்றக் கூடும்; மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் கூட்டாகச் சேர்ந்து உற்பத்தியில் ஈடுபட்டாலும் கூட இது நிகழக் கூடும்; ஏனெனில், வேரா ஜாசுலிச்சிற்கு மார்க்ஸ் எழுதிய கடிதத்தில் மனங்கண்டதைப் போல், உற்பத்தியாளர்களின் கூட்டமைப்புகளுக்கு இடையிலும் கூட வேறுபாடுகள் உண்டாகக் கூடும். (உற்பத்தியின் அளவில் வேறுபாடுகளும், அதனால் லாபத்தின் அளவில் வேறுபாடுகள் ஏற்படக் கூடும்; அதிக லாபம் ஈட்டுகிறவர்களிடம் மூலதனம் குவியக் கூடும்; அது முதலாளித்துவத்தின் மறுதோற்றத்திற்கு இட்டுச் செல்லக் கூடும் என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன்-மொர்).
சீனக் கலாச்சாரப் புரட்சியின் மிகப் பெரிய தத்துவார்த்த விவாதமாக இது இருந்தது. சீனாவில் உள்ள மிகப் பெருமளவு சிறு சரக்கு உற்பத்தியாளர்கள் இருப்பதால் அவர்களுக்கிடையில் ஏற்படும் உள் வேறுபாடுகள் மூலம் முதலாளி வர்க்கம் உருவாவதற்கான நிலையை உருவாக்கும் என்கிற அச்சம் சாங்க் சுன் சியோ, வாங்க் ஹ§ன் வென், யாவோ வென் யுவான் மற்றும் சியாங்க் சிங்க் (நால்வர் கும்பல் எனப் பொருள்படும் 'கேங்க் ஆப் போர்') ஆகியோரைப் பீடித்திருந்தது. உண்மையில் இந்த அச்சம் ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சிகளை எங்கெங்கும் நீண்ட காலம் பீடித்திருந்தது. அதன் காரணமாக அவை முதலாளித்துவம் மீண்டு விடும் என்கிற அச்சத்தால் சிறு உற்பத்தியின் வாய்ப்பெல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தின; உதவிக்கு சில வேலையாட்களை அமர்த்திக் கொண்டு குடும்பங்கள் ஈடுபடும் சிறு உற்பத்தியையும் அவை கண்டு அஞ்சியவற்றில் அடங்கும். இது பொருளாதாரத்தை கணிசமான அளவு சேதப்படுத்துவதற்கு மூலகாரணமாக இருந்தது. உண்மையில், கியூபாவில் மிகச் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் இதைச் சரி செய்வதற்காகத்தான் (என்றபோதிலும், கியூப சீர்திருத்தத்தை அப்படியே ஆதரிக்கும் அளவிற்கு எனக்கு விவரம் தெரியாது).
என்றபோதிலும், சிறு உற்பத்தியாளர்கள் மத்தியில் ஏற்படும் வேறுபாடுகள் காரணமாக முதலாளித்துவம் மீண்டு விடும் என்கிற இந்த அச்சம் மிகப் பெருமளவு மிகைப்படுத்தப்பட்டதாகும்; முதலாளித்துவம் மணிக்கணக்கில், நாள்கணக்கில் தனக்குள் வளர்கிறது என்று உற்பத்தி குறித்து லெனின் நெத்தியில் அடித்தாற்போல் கூறியிருந்தபோதிலும் இந்த அச்சம் பெருமளவு மிகைப்படுத்தப்பட்டதாகும் (லெனினின் கூற்று வழக்கமாக சந்தர்ப்ப சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத வகையில் புரிந்து கொள்ளப்படுகின்றது). நடைமுறையில் கம்யூனிஸ்ட் ஆட்சிகளில் ஏற்பட்ட பெரும்பாலான அதி தீவிர இடதுசாரி திரிபு என்கிற எதிர்மறையான விளைவுக்கு இந்த அச்சமே மூலகாரணமாகும். இது மிகைப்படுத்தப்பட்டது என்று நான் கருதுவதற்குக் காரணம் இந்த வழியில் முதலாளித்துவம் தோன்றுவதென்பது மிக நீண்ட நெடுங்காலம் நீடிக்கக் கூடிய ஒரு போக்காகும்; அதாவது, முற்றிலும் பொருளாதார நோக்கில் பார்த்தால், அதனால் தன்னளவிலேயே சோஷலிச அமைப்பிற்கு உண்மையிலேயே ஒரு ஆபத்தாக ஆகமுடியாது.
மாரிஸ் டோப்பும் கூட, 'முதலாளித்துவ வளர்ச்சி குறித்த ஆய்வுகள்' (ஸ்டடிஸ் இன் தி டெவலப்மென்ட் ஆப் கேபிடலிசம்) என்கிற தன்னுடைய பிரசித்தி பெற்ற நூலில் ஆதி மூலதனத் திரட்டல் வகிக்கும் பாத்திரத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து, இந்த குறிப்பிட்ட வழிக்கு அழுத்தம் கொடுத்தார்; அதாவது, மரபான முதலாளித்துவத்தின் வரலாற்று ரீதியான தோற்றமே சிறு சரக்கு உற்பத்தியாளர்களுக்கு இடையில் ஏற்படும்  வேறுபாடுகளிலிருந்து நிகழ்ந்தது என்றார்; கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் இந்த மொத்த நிகழ்போக்கும் நடந்தது என்று கருதினார்! நமது சொந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக, ஏன் ஆயிரம் ஆண்டுகளாக, சிறு சரக்கு உற்பத்தியாளர்கள் இருந்து வருகிறார்கள்; ஆனால், அத்தகைய உற்பத்தியாளர்களுக்கு இடையில் ஏற்படும்  வேறுபாடுகளின் மூலம் முதலாளித்துவ வளர்ச்சியை நோக்கிய குறிப்பிடத்தக்க வரலாற்று ரீதியான போக்கு எதுவும் இல்லாமலேயே, அதாவது 'கீழிருந்து முதலாளித்துவம்' தோன்றும் போக்கு  எதுவும் இல்லாமலேயே, இருந்து வருகிறார்கள்.
சொத்துறவுகள் மாற்றப்பட்டிருந்த போதிலும் அதற்குள் பழைய சமூகம் தொடர்ந்து நீடித்து இருப்பதால் சமூக மாற்றத்திற்கு ஏற்படக் கூடிய ஆபத்து இப்பிரச்சனையின் மற்றொரு பரிமாணமாகும்; குறைவான கவனத்தையே பெற்றுள்ள இது மொத்த தத்துவார்த்த நம்பிக்கைகள் மற்றும் சமூக-கலாச்சார நடைமுறைகள் (அல்லது பழக்க வழக்கங்கள்-மொர்) சம்பந்தப்பட்டதாகும். சோஷலிசத்தை நோக்கிய பயணத்தில் அவை பெரிய தடைகளாக இருப்பது மட்டுமின்றி, அத்துடன் முதலாளி வர்க்க அல்லது முதலாளித்துவ வர்க்கமாக ஆகக் கூடிய சக்திகளை உண்டாக்கக் கூடிய சிறு சரக்கு உற்பத்தியாளர்களுக்கு இடையில் வேறுபாடுகளை உண்டாக்கும் போக்கையும் சேர்த்துக் கொண்டால், அவை கிட்டத்தட்ட கடந்து செல்ல முடியாத தடைகளாக ஆக முடியும். அதனினும் கூடுதலாக, முதலாளித்துவம் தாமதமாக வளரும் சமுதாயங்களில் தோன்றும் புதிய சமூகம் பழைய சமூகத்தின் தத்துவார்த்த பார்வைகள் மற்றும் சமூக-கலாச்சார நடைமுறைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக இருப்பதில்லை; இந்த பார்வைகளைத் தகர்க்கும் புதிய சமூகத்தின் ஆற்றல் அதற்கேற்றவகையில் வலுவிழந்து விடுகின்றது; இது, எடுத்துக் காட்டாக, பாட்டாளி வர்க்கத் தலைமையின் மிகவும் முன்னேறிய பிரிவினர் மத்தியிலும் கூட நிலப்பிரபுத்துவ பண்புகள் தோன்றுவதற்கு வழிவகுக்கிறது. இதன் நிகர விளைவு முதலாளித்துவம் மீட்டுருவாக்கப்படுவதற்கான நிலைமைகளை உருவாக்கும் சமூக தேக்க நிலையாக இருக்கலாம். ஆனால், அதி தீவிர இடதுசாரிகள் அச்சப்படுவதைப் போல் முதலாளித்துவம் கீழிருந்து மீளாது; ஆனால், ஏகாதிபத்தியம் தலையிடுவதற்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்குவதன் மூலம் முதலாளித்துவம் மீட்டுருவாக்கப்படுவதற்கான நிலைமைகளை உண்டாக்கும்.
இந்தக் கருத்தை விளக்க ஒரு கற்பிதமான விஷயத்தை பரிசீலிப்போம். சாதி அமைப்பு நிலப்புரபுத்துவ ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்குச் சேவை செள்கிறது என்றபோதிலும், நாட்டுப்புறத்தில் சொத்துறவுகளை மாற்றும் ஒரு புரட்சியின் மூலம் இந்த ஆளும் வர்க்கம் அகற்றப்பட்டாலும், அதன் காரணமாகவே சாதி அமைப்பு அகற்றப்பட்டுவிடாது. பழைய சமூகத்தை வரையறுக்கும் ஒரு பண்பியல்பாக அமைந்திருக்கும் சாதி அமைப்பின் முந்தைய பாதுகாவலர்களாக இருந்த பிரதான ஆளும் வர்க்கமான நிலப்பிரபுக்கள் (அல்லது முதலாளி வர்க்கமாக ஆகக் கூடியவர்கள்) அகற்றப்பட்டாலும் அந்த அமைப்பு தொடருகின்றது. சாதி அமைப்பின் விஷயத்தில், பழைய சமூகத்தைச் சேர்ந்த ஒப்பீட்டளவில் வளமான சிறு சரக்கு உற்பத்தியாளர்களின் மத்தியிலிருந்துதான் பெரும்பாலும் புதிய பாதுகாவலர்கள் தோன்றுகிறார்கள்; தங்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த முந்தைய சுரண்டும் வர்க்கம் ஒழிக்கப்பட்டுவிட்ட காரணத்தினால் அவர்களுக்குத் தங்களது நிலைமையைப் பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இப்போது இருக்கிறது; நாட்டுப்புறத்தில் உள்ள சிறு சரக்கு உற்பத்தியாளர்களுக்கு இடையில் வேறுபாடுகள் ஏற்படும் போக்கு அவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் இந்த வாய்ப்பை அவர்கள் உணர்ந்தும் இருக்கிறார்கள்.
வேறு வார்த்தைகளில் கூறினால், தத்துவார்த்த பார்வைகளையும், கலாச்சார நடைமுறைகளையும் அவற்றுக்கு அடிப்படையாக இருக்கின்ற சொத்துறவுகளுக்கு நேரடியாக உட்பட்டவையாக ஆக்க முடியாது என்கிற சந்தேகத்திற்கு இடமற்ற உண்மைக்கு அப்பாற்பட்டு, அவற்றுக்கென்று சொந்தமாக ஒரு வாழ்வு இருக்கிறது இருக்கின்றது; இந்த சொத்துறவுகளையும் தாண்டி வெகு காலம் நீடித்திருக்கும் தன்மையும் அவற்றுக்கு இருக்கின்றது; அத்தகைய தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளின் பொருயாளத வேர்களே முந்தைய சுரண்டும் வர்க்கம் அகற்றப்பட்ட பின்னரும் ஊட்டம் பெறுவது உண்டு; சுரண்டும் வர்க்கம் அகற்றப்பட பின்னரும் என்பது மட்டுமின்றி, அப்படி அகற்றப்படுவதனாலேயே ஊட்டம் பெறுவது உண்டு. பாட்டாளி வர்க்கத்தின் முன்னேற்றமடைந்த தலைமை அத்தகைய ஊட்டம் பெறுதலுக்கு எதிராகச் செயல்படுவதற்காகத் தலையிடும் என்கிற நம்பிக்கையும் பல்வேறு காரணங்களால் பொய்த்துப் போகலாம்: முதலாவதாக, அந்த முன்னேறிய தலைமையே இத்தகைய தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக இல்லாமல் இருக்கலாம். புரட்சியை நடத்தும் முதல் தலைமுறை தலைமை இத்தகைய பார்வைகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்றதாக இருந்தபோதிலும், அதைத் தொடர்ந்து வரும் தலைமுறைகள் விஷயத்தில் அது உண்மையாக இல்லாமல் போகலாம்; குறிப்பாக, வேறு எங்கும் இது போல் புரட்சியைத் துண்டாமல் புரட்சி தனிமைப்படுத்தப்பட்டதாக இருந்தால் இப்படி ஆகலாம். இரண்டாவதாக, அத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட, சுற்றி சூழப்பட்ட நிலைமைகளில் மேலும் சிக்கலை உண்டாக்காமல் இருக்க வேண்டிய காரணத்தால், பழைய சமூகத்தின் தத்துவார்த்தப் பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளுடன் ஒரு வகையான சமரசத்திற்கு வரவேண்டிய நடைமுறைத் திட்ட நிர்ப்பந்தம் (tணீநீtவீநீணீறீ ஜீக்ஷீமீssuக்ஷீமீ) மிக அதிகமாக இருக்கும்; எதிரிகளால் சூழப்பட்ட தலைமை அத்தகைய நிர்பபந்தங்களுக்கு பலியாகும் சாத்தியம் மிக அதிகம்.
இன்னும் நுட்பமான மூன்றாவது காரணம் ஒன்றும் உண்டு. பழைய சமூகத்திலிருந்து புதிய சமூகத்திற்கு மாறிச் செல்வதன் பயனாக தனிநபர் விடுதலை அடையும் போக்கும் நிகழ வேண்டும். வரலாற்றின் போக்கைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் சிந்திக்கும் ஒரு தனிநபராக தன்னுணர்வுடன் அவர் புதிய சமூகத்திற்குள் நுழைகிறார். புரிதல் அதிகரிக்க, அதிகரிக்க புதிய சமூகத்தின் தேவை பற்றிய தனிநபரின் புரிதலும், அதன் மீதான பற்றுறுதியும் அதிகரிக்கின்றது. ஆதலால், பழைய சமூகத்திற்கும் புதிய சமூகத்திற்கும் இடையில் ஒரு அடிப்படையான வித்தியாசம் இதில் இருக்கின்றது: பழைய சமூகம் தனிநபரை நசுக்குகிறது, புதிய சமூகம் தனிநபரை விடுதலை செய்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால், சுற்றி வளைக்கப்பட்ட ஒரு சோஷலிச ஆட்சியில், மீண்டும் நடைமுறைத் திட்ட காரணங்களுக்காக, தலைமை எடுக்கும் முடிவுகள் எளிதில் சட்டமாவதை உறுதிப்படுத்துவதற்காக தனிநபரைக் கட்டுப்படுத்தி வைக்கும் போக்கு வலுவாக இருக்கும். புதிய சமூகத்திற்குள்ளும் இப்படி தனிநபரைக் கட்டுப்படுத்தி வைப்பது, அனைத்து வகையிலும் பிற்போக்குத்தனத்திற்குக் கீழ்ப்படியும் தன்மையை உண்டாக்குவதற்காக பழைய சமூகம் தனிநபரை அடக்கி வைக்கிறதே அதற்கு வலு சேர்க்கக் கூடும்; இது புரட்சியின் முன்னேற்றத்திற்கு தீங்கு செய்யும்.
ஒரு பக்கம் 'ஜனநாயக மத்தியத்துவக்' கட்சியில் கலப்பற்ற மத்தியத்துவத்தை நோக்கிச் செல்லும் போக்கும்,  மறுபக்கம் மக்கள் அரசியல் நீக்கம் மற்றும் செயல் நீக்கம் செய்யப்படும் போக்கும் உள்ளார்ந்த இயல்பாக அமையப் பெற்றிருப்பது பற்றி பலர், குறிப்பாக ரோசா லக்சம்பர்க், குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இந்த விஷயத்தில் யார் என்ன நிலைப்பாடு எடுத்தாலும், பழைய சமூகத்தின் தத்துவார்த்தப் பார்வைகளும், கலாச்சார நடைமுறைகளும் பலவீனப்படுத்தப்படாமல் இருக்கும் வரலாற்றுச் சூழலில் இது நிகழ்வதற்கான வாய்ப்பு மிகவும் அதிகரிக்கும் என்கிற உண்மையை சந்தேகிக்க முடியாது. சிறு உற்பத்தியில் உள்ளார்ந்ததாக இருக்கின்ற முதலாளித்துவப் போக்கு பற்றியும், அது கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடும் என்பது பற்றியும் சீனக் கலாச்சாரப் புரட்சிக்குள் விவாதம் நடந்தது என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம் (அதனால்தான் 'முதலாளிகள் கட்சிக்குள்ளேயே இருக்கிறார்கள்' என்றும், 'தலைமையகத்தின் மீது குண்டு வீசு' என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன). கலாச்சாரப் புரட்சி பற்றி நால்வர் குழுவால் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கண்ணோட்டத்திற்கு மாறாக ஒரு மாற்றுக் கண்ணோட்டத்தை எட்கர் ஸ்நோவிற்கு அளித்த பேட்டியன்றில் சூ என் லாய் தெளிவாக விளக்கியிருந்தார்; பழைய பாரம்பரிய சீனாவிலிருந்து எஞ்சியிருந்த மூடநம்பிக்கைகள், சமூக பிற்போக்குத்தனம், பண்டைய பழக்க வழக்கங்கள், அதாவது 'தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள்' என்று நான் அழைத்தவற்றின் அச்சுறுத்தல் காரணமாக கலாச்சாரப் புரட்சி எழுகின்றது என்றார்.
இந்த இரண்டு கண்ணோட்டங்களும் தனித்தனியானவையும் அல்ல; ஒன்றுக்கொன்று ஒவ்வாதவையும் அல்ல; அதற்கு மாறாக, ஏற்கனவே குறிப்பிட்டபடி, பழைய சமூகம் நீடித்திருப்பதும் புதிய சமூகம் உருத் திரிக்கப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றது. இவற்றில் எதுவும் செம்படையினர் பயனற்ற வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டதை நியாயப்படுத்தும் வாதம் இல்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை; பிற்போக்குத்தனமான கீழ்ப்படிதலைப் போலவே அதற்கு ஒரு மாற்றாக தனிநபர் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய சமூகத்தை நிறுவுவதற்காக தனி நபரை விடுதலை செய்யும் திறன் செம்படைக்கும் இல்லை; பழைய சமூகத்தின் அடிப்படையான சில தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளிலிருந்து முறித்துக் கொள்ளாமல் சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது என்பது சாத்தியமில்லை என்பதை மட்டுமே இங்கே வலியுறுத்துகிறோம். மரபான முதலாளித்துவத்தின் கீழ் நிகழ்ந்ததைப் போல், பழைய சமூகம் அழிக்கப்படுவதன் மூலம் இந்த முறிவு தற்செயலாக நிகழ்த்தப்படாத ஒரு உலகில், புதிய சமூகத்தின் அங்கக அறிவுஜீவிகளின் கலாச்சாரத் தலையீட்டின் மூலம் அது முயற்சிக்கப்பட வேண்டும்.
அத்தகைய தலையீட்டின் நோக்கம் ஆணாதிக்கம், ஒதுக்கிவைத்தல், சிறுபான்மையினர் எதிர்ப்பு (நம்முடைய விஷயத்தில் வகுப்புவாதமும் இதற்குள் அடக்கம்), சாதி அமைப்பு மற்றும் அது போன்றவையும், 'பிறரின்' மீது கடும் வெறுப்பு (பிற நாட்டவர்-இனத்தவர்-மதத்தவர்-இன்னபிற), மற்றும் அனைத்து வகையான குறுகிய உள்ளூர்வாதங்கள் ஆகியவற்றிலிருந்து முறித்துக் கொள்வதாக மட்டுமின்றி, எல்லாவற்றுக்கும் மேலாக, பழைய சமூகத்தில் முடக்கிப் போடப்பட்டிருக்கும் தனிநபரை விடுவிப்பதாக இருக்க வேண்டும். மக்களை அவர்களது இக்கட்டான உண்மை நிலைமையை உணரச் செய்வதன் மூலம் சுரண்டலுக்கு எதிராகச் செயல்படத் தூண்டுவது கலாச்சார தலையிட்டின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அத்துடன், அடக்குறையிலிருந்து தனிநபர் விடுவிக்கப்படுவதற்காகவும், மற்றும் அந்தக் காரணத்தால் மதம், சாதி, பாலின ஒடுக்குமுறைகளை உண்டாக்கும் இயங்குமுறைகளிலிருந்து விடுவிக்கப்படுகின்ற வகையில் தத்துவார்த்தப் புரிதலை தனிநபர் பெறுவதற்கும் பழைய அமைப்பின் தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட வேண்டிய பணியும் அதற்கு இருக்கிறது.

3

முதல் பார்வைக்கு இந்த வாதம் விநோதமாகத் தோன்றலாம். சோஷலிசத்திற்கு மாறிச் செல்ல முயற்சிக்கும் ஒரு சமுதாயத்தின் முற்போக்கு கலாச்சார இயக்கத்தின் நோக்கம் நிச்சயமாக சோஷலிசக் கலாச்சார விழுமியங்களை அறிமுகப்படுத்துவதாகத்தான் இருக்க வேண்டும். இந்த அம்சத்தை நான் ஏன் இன்னும் குறிப்பிடவில்லை? இந்தப் புரிதலை கேள்விக்குள்ளாக்கவே இக்கட்டுரை முயற்சிக்கிறது என்பதுதான் காரணம்.
முந்தைய உற்பத்தி முறைகளை ஒத்தது அல்ல சோஷலிச உற்பத்தி முறை; ஆதலால், சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது என்பது மற்ற உற்பத்தி முறைகளுக்கு மாறிச் சென்ற வரலாற்று அனுபவத்தை மறு பிரதி எடுப்பதாக மட்டும் இருக்க முடியாது. முந்தைய அனைத்து உற்பத்தி முறைகளும் அவை நடப்பிற்கு வந்தபோது மக்கள் எந்த நோக்கத்திற்காக முந்தைய அமைப்பிற்கு எதிராகப் போராடினார்களோ அதற்கும், உண்மையில் அவர்கள் என்ன சாதித்தார்களோ அதற்கும் இடையில் நேரெதிர் வேறுபாடு இருந்ததே அவற்றின் தன்மையாக இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், முந்தைய அனைத்து உற்பத்தி முறைகளின் பலனாக மனிதகுலம் தன்னால் எந்த வகையிலும் கட்டுப்படுத்த இயலாத ஒரு வரலாற்று இயக்கத்திற்குள் சிக்கிக் கொண்டது. அதற்கு மாறாக, சோஷலிசம் வரலாற்று வலையில் மனிதகுலம் சிக்காமல் தப்பிப்பதை உறுதிப்படுத்துகிறது; மக்கள் கூட்டாக மேற்கொள்ளும் வரலாற்றுச் செயல்களின் நோக்கத்திற்கும், அத்தகைய செயல்களின் உண்மையான விளைவுகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவும், மேலும் மேலும் அதிகரிக்கும் அளவும் நிகழ்வுப் பொருத்தம் இருக்கின்றது. மனிதனின் நிலை பற்றிய சரியான தத்துவார்த்தப் புரிதலை அடிப்படையாகக் கொண்ட கூட்டுச் செயல்பாட்டின் மூலம் அது தன்னிச்சையான தன்மையை முடிவற்குக் கொண்டு வருகின்றது. இந்தக் காரணத்திற்காக, சோஷலிசம் தவிர்க்க முடியாதது அல்ல; வரலாறு தன்னுடைய சொந்த இயக்கத்தால் தானே மனிதகுலத்தை சோஷலிசத்தை நோக்கித் தள்ளுவதும் இல்லை. சரியான தத்துவார்த்தப் புரிதலை ஆதாரமாகக் கொண்ட நடைமுறையின் அடிப்படையில் அது திட்டமிட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
எனவே, சோஷலிசத்திற்கான போராட்டம் என்பது ஒவ்வொரு தனிநபரும் மேற்கொள்ளும் தீவிரமான தத்துவார்த்த முயற்சியால் குறிக்கப்படுகிறது; சோஷலிச விழுமியங்கள் அல்லது சோஷலிசக் கலாச்சாரம் என்று அழைக்கப்படும் கூழாங்கற்களால் அவர்களது மனங்கள் நிரப்பப்படுவதைக் குறிக்கவில்லை. 'சோஷலிசக் கலாச்சாரம்' அல்லது 'சோஷலிச விழுமியங்கள்' என்று கொடுக்கப்படுபவற்றை உட்கொள்ள வேண்டும் என்பது உழைக்கும் மக்கள் தாங்களே சமூக மாற்றத்தில் நேரடி பாத்திரம் வகிப்பதற்கு எதிரானதாக இருக்கின்றது; அவர்களை செயலாற்றுபவர்களாக இல்லாமல் செயலின் இலக்குகளாகக் கருதும் அர்த்தம் இதில் தொக்கி நிற்கிறது; இது சோஷலிசத்தின் நோக்கத்தையே தோற்கடிக்கின்றது.
வேறு விதமாகக் கூறினால், சோஷலிசக் கலாச்சாரம் அல்லது சோஷலிச விழுமியங்கள் என்பவை தத்துவார்த்த நடைமுறைகள் மூலம் மக்கள் வந்தடைகிறவையாகும்; இதற்காக இந்த சொற்களின் உள்ளடக்கம் என்னவென்பது பற்றி பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிக் கூறுகளாலும், தத்துவார்த்த நடைமுறையில் ஈடுபட்டுள்ள அரசியல் அமைப்புகளாலும் விவாதங்கள் துவங்கப்பட வேண்டும். ஆனால் மக்கள் மத்தியில் பரப்ப வேண்டிய விஷயங்களாக அவற்றைப் பார்ப்பது ஒரு கருத்தை பொருளாக மாற்றுவதற்கு ஒப்பாகும். சோஷலிசத்தை நோக்கிய முன்னேற்றத்திற்கு உதவுகிறேன் என்கிற பெயரில் அது சோஷலிசத்தை வழிமறித்து தாக்கும். ஆதலால், சோஷலிசக் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்குத் தேவைப்படுவது என்னவென்றால், மக்கள் தன்னுணர்வுடன் தத்துவார்த்த நடைமுறையில் ஈடுபடுகின்ற வகையில் பழைய சமூகத்தின் பிண கனத்திலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுவதாகும்; முன்னர் விவாதிக்கப்பட்டபடி, பழைய சமூகத்தின் ஒடுக்குமுறையிலிருந்து தனிநபர் விடுவிக்கப்படுவதும், பாரம்பரியத்தின் பிண கனத்திலிருந்து பகுத்தறிவு விடுவிக்கப்படுவதும் அதற்குத் தேவைப்படுகிறது.


4

இது வரை சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது பற்றி நான் பேசிக் கொண்டிருந்தேன். சோஷலிசத்திற்கு மாறிச் செல்வதில் ஈடுபடாத, ஆனால் அதற்குப் பதிலாக மிகத் தீவிரமாக முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகள் குறித்து என்ன சொல்ல முடியும்?
இங்கும், இதர மூன்றாம் உலக நாடுகளிலும் வளர்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்தில் வழக்கத்திற்கு மாறான முரண்பாடு இருக்கின்றது. சிறு உற்பத்தியாளர்கள் மீது இந்த முதலாளித்துவம் திணிக்கும் நெருக்கடி ஈவிரக்கமற்றதாக இருக்கும் அதே வேளையில் (கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்), கிட்டத்தட்ட மார்க்ஸ் வகுத்தது போலவே, பணியில் அமர்த்தப்பட்ட கூலித் தொழிலாளர்களின் படையை பெரிதாக்கும் அதன் ஆற்றல் மிகவும் வரம்பிற்கு உட்பட்டதாகவே இருக்கிறது. அதன் விளைவாக, சிறு உற்பத்தியாளர்கள் ஒன்று இன்னும் கடுமையான துன்பத்திலும், பரிதாப நிலையிலும் தங்களது பாரம்பரிய தொழிலில் நீடித்திருக்க வேண்டும் அல்லது நகரங்களுக்குக் குடிபெயர்ந்து உதிரி கூலித் தொழிலாளர்கள் படையில் சேர்ந்து, 'முறைசாராத் துறை' என்று நயமாக அழைக்கப்படும் துறையில் பல்வேறு வகையான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
முதலாளித்துவத் துறையில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அவல நிலையில் உள்ள சிறு உற்பத்தியாளர்கள் தங்களது பாரம்பரியமான தொழில்களில் நீடித்திருக்கும் வரையில், பழைய சமூகத்தை அழிக்க முடியாது. சிறு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை முதலாளித்துவம் அபகரித்துக் கொள்வதும், தாங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவு கூட மறுஉற்பத்தி செய்ய முடியாத நிலைமைக்கு அது சிறு உற்பத்தியாளர்களைத் தள்ளுவதும், மரபான முதலாளித்துவத்தில் போல், பழைய சமூகம் அழிக்கப்படுவதற்கு இட்டுச் செல்வதில்லை. முதலாளித்துவத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்ற வரையில், புதிய சமூகம் உருவாவது தடைப்பட்டிருக்கும்; அதுவும் பழைய சமூகத்தின் தத்துவார்த்தப் பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள் தொடர்வதற்கு உதவும்.
சுருக்கமாகக் கூறினால், முதலாளித்துவ வளர்ச்சி தீவிரமாக இருந்த போதிலும், சிறு உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியாகக் கசக்கிப் பிழியப்பட்ட போதிலும், பழைய சமூகத்தின் தத்துவமும், கலாச்சார நடைமுறைகளும் போதுமான அளவு அழிக்கப்பட்டிருக்காது. இறுதியாக, 'முறைசாராத் துறை வேலை வாய்ப்பு' (இன்பார்மல் செக்டர் எம்பிளாய்மென்ட்) அல்லது 'எப்போதாவது வேலை' (கேஷீவல் ஒர்க்) என்கிற பெயரில் உதிரித் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக, ஒரு கீழ் வர்க்கம் அல்லது பொறுக்கி வர்க்கம் உருவாக்கப்படுகின்றது; அது இனவாத மற்றும் வகுப்புவாத பாசிச தத்துவங்களுக்கு எளிதில் பலியாகிவிடுகின்றது; அல்லது அவர்களை அத்தகைய தத்துவங்களைக் கொண்டுள்ள இயக்கங்களின் முன்னணி தொண்டர்களாக எளிதில் மாற்றிவிட முடியும். ஒரு வகையில் இந்த தத்துவங்கள் 'நவீனமானவையாக' (நிதி மூலதனத்தின் நேரடி ஆதரவைப் பெற்றுள்ள தத்துவங்கள் என்கிற வகையில் அவை நிச்சயமாக நவீனமானவைதான்) இருந்தபோதிலும், பழைய சமூகத்தின் தத்துவார்த்தப் பார்வைகளின் வழிமரபாக வந்தவையாக இருக்கின்றன.
எனவே, முதலாளித்துவம் பாரம்பரியமாக செய்து வந்து கொண்டிருந்த வேலையான, தனிநபரை அவரது சாதி அல்லது மதக் குழுவின் வேர்களிலிருந்து விடுவிப்பதும் கூட இந்தியா போன்ற நாடுகளில் வளரும் முதலாளித்துவத்தால் செய்து முடிக்கப்படாமல் இருக்கின்றது; அதிகமான உள்நாட்டு உற்பத்தியால் அந்த வளர்ச்சியின் தீவிரம் வெளிப்படுத்தப்பட்ட போதிலும் இதுதான் நிலைமை. பழைய சமூகத்திற்கு அடிமைப்பட்டடிருப்பதிலிருந்து தனிநபர் இப்படி முறையாக விடுவிக்கப்படுவது 'நவீனத்துவத்தின்' அடையாளமாக இருப்பதனால், இந்தியாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி அது எவ்வளவு வேகமானதாக இருந்தபோதிலும், அது 'நவீனத்துவத்தைக்' கொணரத் தவறுகின்றது. ஒரு பக்கம் பகட்டான மாபெரும் பேரங்காடிகளும் (சூப்பர் மால்கள்), தேவையைவிடப் பெரிதான வாகனங்களும் மறுபுறம் கப் பஞ்சாயத்துகளும், பெண் கருக் கொலைகளும் அக்கம் பக்கமாக வாழ்கின்ற ஒரு விநோதமான நிலைமையை அது உண்டாக்குகின்றது; அந்த பேரங்காடிகளுக்கு அடிக்கடி வருகிற அல்லது அந்த வாகனங்களை வைத்திருக்கிற அதே நபர்கள் கப் பஞ்சாயத்துகள் மற்றும் பெண் கருக்கொலைகளின் ஆதரவாளர்களாக இருக்கின்றார்கள்.
அத்தகைய நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தும் மரபான முதலாளித்துவத்தின் ஆற்றல் அது பழைய சமூகத்தை அழிக்கும்போது அதன் விளைவாக வேலையின்மையும், போதுமான வேலையின்மையும் (அன்டர் எம்பியாய்மென்ட்) பெருகிவிடாமல் உறுதிப்படுத்துவதற்கான அதன் ஆற்றலைப் பொருத்தே இருக்கின்றது; இந்த ஆற்றல் முதலாளித்துவத்தின் உள்ளியல்பான இயங்குவிசையில் அமையப் பெற்றிருக்கிறது என்று வழக்கமாக மார்க்சிஸ்டுகளால் கூறப்படுகின்றது. ஆனால், இந்தக் கருத்து வரலாற்று நிலைமை சரியாகப் புரிந்து கொள்ள்ளப்பட்டதைச் சுட்டவில்லை என்பது என் கருத்து. சிறு உற்பத்தி அழிக்கப்படுவதாலேயே கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகிவிடவில்லை என்பதற்குக் காரணம் மரபான முதலாளித்துவம் வளச்சியடைந்த நாடுகளிலிருந்து 'புதிய உலகைச்' சேர்ந்த நாடுகளுக்கு மிகப் பெருமளவு மக்கள் குடியேறியதாகும். எடுத்துக் காட்டாக, முதலாம் உலகப் போர் வரையில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் மிதமான தட்பவெப்ப நிலையுள்ள வெள்ளைக் குடியேற்றங்களான அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு ஒவ்வொரு வருடமும் பிரிட்டனில் அதிகரிக்கும் மக்கள் தொகையில் சுமார் பாதி பேர் குடிபெயர்ந்தனர். 19ம் நூற்றாண்டு மத்தியிலிருந்து முதலாம் உலகப் போர் வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பாவிலிருந்து ஐந்து கோடி பேர் இந்த மிதமான தட்பவெப்ப நாடுகளுக்குக் குடிபெயர்ந்தனர்; அங்கு பூர்வகுடிகளை அவர்களது நிலங்களை விட்டு விரட்டி விட்டு, அந்த நிலங்களில் விவசாயம் செய்யத் துவங்கினர்.
அப்படி நிலங்கள் கிடைத்ததும், அதனால் குடிபெயர்வதன் மூலம் ஒப்பீட்டளவில் உயர்வான வாழ்க்கை தரத்தை அனுபவிக்கலாம் என்பதும் தாய்நாட்டில் உள்ள தொழிலாளர்கள் தங்களது முதலாளிகளிடமிருந்து ஊதிய உயர்வு பெற்றதற்குக் காரணமாகும். மற்றும், ஆம், அது பழைய சமூகத்தை அழிப்பதையும், தனிநபரை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதையும் சாத்தியமாக்கியது. முதலாளித்துவத்தின் உள்ளியல்பான வரலாற்று இயங்குவிசை என்று சொல்லப்படுவதன் காரணமாக நடந்தது என்று கூறப்படுவதை சற்று நெருக்கமாகப் பார்த்தால் அது எஞ்சிய உலகின் மீது தனது கட்டுப்பாட்டை நிறுவும் முதலாளித்துவத்தின் ஆற்றலினால் நிகழ்ந்ததாகவே பெரும்பாலும் இருக்கின்றது. இப்போது நாம் விவாதிக்கும் விஷயமும் அத்தகைய ஒரு நிகழ்வின் எடுத்துக் காட்டாகும்.  
ஆதலால், இந்தியா போன்ற நாடுகளில் பழைய சமூகத்திற்கு அடிமைப்பட்டு இருக்கும் தனிநபரை முதலாளித்துவத்தால் விடுதலை செய்ய முடியாமல் இருப்பது, உலகத்தை காலனிமயப்படுத்துவதில் முதலாளித்துவத்திற்கு மேற்கொண்டு வாய்ப்புகள் இல்லை என்கிற உண்மையுடன் தொடர்புடையதாகும். நிலப்புரபுத்துவ சொத்துடமையை மட்டுமின்றி பழைய சமூகத்தையே அழித்த முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாற்றுக் கடமையை முதலாளித்துவம் பொருளாதார ரீதியாக எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும் அதனால் இந்த நாடுகளில் சாதிக்க முடியாது. இந்த இரட்டைக் கடமையை சோஷலிசத்திற்காகப் போராடும் சக்திகள் செய்து முடிக்க வேண்டும்.
ஆதலால், இந்த சக்திகளுடன் தொடர்புள்ள முற்போக்கு கலாச்சார இயக்கம் தன்னுடைய தளத்தில் பணக்கார நிலவுடமை நலன்களுடன் அணி சேர்ந்துள்ள முதலாளிகள் தலைமை வகிக்கும் சுரண்டல் அமைப்பிற்கு எதிராக மட்டுமின்றி, பழைய சமூகத்தின் தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்; சாதி, ஆணாதிக்கம், வகுப்புவாதம் மற்றும் பழைய சமூகத்தின் பாரம்பரியங்கள் என்றழைக்கப்படுபவற்றினால் நடக்கும் அனைத்து வகையான தனிநபர் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து போராட வேண்டும். இந்த பிந்தைய போராட்டம் இன்றிலிருந்து புதிய சமூகம் நிலைநிறுத்தப்படும் வரையில் நீடிக்கும் நிரந்தரமான போராட்டமாகும். ஆனால் அத்தகைய ஒரு சமூக அமைப்பு நிறுவப்படுவது முடிவுற்ற ஒரு விஷயமல்ல என்பதாலும், ஒரு குறிப்பிட்ட தேதியில் முடிவுறுவதில்லை என்பதாலும், ஆனால் அது ஒரு முடிவற்ற நிகழ்போக்கு என்பதாலும், இந்த தத்துவார்த்தப் பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு நிரந்தரமான கலாச்சாரப் புரட்சியாக அமைகிறது.
சோஷலிசத்திற்கு மாறிச் செல்லும் புரட்சிகர போக்கின் ஒரு பகுதியாக ஒரு நாடு தற்கால உலக ஒழுங்கமைப்பிலிருந்து தன்னை துண்டித்துக் கொள்வது என்கிற எண்ணத்தையே பல மேற்கத்திய மார்க்சிய அறிஞர்கள் முற்றிலும் நிராகரிக்கிறார்கள். அத்தகைய துண்டித்துக் கொள்ளலுக்கு தத்துவார்த்த அடிப்படையாக இருக்க வேண்டிய தேசியவாதம் சம்பந்தப்பட்ட தேசத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் என்பதாலும், அதனால் பிற்போக்குத்தனமானதாக இருக்கக் கூடும் என்பதாலும் அவர்களது பார்வையில் சந்தேகத்திற்கு உரியதாக இருந்தது. (இந்தக் கருத்தை வலியுறுத்த ஸ்லோபடான் மிலோசவிச்-முன்னாள் செர்பிய ஜனாதிபதி-மற்றும் இதரர்கள் வழக்கமாக உதாரணம் காட்டப்படுகிறார்கள்). ஆனால், சர்வதேச நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழான உலகமயம் (இதைச் சுருக்கமாகக் கூறுவதற்கு 'ஏகாதிபத்திய உலகமயமாக்கல்' என்கிற சொல் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது) எதிர்க்கப்பட வேண்டுமானால், உழைக்கும் மக்களின் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேசப் போராட்டம் இல்லாத நிலையில், அத்தகைய போராட்டங்கள் ஒரு தேசத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதைத் தவிர வேறு மாற்று ஏதுவும் இல்லை; அதனால், உலக ஒழுங்கமைப்பிலிருந்து துண்டித்துக் கொள்வது நிகழ்ச்சி திட்டத்தின் முக்கிய பகுதியாக இருப்பதற்கும் வேறு மாற்று இல்லை. உண்மையில், பல்வேறு நாடுகளில் நடக்கும் தொழிலாளர்களின் போராட்டங்களில் சிறிதும் ஒருங்கிணைப்பு இல்லை; விவசாயிகளுடைய போராட்டங்களுடனான ஒருங்கிணைப்பு என்கிற கேள்வி எழவே இல்லை.
ஏகாதிபத்திய உலகமயமாக்கலையும், அதன்  அடிப்படையான சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டுமானால் அதற்காக இருக்கும் ஒரே ஆயுதம் தனித்தனி நாடுகளில் தொழிலாளர்-விவசாயிகள் கூட்டணியின் மூலம், அந்தந்த நாடுகளுக்குள் சொத்துறவுகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக உலக ஒழுங்கமைப்பிலிருந்து துண்டித்துக் கொள்ளும் திட்டத்துடன் போராட்டங்களை நடத்துவதுதான். என்றபோதிலும், இதைக் கூறுவதனால், மேற்கத்திய மார்க்சிஸ்டுகள் எழுப்பிய அச்சங்களை புறந்தள்ளுகிறோம் என்று அர்த்தமல்ல. ஒரு நாட்டின் தனிமையால் அதன் புரட்சிகர மாற்றம் மூழ்கடிக்கப்படும் சாத்தியத்தை அத்தகைய துண்டித்துக் கொள்ளும் நிகழ்போக்கு தன்னுள்ளேயே கொண்டிருக்கின்றது. அதாவது, அது பழைய சமுதாயத்தில் வேர் கொண்டுள்ள பிற்போக்குச் சார்புகளை பலப்படுத்துவதில் முடியலாம். இதை வெற்றி கொள்வது சுலபமல்ல; ஆனால், அத்தகைய எந்த ஒரு புரட்சிகர நடைமுறையிலும், நிரந்தரமான கலாச்சாரப் புரட்சியின் ஒரு பகுதியாக, முற்போக்கு கலாச்சார இயக்கங்கள் ஒரு முக்கிய கூறாக அமைகின்றன.

குறிப்புகள்:
1. வேரா ஜாசுலிச்சிற்கு மார்க்ஸ் எழுதிய கடிதம், முதல் நகல்.
2. பால் ஏ. பாரன், பொலிடிக்கல் எகானமி ஆப் குரோத், மன்த்லி ரிவீவ்யூ பிரஸ், நியூயார்க், 1957.

(நன்றி: சோஷியல் சயின்டிஸ்ட், இதழ் எண்: 462-463)    
   
--------------------------------------------------------------------        

   
   

 
       
 


Wednesday, January 18, 2012

மாட்டுக் கறியும் சமூக நீதியும்



திராவிட சமூகநீதி அரசியல் அல்லது தமிழர் சமூக நீதி அரசியல் பார்ப்பனர்கள் வகிக்கும் சமூக மேலாதிக்க நிலையை பார்ப்பனரல்லாத மேல்சாதியினர் கைப்பற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக நக்கீரன் ஏடு 'மாட்டிறைச்சி உண்ணும் மாமி நான்' என்கிற கட்டுரை இருக்கிறது.
அதாவது சாதி அமைப்பு பற்றியும், அதன் கொடுமைகள் பற்றியும் வாய்கிழியப் பேசும் இவர்கள் பார்ப்பனர்களின் இடத்தை தாங்கள் கைப்பற்ற வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த உயர்ந்த நோக்கங்களும் கொண்டவர்கள் அல்ல. உயர் நிலையை தாங்கள் அடைந்தால் போதும், சாதி அமைப்பு அப்படியே நீடிக்க வேண்டும், அதில் வேறு எந்த மாற்றமும் தேவையில்லை என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
இல்லை என்றால் மாட்டிறைச்சி சாப்பிடுவதை இழிவாகச் சித்தரிப்பார்களா? பார்ப்பனரான ஜெயலலிதா மாட்டிறைச்சி சாப்பிடுவார் என்பதை ஒரு இழிவு போல் இவர்கள் சித்தரிக்கிறார்கள் என்றால் மாட்டிறைச்சி உண்பவர்களை இவர்கள் இழிவாகக் கருதுகிறார்கள் என்றுதானே பொருள்?
மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் யார்? தாழ்த்தப்பட்டவர்கள், மதச் சிறுபான்மையினர், பழங்குடியினரில் ஒரு பகுதியினர்,  பிற்படுத்தப்பட்டோரில் ஒரு பகுதியினர். அதாவது இந்துத்துவம் எதை இழிவு என்கிறதோ அதை இவர்களும் இழிவு என்கின்றனர்.
நக்கீரன் ஆசிரியர் கோபால் பெரியார் விருது பெற்றவர். (நக்கீரன் வெளியீடாக பாலஜோதிடம் எனும் மூடநம்பிக்கை இதழ் வெளிவருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்). அவரது இதழில் வெளிவந்திருக்கும் இக்கருத்தை  ஆத்ரிப்பவர்களில் பலர் பெரியார் பெயரை அடிக்கடி உச்சரிப்பவர்கள். பகிரங்கமாக மாட்டுக்கறி சாப்பிடும் இயக்கங்களை நடத்தியவர் பெரியார்.
உண்மையிலேயே இவர்கள் பகுத்தறிவுவாதிகளாகவும் சாதி ஒழிப்புவாதிகளாகவும் இருந்திருந்தால் மாட்டுக் கறி தின்பதற்காக ஜெயலலிதாவைப் பாராட்டியிருக்க வேண்டும். (ஜெயலலிதாவோ இதைத் தன் மீதான அவதூறாகக் கருதியிருக்கிறார். வழ்க்குகளும் போராட்டங்களும் அதைத்தான் சுட்டுகின்றன). ஆனால், இதை அவருக்கு எதிரான ஒரு அரசியல் கருத்தாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். அதன் மூலம் தாங்களும் சாதி, மத ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை இழிவானவர்களாகவே தாங்களும் கருதுவதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சாதியப் படிநிலையில் மேல் நிலையை அடைவதற்கான போராட்டம் உடமை சாதிகளிடையே பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் ஒன்றுதான். சில சமயம் பார்ப்பனர்கள் மேலாதிக்க நிலயை தக்க வைத்துக் கொள்வதும், சில சமயம் இதர மேல்சாதிகள் அதைக் கைப்பற்றுவதும் என வரலாறு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களையும், மதச் சிறுபான்மையினரையும் பொருத்த வரையில் இந்த மேல்சாதிகள் ஒரே கருத்தையே கொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொருத்த வரையில் அதைப் பார்ப்பனீயம் என்றோ அல்லது சாதியம் என்றோ அல்லது சைவம் என்றோ அழைக்கலாம்?
அதைப் பார்ப்பனீயம் என்றே கூறினாலும் அதை இந்த சமூக நீதி மோசடிக்காரர்கள் பின்பற்றுகிறார்கள் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆம், உடமை வர்க்கங்களுக்கு-அவை எந்த சாதியைச் சேர்ந்தவையாக இருந்தாலும்-சாதீயம் உகந்ததாக இருக்கிறது.  மூட நம்பிக்கை உகந்த்தாக இருக்கிறது. திராவிடப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் சாய்ப்பாவின் காலில் விழுவதும், அவர்கள் நடத்தும் ஊடகங்கள் ராசி பலன், ஜோதிடம் ஆகியவற்றைப் பரப்புவதும் அதைத்தான் உறுதி செய்கின்றன.

Monday, January 2, 2012

சசிகலா நீக்கமும் சமூக நீதியும்




அசோகன் முத்துசாமி

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், அவரது நீண்ட கால நண்பருமான சசிகலா அதிமுகவை விட்டு நீக்கப்பட்டதற்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களைக் கூறுகின்றனர்; அல்லது கற்பிக்கின்றனர். அதிகாரபூர்வமாகக் காரணம் எதுவும் கூறப்படவில்லை என்றாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தப் பதவியும் வகிக்காத சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்ததுதான் காரணம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.
ஆனால், உண்மையான காரணம் என்னவென்று ஆராய்வது நமது நோக்கமல்ல. இதுதான் காரணம் என்று சிலரால் கற்பிக்கப்படும் ஒரு காரணத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு நீண்ட கால உண்மையை வெளிப்படுத்துவதுதான் நமது நோக்கம்.
சசிகலா குடும்பத்தினர் முதல்வர் ஜெயலலிதாவுடன் தங்களுக்கிருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி கட்சி விவகாரங்களில், ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டார்கள்; ஊழல் செய்தார்கள்; மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தார்கள். ஜெயலலிதாவின் மீது விசாரணையில் இருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிவரும்; அப்போது தங்களுடைய ஆள் ஒருவரை முதல்வராக-தற்காலிக முதல்வராக ஆக்கிவிடலாம்- என்று சசிகலா குடும்பத்தினர் திட்டமிட்டனர்; அதனால் கோபமடைந்த ஜெயலலிதா சசிகலா  குடும்பத்தினர், மற்றும் விசுவாசிகளை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்; நீக்கிக் கொண்டிருக்கிறார். இது ஒரு கருத்து. தேர்தல்களில் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள், வெற்றிக்குப் பின்னர் யார் யார் மந்திரிகள், முக்கியமான பதவிகளில் யார் யார் அதிகாரிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட விவகாரங்களிலும் சசிகலா கும்பல் தலையிட்டது என்கிற குற்றச்சாட்டும் இதனுடன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
சரி, சசிகலாவும் அவரது உற்றத்தாரும் சுற்றத்தாரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுவிட்டனர். உடனடியாக ஒரு கூட்டம் இது ஒரு பார்ப்பன சதி என்கிறது. சோ ராமசாமி இதற்குப் பின்னால் இருக்கிறார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சசிகலா அன்ட் குடும்பத்தை ஜெயலலிதாவிடம் இருந்து பிரிப்பதன் மூலம் அந்த நிழல் அதிகார மையத்தை தானும் தன் சாதியைச் சேர்ந்தவர்களும் கைப்பற்ற அவர் தீட்டிய சதி என்று விமரிசிக்கிறார்கள். சசிகலா ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவரையில் ஏதோ சமூக நீதி காப்பாற்றப்பட்டு வந்தது என்பது போல் இருக்கிறது இந்த வாதம். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களெல்லாம் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பது போல் இருக்கிறது இந்த வாதம். இவர்கள் சமூகநீதிக் கோட்பாட்டையே நகைப்பிடமாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.
சசிகலா கூட இருக்கும்போதுதான் ஜெயலலிதா பார்ப்பன ஆதரவு நடவடிக்கைகள் பலவற்றை எடுத்தார். ஆடு கோழி பலியிடத் தடைச்சட்டம், பாஜகவுடன் உறவு, நரபட்சிணி மோடியுடன் நட்பு போன்றவை சில உதாரணங்கள். சமச்சீர் கல்வியைப் பொருத்த வரையில் பாடத்திட்ட அடிப்படையிலான மாற்றங்கள் என்கிற வகையில் பார்ப்பன தன்மையும், பொதுவாக அதை ரத்து செய்வது அல்லது நிறுத்தி வைப்பது என்கிற அடிப்படையில் கல்வி வியாபாரிகளின் நலன் காக்கும் தன்மையும் கொண்டது அந்த முடிவு. ஏனெனில், கல்வி வியாபாரிகளில் பெரும்பாலோர் பார்ப்பனரல்லாத மேல்சாதிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த முடிவுகள் எல்லாம் பார்ப்பன சோவின் ஆலோசனைப்படி எடுக்கப்பட்டன என்று யாரேனும் வாதிடலாம். நமது கேள்வி என்னவெனில் சசிகலா அதை ஒன்றும் தடுக்கவில்லையே என்பதுதான். சசிகலாவின் நோக்கம் சமூக நீதியைக் காப்பதல்ல என்பது கண்கூடு. ஆனால், அவரது நீக்கத்திற்கு சிலர் சமூக அநீதிச் சாயம் பூசுவது ஏன்?
வேட்பாளர் தேர்வு, மந்திரிகள் நியமனம், அதிகாரிகள் நியமனம் போன்ற எதையும் காசு வாங்காமல் செய்ததில்லை சசிகலா. அதன்றி சொத்துக்களை மிரட்டி வாங்குவது போன்ற அராஜகங்கள் தனிக்கதை. அப்படிப்பட்ட சசிகலா நீக்கப்பட்டதற்கு அக்கட்சியின் சாமானியத் தொண்டர்களோ, பொது மக்களோ எள்ளளவும் வருத்தப்படவில்லை. கட்சிக்காரர்கள் மகிழ்ச்சியடைந்திருந்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அல்லது சசிகலா நீக்கப்பட்டிருப்பதால் அதிமுக அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளில் மாற்றம் எதுவும் வந்துவிடப் போவதில்லை.
இப்போது அந்த நிழல் அதிகார மையத்தை பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொள்கிறா£கள் என்றே வைத்துக் கொள்வோம். பார்ப்பனர்களை அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்களாக ஆக்குகிறார்கள், மந்திரிகளாக ஆக்குகிறார்கள், அதிகாரிகளாக ஆக்குகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.
அதிமுக அரசாங்கத்தின் கொள்கைகளில் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. அது புதிதாக மக்கள் விரோத அரசாங்கமாக ஆகிவிடப் போவதில்லை. அது ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறது. அதிகபட்சமாக அதிகாரிகள் அளவில் பார்ப்பன சாதியில் பிறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம். அவ்வளவுதான். அரசியல் ரீதியாக ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டு வைக்கலாம். சசிகலா இருக்கும்போதே கூட்டு வைத்தவர்தான். சசிகலா இருக்கும்போதுதான் மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டார்.
எப்படியாயினும் அடிப்படை மாற்றம் எதுவுமில்லை எனும் நிலையில் சசிகலாவின் நீக்கத்தை பார்ப்பன சூழ்ச்சி என்று எதிர்ப்பதன் மூலம் இவர்கள் தங்களுக்கு மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லை என்பதை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அந்த அதிகார மையம் தங்கள் கையைவிட்டு போய்விட்டதே என்று புலம்புகிறார்கள். இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. சமூகநீதிக் கோட்பாட்டை பார்ப்பனரல்லாத மேல்சாதியினர் பயன்படுத்திக் கொள்வது பார்ப்பனர்கள் வகிக்கும் ஆதிக்க நிலையைக் கைப்பற்றுவதற்குத்தானே தவிர, அதற்கு சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற உயரிய நோக்கங்கள் வேறு எதுவுமில்லை. இது புதிய விஷயமும் அல்ல.
இடஒதுக்கீடு கோரிக்கைக்குக் கொடுக்கப்படும் அழுத்தமும், அதில் காட்டப்படும் தீவிரமும் சாதி ஒழிப்பிற்கோ, தீண்டாமை ஒழிப்பிற்கோ காட்டப்படுவதில்லை. வெறும் உதட்டுச் சேவை செய்தோடு சரி. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தலித்துகளின் மீதான வன்கொடுமையும், அடக்குமுறையும் தொடர்கதையாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அக்கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும்போது அரசு இயந்திரங்களே அத்தகைய அடக்குமுறைகளில் ஈடுபடுகின்றன. 1998ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடந்த தாமிரபரணி படுகொலையும், 2011 பரமக்குடி படுகொலையும் இரு உதாரணங்கள். (பரமக்குடி படுகொலைகள் பற்றி திமுக, பாமக, மதிமுக போன்ற பார்ப்பனரல்லாத மேல்சாதியினரின் நலன்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை). இன்றும் கூட தலித்துகள் வழிபாட்டு உரிமைக்காக ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கின்றது. அவை சில சமயம் வன்முறை கொண்டு அடக்கவும் படுகின்றன. ஆனால், இத்தகை போராட்டங்களில் தலித் கட்சிகளின் பங்கு சொற்பமே.
சற்று யோசித்து பாருங்கள். திமுக, மதிமுக, பாமக போன்ற சமூக நீதி பேசும் கட்சிகள் சாதி ஒழிப்பிற்காகவும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும் தலித் கட்சிகளையும், இடதுசாரிகளையும் சேர்த்துக் கொண்டு களத்தில் இறங்கினால் அது நிச்சயமாக சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருமா இல்லையா? (ஆனால், இடதுசாரிக் கட்சிகள்தான்-குறிப்பாக, மார்க்சிஸ்டுகள்- தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன).
சுருக்கமாகச் சொன்னால், பெரியாரின், மற்ற தலைவர்களின் இடஒதுக்கீடு கோரிக்கைகளை ஆதரித்த பார்ப்பனரல்லாத மேல்சாயினர் அவர்களது சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கோரிக்கைகள் அல்லது இலட்சியங்கள் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம், அவர்களது நோக்கம் அதிகாரத்தை, ஆதிக்க நிலையைக் கைப்பற்றுவது என்பதைத் தவிர வேறில்லை.

--------------------------------------------------------3.1.12
   


Saturday, November 19, 2011

மீண்டும் காலனியாக்கப்பட்ட லிபியா

















   

அய்ஜாஸ் அகமது

தமிழில்: அசோகன் முத்துசாமி

2001 அக்டோபரிலிருந்து 2011 அக்டோபர் வரை காபூல் முதல் திரிபோலி வரையில் பத்தாண்டுகளில் நடத்தப்பட்ட ஈவிரக்கமற்ற புவிக் கோள யுத்தத்தில் இந்துகுஷ் மலையிலிருந்து ஆப்பிரிக்காவின் மத்திய தரைக்கடல் கரையின் வடக்கு முனை வரையிலான மிகப் பரந்த பரப்பில் உள்ள நாடுகள் பாழாக்கப்பட்டன; தலைநகரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. அரபு உலகத்திற்கு உள்ளேயே இந்த அமெரிக்க-ஐரோப்பிய நரபட்சிணிகளின் அதி தீவிர ஏகாதிபத்தியத் தாக்குதல் இன்னும் சிரியா வரையிலும் செல்லலாம்; எதிர்காலத்தில் ஏதோ ஒரு தேதியில் அதற்கும் அப்பால் ஈரானுக்கும் செல்லலாம். எப்படியாயினும் இப்போதைக்கு நேட்டோ வாடிக்கையாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களால் லிபியா ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது அண்டை நாடுகளான டுனிஷியாவிலும் எகிப்திலும் முன்னர் இவ்வருடத்தில்  பற்றவைக்கப் பட்டதிலிருந்தே அணைக்க முயற்சிக்கப்பட்டு வந்த கலக நெருப்பு வென்றடக்கப்பட்டதைக் குறிக்கிறது. எனினும், ஆப்பிரிக்காவின் பெரும் பகுதிக்கு இது அமெரிக்க-ஐரோப்பிய கூட்டமைப்பு தொடுக்கும் ஆக்கிரமிப்பு யுத்தத்தின் மற்றுமொரு துவக்கமாக மட்டுமே இருக்கலாம்; அது 19ம் நூற்றாண்டின் இறுதியில் பெர்லினில் புனிதப்படுத்தப்பட்ட பிரபலமான 'ஆப்பிரிக்காவிற்கான யுத்தத்தை' விட இன்னும் மோசமாக அக்கண்டத்தை நாசமாக்கலாம். (ஆப்பிரிக்காவிற்கான யுத்தம் அல்லது ஆப்பிரிக்காவிற்கான போட்டி என்பது 1881லிருந்து 1914 வரையில் ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்காவின் மீது படையெடுத்ததையும், அதன் பகுதிகளைக் கைப்பற்றியதையும், காலனியாக்கியதையும் குறிக்கிறது-மொர்).

மனிதாபிமான ரீதியாகத் தலையிடுதல்

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயராலும், மனித உரிமைகளின் பெயராலும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம், அணுஆயுதப் பரவலைத் தடுப்பது மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் பெயரால் இராக் மீது படையெடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட மனித உரிமைகளின் பெயரால் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்ட முதல் நாடு லிபியாதான். லிபியாவில் மோதல்கள் துவங்கிய மிக ஆரம்ப நாட்களில் அதிபர் பராக் ஒபாமா பின்வருமாறு தடாலடியாகக் கூறினார்: 'நேட்டோ ஒரு நாள் தாமதித்தித்தால் கூட, பெங்காஷி நகரத்தில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள்; அது அப்பிராந்தியம் முழுவதும் எதிரொலித்து உலகத்தின் மனசாட்சியைக் களங்கப்படுத்தியிருக்கும்'. ஒபாமாவின் மூத்த உதவியாளர்கள் நடக்கவிருந்த படுகொலை ஒரு லட்சம் பேரின் மரணத்திற்கு இட்டுச் சென்றிருக்கும் என்று கூறினார்கள்; இதுதான் அமெரிக்காவின் தொலைக் காட்சிகளில் வெறுப்பேற்றும் வகையில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது; ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தைப் பெறுவதற்காக மனித உரிமைகள் அடிப்படையிலான தலையீடு என்பது விவாதிக்கப்பட்ட அதிகார மையங்களிலும் மீண்டும் மீண்டும் இதுதான் கூறப்பட்டது. இது ஒரு வெட்கங்கெட்ட பொய்யாகும்; இராக் அணுஆயுதங்களைத் தயாரிக்கிறது என்று ஒபாமாவிற்கு முந்தைய அதிபர் ஜார்ஜ் புஷ் கூறிய அச்சுறுத்தும் பொய்யைப் போன்றதே ஆகும் இது. இத்தகைய தவறான தகவல்களின் அடிப்படையில்தான் மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை என்கிற இரண்டகமான கோட்பாட்டைப் பயன்படுத்தி பாதுகாப்பு கவுன்சிலில் 1970 மற்றும் 1973ம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன; ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளின் மீது படையெடுப்புகள் ஏற்கனவே நடந்து கொண்டிருந்த 2005ல்தான் ஐநாவின் கடமைகள் பட்டியலில் இது சொருகப்பட்டது.
அந்த வேளையில்தான் புஷ் நிர்வாகம் ஐநா உள்பட சர்வதேச அரங்கில் தனக்கு பின்வரும் உரிமைகள் இருப்பதாகக் கூறிக் கொண்டிருந்தது: 1). இந்த பயங்கரவாத யுகத்தில் தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய நாடு என்று அமெரிக்கா கருதுகின்ற எந்த நாட்டின் மீதும் முன்னெச்சரிக்கையாக ராணுவத் தாக்குதல் நடத்தும் உரிமை அமெரிக்காவிற்கு இருக்கிறது; 2) பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நிலைமையில் ஜெனிவா ஒப்பந்தத்தின் பல்வேறு பண்புக் கூறுகள் இனியும் பொருந்தாது. இந்த முன்னெச்சரிக்கை தாக்குதல் எனும் சொல்லாடலுக்கு மனித உரிமைகள் அடிப்படையிலான தலையீடு என்கிற வடிவத்தில் பேரரசின் தயாள குணம் எனும் சொல்லாடல் மூலம் பின்னர் வலு சேர்க்கப்பட்டது. இப்போதைய கூற்று என்னவென்றால், எந்த ஒரு இறையாண்மை உள்ள நாட்டிலும் மக்கள் படுகொலை அல்லது இனப்படுகொலை நடக்கப் போகிறது என்று கருதினாலும் அந்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் உரிமை 'சர்வதேச சமுதாயத்திற்கு' (அமெரிக்க-ஐரோப்பிய சக்திகள் வரையறுக்கின்ற சர்வதேச சமுதாயம்) இருக்கிறது என்பதாகும். கடந்த மார்ச் மாதம் மூன்றாவது வாரம் நேட்டோ படைகள் லிபியாவின் மீது குண்டு வீச்சு தாக்குதலைத் துவங்கின; ஐநா சபையின் வரலாற்றிலேயே மனித உரிமைகள் அடிப்படையிலான தலையீடு என்கிற கோட்பாட்டின்படி அதனால் அனுமதிக்கப்பட்ட முதல் ராணுவத் தாக்குதல் அதுதான். 'இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்.....லிபியா ஒரு நீதி சாஸ்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது....பிரான்ஸ், ஐரோப்பா, மற்றும் உலகத்தின் அயலுறவுக் கொள்கையில் இது ஒரு முக்கியமான திருப்பு முனையாகும்' என்று பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி அடித்துக் கூறியது அவருக்கே உரிய வகையில் சரிதான்.
பெங்காஷியில் ஒரு லட்சம் பேர் படுகொலை செய்யப்படவிருக்கிறார்கள் என்ற ஒபாமாவின் கூற்றுக்கு நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் தென்படவில்லை; போரின் ஆரம்ப கட்டங்களில் கடாபியின் படைகளால் கைப்பற்றப்பட்ட கலகக்காரர்களின் நகரங்களில் படுகொலைகள் எதுவும் நடக்கவும் இல்லை. அதற்கு மாறாக, நேட்டோவின் கூலிப்படைகளால் படுகொலைகள் நடத்தப்பட்டிருக்கின்றன என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. லிபியாவில் குடியிருந்த கறுப்பு ஆப்பிரிக்கர்களில் சுமார் மூன்று லட்சம் பேர் லிபியாவை விட்டு வெளியேற்றப்பட்டனர் என்று நைஜர், மாலி மற்றும் சாட் போன்ற அண்டை நாடுகள் தெரிவிக்கின்றன; நேட்டோவின் உள்ளூர் கூட்டாளிகளும், வாடிக்கையாளர்களும் நேட்டோவின் 40000க்கும் மேற்பட்ட குண்டு வீச்சுகளின் நாசகரமான பாதுகாப்பில் திரிபோலி நோக்கி முன்னேறியபோது இது நிகழ்ந்தது. அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்த அகதிகளையும், தொழிலாளர்களையும் தன்னுடைய நாட்டின் விரிவடைந்து கொண்டிருந்த பொருளாதாரத்தின் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக கடாபியின் ஆட்சி வரவேற்றிருந்தது; அந்த மூன்று லட்சம் பேர் வெளியேற்றப்பட்டது  மட்டுமின்றி, லிபியாவைச் சேர்ந்த கறுப்பின மக்களே படுகொலை செய்யப்பட்டனர் என்பதற்கு நம்பகமான தகவல்கள் இருக்கின்றன. இந்த சூறையாடலின் அளவு இன்னும் அறுதி செய்யப்படவில்லை; ஆனால், ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சிலுடன் சேர்ந்து நேட்டோ கட்டவிழ்த்துவிட்ட இந்த யுத்தத்தால் 50000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது ஏற்கனவே தெளிவு; ஐந்து லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர்;  பெரும்பாலும் நேட்டோவிடம் ஆயுதம் பெற்ற கலகக்காரர்களினால்தான் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; அவர்கள்தான் இப்போது அந்த நாட்டின் அரசாங்கமாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். பாதுகாப்புக் கவுன்சிலோ அல்லது நேட்டோ படைத்தளபதிகளோ அல்லது அமெரிக்க வரலாற்றில் கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபரும், ஒரு கென்ய தந்தைக்குப் பிறந்தவருமான ஒபாமாவோ கூட இந்த நிராதரவான, பெரும்பாலும் கறுப்பின ஆப்பிரிக்க மக்களைப் பாதுகாப்பது தங்களது பொறுப்பு என்று நினைக்கவில்லை; நைஜீரியாவின் அமெரிக்க ஆதரவு அதிபர் உள்பட பல்வேறு ஆப்பிரிக்க அரசுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்றபோதிலும்.
நமது காலத்தின் மனித உரிமைகள் பற்றிய ஜனநாயகச் சொல்லாடலின் கொடிய அம்சங்களில் ஒன்று அடுத்தடுத்து இந்த முக்கண்டத்தின் (ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா) இறையாண்மை உள்ள நாடுகளின் உள் விவகாரங்களில் ஏகாதிபத்தியத் தலையீட்டை நியாயப்படுத்துவதற்கு இந்தக் கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது என்பதாகும்; இது ஐநா சாசன விதிகள் மற்றும் தேச அரசுகள் பற்றிய வெஸ்ட்பாலியன் ஒழுங்கமைப்பு (பிரஷ்யாவின் ஒரு பகுதியான வெஸ்ட்பாலியனில் 1648ம் ஆண்டு நாடுகளின் 'நிலப்பரப்பு முழுமை' மற்றும் 'உள்நாட்டு நிர்வாகக் கட்டமைப்புகளில் அந்நியருக்கு இடமின்மை' ஆகிய கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேச அரசுகள் குறித்த ஒப்பந்தம்-மொர்)   ஆகியவற்றை அப்பட்டமாக மீறுவதாகும்; அது மட்டுமின்றி, இன்னும் அடிப்படையாக, நேற்றைய வருடங்களின் காலனியப் பேரரசுகளை அகற்றுவதற்காக நடத்தப்பட்ட காலனிய எதிர்ப்புப் போராட்டங்களின் உணர்வுகளையும், வழக்கங்களையும் அப்பட்டமாக மீறுவதாகும். ஒரு சுதந்திர தேசத்தின் பிரஜைகளாக இருப்பதற்கான உரிமை அந்நிய தலையீடு இன்றி ஒரு சொந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையிலிருந்து பிரிக்க முடியாததாகும். கிட்டத்தட்ட லத்தீன் அமெரிக்காவின் ஒவ்வொரு நாட்டிலும் கடந்த ஐம்பதாண்டுகளில் மக்கள் மிகக் கொடூரமான சர்வாதிகாரங்களை எதிர்த்துப் போராடியிருக்கின்றனர்; ஆனால், அந்நியத் தலையீட்டை அவர்கள் எப்போதும் கேட்டதேயில்லை. அதற்கு மூன்று எளிமையான காரணங்கள். 1) மக்களுக்கு மட்டுமே தங்களது அரசாங்கங்களை மாற்றுவதற்கான உரிமை இருக்கின்றது; 2) கடாபி, சதாம் உசேன் உள்பட ஏகாதிபத்தியத்துடன் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கூட்டு சதி செய்யாத ஒரு சர்வாதிகாரியைப் பார்ப்பது கடினம்; 3) ராணுவத் தலையீடு என்பது எப்போதுமே விதிவிலக்கின்றி பலமிக்கவர்கள் பலவீனமானவர்களுக்கு எதிராகத் தலையிடுவதாகும்; விதிவிலக்கின்றி எப்போதுமே தலையிடுபவர்களின் நலன்களுக்காகவே தலையீடு நடக்கின்றது.
இந்த அடிப்படையான கோட்பாட்டின்படி பார்த்தால், கடந்த காலத்தில் சதாம் உசேனினுடைய ஆட்சியின் தன்மைக்கும் தலையீட்டிற்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அது போலவே இன்று கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கும் தலையீட்டிற்கும் சம்பந்தம் இல்லை. எதிர்காலத்தில் படையெடுப்பு நிகழ்வதாக இருந்தால், அது போலவே சிரியாவின் பசார் அல் அசாத் மற்றும் ஈரானின் அகமதிநிஜாத் ஆகியோரின் சர்வாதிகாரப் போக்கிற்கும் படையெடுப்பிற்கும் சம்பந்தம் இருக்காது. கடாபி ஆட்சியின் முரண்பட்ட தன்மையைப் பற்றி பின்னர் பார்ப்போம்; கடாபி ஒரு வகையான தாராளவாத ஜனநாயகவாதி என்று யாரும் வாதிடப் போவதில்லை. என்றபோதிலும், ஆப்பிரிக்க மற்றும் அரேபிய நாடுகளின் பெரும்பாலான ஆட்சியாளர்களைவிட அவர் ஒன்றும் சர்வாதிகாரி அல்ல என்பதைச் சொல்ல வேண்டும்; குறிப்பாக, சவூதி அரேபியாவிலும், வளைகுடாவின் மன்னராட்சிகள் முழுவதிலும் உள்ள மேற்குலகின் நண்பர்கள். அவருடைய எதேச்சாதிகாரம் மூர்க்கத்தனமாக இருந்தது உண்மைதான். என்றாலும், லிபிய மக்களின் நல்வாழ்வு என்கிற கண்ணோட்டத்திலிருந்து விஷயங்களைப் பார்த்தால், எதேச்சாதிகாரியாக இருந்தபோதிலும் சதாம் உசேன் கிழக்கு அரேபியாவின் மிகவும் முன்னேறிய சமூக நல அரசை நிர்மாணித்தது போல், ஆப்பிரிக்காவின் மிகவும் முன்னேறிய சமூக நல அரசை கடாபி நிர்மாணித்தார் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். சமூக நல அரசை அகற்றுவதும், தேசியச் சொத்துக்களை தனியார்மயமாக்குவதும், பெரு முதலாளிகளின் சொத்தாக மாற்றுவதும்தான் உண்மையில் இந்த மனித உரிமைகள் ஏகாதிபத்தியத்தின் அருவருப்பான மர்மஸ்தானமாக இருக்கிறது. அத்தகைய தலையீட்டிற்கான காரணம் மனித உரிமைகள் பிரச்சனைதான் என்பது சற்றேனும் உண்மையாக இருந்தால், நியாயமாக சவூதி அரேபியாதான் முதல் இலக்காக இருந்திருக்க வேண்டும். பாலஸ்தீன மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றவும் நேட்டோ நாடுகள் ஏன் உடனடியாக இஸ்ரேலை ஆக்கிரமிக்கக் கூடாது?
யதார்த்தத்தில், லிபியாவில் மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் நேட்டோவால் நடத்தப்பட்ட மகத்தான புனிதப் போர் கத்தாரைச் சேர்ந்த, எமிரேட்சைச் சேர்ந்த மதவாதிகள் உள்பட மற்றவர்களின் உதவியோடுதான் நடத்தப்பட்டது; அது போல், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் பெயரால் அசாத் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ய சிரியாவில் உள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும், அதன் கூட்டாளிகளுக்கும் துருக்கியில் உள்ள நேட்டோவின் இஸ்லாமியவாதிகள் சவூதி அரோபியாவுடன் சேர்ந்து ஆயுதம் வழங்கினர்.

எங்கே எண்ணை இருக்கிறதோ அங்கே பேரரசு செல்லும்

லிபியாவில் கலகம் துவங்கிய ஆரம்ப நாட்களில் லிபியாவின் தேசிய ஆட்சிமாற்றக் கவுன்சில் (என்டிசி) பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்திடம் ஒரு ரகசிய ஆலோசனையை முன் வைக்கிறது; என்டிசிக்கு பிரெஞ்சு அரசாங்கம் முழுமையான, நிலையான ஆதரவு வழங்குகிற பட்சத்தில் அதற்கு கைமாறாக லிபியாவின் தேசிய எண்ணை உற்பத்தியில் 35%த்தை பிரான்சிற்குத் தருவதாக அந்த ரகசிய முன் மொழிவு கூறுகின்றது. லிபியாவில் மனிதாபிமான அடிப்படையில் தலையிடுவதற்கு அதிகாரம் அளித்த பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானம் இந்த ரகசிய முன் மொழிவில் நன்கு பிரதிபலிக்கப்பட்டிருக்கின்றது. லிபரேஷன் என்கிற பிரெஞ்சு நாளிதழ் இந்தத் தகவல் பரிமாற்றத்தை வெளியிட்டபோது பிரெஞ்சு அரசாங்கம் அதை மறுத்தது. சதிகாரர்களின் இந்தப் பாசாங்கு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கடாபியின் படுகொலை அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அக்டோபர் 21ம் தேதி பிரிட்டனின் புதிய பாதுகாப்பு அமைச்சர் பிலிப் ஹாமன்ட், எண்ணைக் கிணறுகள் தோண்டுவதற்கு உரிமம் வழங்குமாறு ஒரு வேண்டுகோளை பிரிட்டன் அரசாங்கம் என்டிசிக்கு அனுப்பியிருக்கிறது என்று அறிவித்தார். அத்துடன் பின்வருமாறும் கூறினார்:
'எண்ணை வளங்கள் கொண்ட லிபியா ஒப்பீட்டளவில் வளமான நாடு...லிபியாவின் மறுகட்டமைப்பில் ஈடுபடுவதற்கு பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்...பிரிட்டிஷ் நிறுவனங்களும், பிரிட்டிஷ் விற்பனை அதிகாரிகளும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தங்களது பெட்டிகளைக் கட்டிக் கொண்டு லிபியாவிற்குப் புறப்பட வேண்டும் என்றும், அந்நாட்டின் மறு கட்டமைப்பில் பங்கெடுக்க வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கிறேன்'.
திரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த செப்டம்பர் 22 (2011) அன்று மீண்டும் திறக்கப்பட்ட நிகழ்ச்சியில் கொடியேற்றிய அமெரிக்கத் தூதர் ஜெனி கிரெட்சும் இதே அளவு மகிழ்ச்சியாக இருந்தார்:
'லிபியாவின் இயற்கை வளங்கள் எனும் கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ள வைரம் எண்ணை என்பது எங்களுக்குத் தெரியும். கடாபியின் காலத்திலும் கூட உள்கட்டமைப்பு நிர்மாணம் மற்றும் இதர விஷயங்களில் அவர்கள் எல்லாவற்றையும் அ முதல் ஃ வரைத் துவக்கிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்க நிறுவனங்களை பெரிய அளவிற்கு இங்கு கொண்டு வர நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்வோம்; அப்படிச் செய்ய எங்களால் முடிந்து விட்டால், அமெரிக்காவில் எங்களது சொந்த வேலை வாய்ப்பு நிலவரத்தை மேம்படுத்த அது உதவும்'.        
இத்தாலி எண்ணை நிறுவனத்தைக் குறிப்பிட்டு அந்நாட்டின் அயலுறவுத் துறை அமைச்சர் பிராங்கோ பிராட்டினியும் இந்த வெற்றிக் களிப்புப் பாடகர் குழுவில் தானும் மகிழ்ச்சியாக சேர்ந்து கொண்டார்: 'எதிர்காலத்தில் எனி (எண்ணை நிறுவனம்) முதன்மையான பாத்திரம் வகிக்கும்'. நேட்டோவின் தாக்குதலில் மிகக் கணிசமான அளவு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களித்த கத்தார் இப்போதே கிழக்கு லிபியாவில் எண்ணை விற்பனையை நிர்வகித்துக் கொண்டிருக்கிறது; வரும்காலத்தில் வலுவான நிலையிலிருந்து யுத்தத்தின் பலன்களை விநியோகிக்கும் வேலையிலும் இறங்கும். 'லிபியாவின் இடைக்கால அரசாங்கம் மேற்கத்திய தொழில் நிறுவனங்களை வரவேற்க தனக்கு மிகுந்த விருப்பமிருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளது......தன்னுடைய மேற்கத்திய ஆதரவாளர்களுக்கு லிபியாவின் வர்த்தகத்தில் முன்னுரிமை அளிக்கவும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது' என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இது கச்சிதமாக இருக்கிறது. 'இத்தாலி, பிரெஞ்சு மற்றும் பிரிட்டன் நிறுவனங்கள் போன்றவை விஷயத்தில் எங்களுக்கு மேற்கத்திய நாடுகளுடன் எந்தப் பிரச்சனையும் இல்லை; ஆனால், ரஷ்யா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுடன் எங்களுக்கு சில அரசியல் பிரச்சனைகள் இருக்கின்றன' என்று என்டிசியின் கட்டுப்பாட்டில் உள்ள அகோகோ என்கிற எண்ணை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஜலீல் மாயோப் என்பவர் கூறியதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
லிபியாவில் 4600 கோடி (46 பில்லியன்) பேரல்கள் மரபான எண்ணை வளம் இருப்பதாக் கூறப்படுகிறது; அந்நாட்டை அது ஆப்பிரிக்காவின் மிகப் பெரும் எண்ணை வளம் கொண்ட நாடாக ஆக்குகிறது. ஆனால், நைஜீரியாவும், அங்கோலாவும் லிபியாவின் இந்த முதன்மை நிலையை மறுக்கின்றன. பிப்ரவரி மாதம் உள்நாட்டு யுத்தம் முழுவீச்சில் துவங்குவதற்கு முன்னர் லிபியா நாளொன்றுக்கு 16 லட்சம் பேரல் எண்ணை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. அதன் பெரும் பகுதி தெற்கு ஐரோப்பாவிற்குச் சென்றது. அங்குள்ள எண்ணைச் சுத்திகரிப்பு ஆலைகள் லிபியாவின் அடர்த்தி குறைந்த, உயர்தர கச்சா எண்ணையைச் சுத்திகரிப்பதற்கு ஏற்ற வகையில் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை. அதற்கு மாறாக, சவூதி அரேபியாவின் கச்சா எண்ணை கனமானது; இந்த சுத்திகரிப்பு ஆலைகளில் பெரும்பாலானவைக்கு அவை பொருத்தமற்றவை; புவியியல் ரீதியாக லிபியா அருகில் இருப்பதும் மிக மிகக் கூடுதலான ஈர்ப்புடையதாக அதை ஆக்குகிறது. நேட்டோ யுத்தத்திற்கு முன்னரே லிபியாவின் எண்ணையில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளுக்குச் சென்றன; நேட்டோ குண்டுகளை வீசி வெற்றிப் பாதையில் பயணிக்கத் துவங்கியபோது முதலில் கைப்பற்றப்பட்டவை எண்ணை உற்பத்தி செய்யும் பகுதிகள்தான். இதற்கிடையே எண்ணைத் தொழிலின் பெரிய நிறுவனங்கள் தங்களது பழைய சலுகைகளை மீட்டெடுக்கத் தயாராக இருப்பது மட்டுமின்றி புதிய சலுகைகளைப் பெறவும் தயாராக இருக்கின்றனர். 42 வருடங்களுக்கு முன்னர் கடாபி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து கடாம்ஸ் மற்றும் சிர்தே போன்ற மிகப் பெரும் எண்ணை வயல்கள் பெரும்பாலும் அந்நிய எண்ணை நிறுவனங்களின் கைகளுக்கு எட்டாதவையாகவே இருந்தன. அவை இப்போது தனியார்மயமாக்கப்படும் எனவும், அந்நிய நிறுவனங்களுக்குத் திறந்து விடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. லிபியாவின் கடலில் உள்ள எண்ணை வளங்களுக்கும், எரிவாயு வளங்களுக்கும் இது பொருந்தும்.
எனவே, அரசியல் இறையாண்மையை இழப்பது என்பது இன்றியமையாதபடி பொருளாதார இறையாண்மை பெருமளவு வெட்டிச் சுருக்கப்படுவதற்கு இட்டுச் செல்கிறது.
ஆப்பிரிக்க ஒன்றியம் (எதிர்) 'சர்வதேச சமுதாயம்'

நேட்டோ படைகள் லிபியாவின் மீது விமானக் குண்டு வீச்சைத் துவக்கிய மூன்று மாதங்களுக்குப் பின்னர், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் உயர்மட்ட இடைக்காலக் குழுவிற்கும் பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இவ்வருடம் ஜீன் 15ம் தேதி நடைபெற்ற ஒரு சந்திப்பில் லிபிய நெருக்கடி பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கும் கடிதம் ஒன்றை ஆப்பிரிக்க ஒன்றியம் பாதுகாப்பு கவுன்சிலிடம் அளித்தது. இப்போது திரிபோலி வீழ்ந்துவிட்டது, கடாபி படுகொலை செய்யப்பட்டுவிட்டார்; இதற்குப் பின்னரும் பிற நாட்டு விவகாரங்களில் தலையிடும் பிரச்சனையில், ஒரு பக்கம் முக்கண்டத்தின் தேச அரசுகளுக்கும், மறு பக்கம் ஐரோப்பிய-அமெரிக்க தலையீட்டை நியாயப்படுத்தும் சர்வதேச சமுதாயத்தின் அமைப்புகளுக்கும் இடையில் கண்ணோட்டங்களுக்கும் பரிந்துரைகளுக்கும் இடையில் உள்ள பெரிய இடைவெளியை மதிப்பிட நாம் விரும்பினால் அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தை மீண்டும் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். அந்த முக்கியமான ஆவணத்திலிருந்து முதலில் வரிசையாக சில மேற்கோள்களைக் கொடுப்போம்.
1. லிபியாவில் நேட்டோவின் தலையீட்டிற்கான மூலகாரணம் என்னவாக இருந்த போதிலும், பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று ஐநா தீர்மானங்கள் 1970 மற்றும் 1973க்கு முன்னரும் அந்த தீர்மானங்களுக்குப் பின்னரும் ஆப்பிரிக்க ஒன்றியம் வேண்டுகோள் விடுத்தது. மூன்று மாதங்களாக ஆப்பிரிக்க ஒன்றியத்தை அலட்சியப்படுத்துவதும், புனித ஆப்பிரிக்க மண்ணின் மீது குண்டு வீச்சகளைத் தொடர்வதும் ஆணவமும், தான்தோன்றித்தனமும், சினமூட்டும் தன்மையும் கொண்ட செயலாகும்.
2. லிபியாவின் மீதோ அல்லது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் எந்த உறுப்பு நாட்டின் மீதோ ஆப்பிரிக்க ஒன்றியத்தின் வெளிப்படையான ஒப்புதல் இன்றி தாக்குதல் நடத்துவது அபாயகரமான ஆத்திரமூட்டலாகும்... இறையாண்மை என்பது ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்கான ஒரு கருவியாகும்; அடிமை வர்த்தகம், காலனியம் மற்றும் நவகாலனியம் ஆகியவற்றால் நூற்றாண்டு கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் மாற்றத்திற்கான பாதையை வகுக்கத் துவங்கியுள்ளார்கள். ஆதலால், மக்கள் மீது அக்கறையின்றி ஆப்பிரிக்க நாடுகளின் இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஆப்பிரிக்க மக்களின் ஊழ்வினையின் மீது புதிய காயங்களை ஏற்படுத்துவதற்கு ஒப்பாகும்.
3. அரசுப் படைகளுக்கும் ஆயுதத் தாங்கிய கலகக்காரர்களுக்கும் இடையிலான போர் இனப்படுகொலை ஆகாது. அது ஒரு உள்நாட்டு யுத்தம்.....அரசுகளின் இறையாண்மையை அழிப்பதற்கு ஒரு சாக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு வன்முறையையும் இனப்படுகொலை என்றோ அல்லது நடக்கவிருக்கும் இனப்படுகொலை என்றோ வகைப்படுத்துவது தவறாகும்.
4. ஒரு உள்நாட்டு யுத்தத்தில் ஐநா எந்தத் தரப்பையும் ஆதரிக்கக் கூடாது. ஐநா பேச்சு வார்த்தையையே ஊக்குவிக்க வேண்டும்....பேச்சு வார்த்தைக்கு முன்னர் கர்னல் முவம்மர் கடாபி பதவி விலக வேண்டும் என்ற சில நாடுகளின் கோரிக்கை சரியல்ல. கடாபி பதவியில் இருக்க வேண்டுமா அல்லது போக வேண்டுமா என்பது லிபிய மக்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம். குறிப்பாக, கடாபி வெளியேற வேண்டும் என்று அந்நியர்கள் கோருவது தவறாகும். 2011 ஏப்ரல் 11 அன்று ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சமரசக் குழு திரிபோலிக்குச் சென்றபோது கடாபி பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டார். அதற்குப் பிந்தைய யுத்தச் செயல்பாடுகள் எதுவும் ஆப்பிரிக்காவிற்கு ஆத்திரமூட்டுவதாகும். இது ஒரு தேவையற்ற யுத்தமாகும். இது நிற்க வேண்டும்...கடாபி வெளியேறாமல் கலகக்காரர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட முடியாது என்கிற கதையை நாங்கள் ஏற்கவில்லை. அவர்கள் பேச்சு வார்த்தையை விரும்பவில்லை என்றால் அவர்கள் கடாபியுடனான தங்களது யுத்தத்தை நேட்டோ குண்டு வீச்சுகள் இல்லாமல் நடத்திக் கொள்ளட்டும்....அந்நியர்களின் ஆதரவு பெற்ற குழுக்கள் பேச்சு வார்த்தையையும், உள்நாட்டில் கருத்தொற்றுமையை வளர்ப்பதையும் அலட்சியப்படுத்துகின்றன; அந்நிய ஆதரவாளர்களை வென்றெடுப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
ஆப்பிரிக்க ஒன்றியம் எந்த வகையிலும் முற்போக்குவாதிகளின் ஒரு கூட்டமைப்பு அல்ல என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அது தேச அரசாங்கங்களின் ஒரு பழமைவாதக் குழுவாகும்; அவற்றில் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் மேற்கின் கூட்டாளிகளாக இருப்பவை; எந்தக் குறிப்பிட்ட நேரத்திலும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் அரசுகளின் தலைவர்களில் பலர் பணத்திற்காக எதையும் செய்பவர்கள், ஊழல்வாதிகள், எதேச்சாதிகாரிகள் அல்லது இன்னும் மோசமானவர்கள். என்றபோதிலும், சர்கோசி அல்லது சில்வியோ பெர்லுஸ்கோனி அல்லது மற்ற எந்த மேற்கத்திய தலைவரின் தனிப்பட்ட நீசத்தனத்தை விடவும் அவர்களது நீசத்தனம் பெரியதல்ல. விஷயம் என்னவென்றால், ஆப்பிரிக்க நாடுகள் ஒற்றுமையாக தங்களது குரலை எழுப்பும் ஒரே அமைப்பு ஆப்பிரிக்க ஒன்றியம்தான்; அது எழுப்பியுள்ள கோட்பாடுகளும், உண்மை விஷயங்களும் மறுக்க முடியாதவை.
முதல் விஷயமே என்னவென்றால், ஆப்பிரிக்க அரசுகளின் கூட்மைப்பின் கருத்திற்கு எதிராக பாதுகாப்புக் கவுன்சிலோ அல்லது நேட்டோவோ அல்லது அரசுகள் மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்புகள் எதுவுமோ கருத்து கூறும்போது தங்களது கருத்தை சர்வதேசச் சமுதாயத்தின் கருத்து என்று கூறிக் கொள்ளக் கூடாது என்பதுதான். இரண்டாவது விஷயம் என்னவென்றால், ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் எழுப்பப்படும் இறையாண்மை பிரச்சனை ஐரோப்பிய மற்றும் வெஸ்ட்பாலியன் குறிப்பிடும் வகையில் மட்டும் எழுப்பப்படவில்லை; ஆனால், அதை விட மிகவும் உணர்வு பூர்வமாகவும் மற்றும் வெடிப்புடனும், காலனியச் சூறையாடலின் நீண்ட வரலாற்றுக்குப் பின்னர் சமீபத்தில்தான் நாடுகள் விடுதலையடைந்தன என்கிற கண்ணோட்டத்திலிருந்து எழுப்பப்படுகின்றது; அந்த நாடுகளின் சுதந்திரம் இன்னும் பலவீனமானதாகவே இருக்கின்றது. மேலும், ஓபாமா, நேட்டோ கூட்டாளிகள் மற்றும் பாதுகாப்புக் கவுன்சில் ஆகியவற்றின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டையும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் கடிதம் நிராகரிக்கின்றது; அதாவது லிபியாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது அல்லது நடக்கவிருக்கின்றது என்கிற நிலைப்பாட்டை நிராகரிக்கின்றது. மாறாக, அரசுப் படைகளுக்கும் ஆயுதம் தாங்கிய கலகக்காரர்களுக்கும் இடையில் உள்நாட்டு யுத்தம்தான் நடக்கிறது என்று கறாராகக் கூறுகின்றது; எந்தத் தரப்பையும் ஆதரிக்கக் கூடாது என்று ஐநாவிடம் கேட்டுக் கொள்கிறது; மேலும், அந்நியர்களின் ஆதரவு பெற்ற குழுக்களையும், அந்நிய ஆதரவாளர்களை வென்றெடுப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட கோரிக்கைகளையும் வெறுப்புடன் ஒதுக்கித் தள்ளுகிறது.
எப்படியாயினும் மிகுந்த காரிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்னவெனில், ஏப்ரல் 10ம் தேதியே கடாபி பேச்சுவார்த்தைக்கும், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சமரசத்திற்கும் ஒப்புக் கொண்டு விட்டார்; அதற்குப் பின்னர் ஆப்பிரிக்க ஒன்றியம் மிகச் சரியாகவே நேட்டோ தன்னுடைய ராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரியது; ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ஆதரவுடன் ஐநா சமரசப் பேச்சு வார்த்தைகளுக்கு உதவ வேண்டும் என்றும் கோரியது. பேச்சு வாத்தைக்காகவும், புருண்டியில் செய்தது போல் ஆப்பிரிக்க ஒன்றியப் படையைக் கொண்டு லிபியாவிற்குள் வன்முறையைக் கட்டுப்படுத்தவும், அமைதிப் பேச்சு வாத்தைக் காலத்தில் தண்டனையிலிருந்து தற்காலிகப் பாதுகாப்பு எனும் கோட்பாடுகளைப் பயன்படுத்தி மோதலை முடிவிற்குக் கொண்டு வரவும், அமைதி மீட்டெடுக்கப்பட்ட பின்னர் உண்மை அறியும் குழுக்கள் மற்றும் இணக்கத்தை ஏற்படுத்தும் குழுக்களை அமைக்கவும் ஒரு விரிவான திட்டத்தை அக்கடிதம் விவரித்திருந்தது.
இதில் எதுவுமே செவி மடுக்கப்படவில்லை; ஏனெனில், நியாயத்தின் குரல் பலவீனமானவர்களிடமிருந்து வந்திருந்தது; தலையிடுவதற்கும், ஆட்சியை மாற்றுவதற்குமான விருப்பம் உலகின் எஜமானர்களாக தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்டவர்களிடமிருந்து வந்திருந்தது.

நாகரீகமும் வெற்றிக் களிப்பும்

வெற்றியின் தருணத்தில், மற்ற மேற்கத்திய தலைவர்களைவிட அதிபர் ஒபாமா வார்த்தைகளை அளந்து பேசினார். நேட்டோவின் 40000க்கும் மேற்ப்பட்ட குண்டு வீச்சுக்களுக்கு லிபியா வீழ்ந்ததானது உலகெங்கும் அமெரிக்காவின் தலைமை வலுவாக இருக்கின்றது என்பதற்குச் சான்று என்றார். அவர் அந்தப் பெருமைக்கு உரிமை கொண்டாடுவது முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. அமெரிக்காவின் கட்டாயப்படுத்தும் சக்தியில்லாமல் நேட்டோவிற்கு தாக்குதல் நடத்தும் அதிகாரத்தை வழங்கிய பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானத்தை நினைத்துப் பார்க்கவும் முடியாது. ஒசாமா பின் லேடன் மற்றும் அன்வர் அல் அவலாக்கி ஆகியோர் உள்ளிட்ட பலரின் படுகொலைகளை, நீதித்துறைக்கு அப்பாற்பட்ட தண்டனை நிறைவேற்றங்களை ஒபாமா இறுமாப்புடன் ஏற்றுக் கொண்டது நிராயுதபாணியான கடாபியைக் கொல்வதற்கும் வழங்கப்பட்ட பரிபூரண ஒப்புதலாகும். கடாபி உண்மையில் கொல்லப்படுவதற்கு முந்தைய 48 மணி நேரத்திற்குள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் திரிபோலிக்கு வெற்றி விஜயம் செய்தார்; நேட்டோவாலும் அதன் உள்ளூர் வாடிக்கையாளர்களாலும் இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அங்கு கிளின்டன் சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் மிகத் தெளிவாகக் கூறினார்: 'கடாபியை விரைவிலேயே பிடித்து விடுவோம் அல்லது கொன்று விடுவோம் என்று நம்புகிறோம்'. கொலை செய்யத் தூண்டுவதை இத்தகைய கடுமையான வார்த்தைகளிற்குள் ஒளித்து வைக்க முடியாது.
அதிகார ஒப்புதல் அளிக்கப்பட்ட படுகொலைப் பிரச்சனை நம்மை ஒரு வகையில் தடுத்து நிறுத்துகிறது; ஏனெனில், மனித உரிமைகள் விஷயத்தில் ஏகாதிபத்தியத்தின் இரட்டை வேடத்துடன் அது மோதுகின்றது. கடாபியின் மரணமும் அவர் புதைக்கப்பட்டதும் பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாக இல்லை. திரிபோலி சுற்றி வளைக்கப்பட்ட போது கடாபி பின்வாங்கிய நகரம் அவரையும் அவரைச் சுற்றி இருப்பவர்களையும் கொல்லும் ஒரே நோக்கத்துடன் நடத்தப்பட்ட நேட்டோ விமானங்களின் நூற்றுக்கணக்கான குண்டு வீச்சுகளினால் அழிக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும். வாகனங்களின் மூலம் சிர்டே நகரத்தை விட்டு அவர் வெளியேறிக் கொண்டிருந்தபோது அந்த வாகனங்கள் மீதும் குண்டு வீசப்பட்டன என்பது நமக்குத் தெரியும். தங்களுடைய ரபாலே போர் விமானம்தான் கடாபியின் வாகனத்தைச் செயலிழக்கச் செய்தது என்று பிரெஞ்சுக்காரர்கள் கூறிக் கொண்டனர். தங்களுடைய நரபட்சிணிகளில் (யுத்த விமானங்கள்-மொர்) ஒன்றின் வேலைதான் அது என்று அமெரிக்கர்கள் கூறிக் கொண்டனர். முக்கியமான விஷயம் என்னவெனில் அவர் நேட்டோ கூலிப்படையினரால் நிராயுதபாணியாகவும் உயிருடனும் பிடிக்கப்பட்டார், அங்கும் இங்குமாக உதைத்திழுக்கப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டார். லிபியக் கலகக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் அமெரிக்க, பிரெஞ்சு, பிரிட்டிஷ், கத்தார் நாட்டுப் படைகளும், இதர சிறப்புப் படையினரும் எவ்வளவு பேர் அந்த இடத்தில் இருந்தார்கள் என்பதை வைத்துப் பார்க்கும்போது, சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த கலகக்காரர்களிடமிருந்து அந்த செத்துப் போன மனிதனின் உடல் எடுத்துப் போகப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐநாவின் அதிகாரபூர்வ விசாரணை அதிகாரியான கிறிஸ்டோப் ஹெய்ன்ஸ் இந்த விஷயத்தில் தெளிவாக இருப்பது போல் தெரிகிறது: 'கைதிகள் சிறைப் பிடிக்கப்படும்போது அவர்களை வேண்டுமென்றே கொல்லக் கூடாது என்று ஜெனிவா ஒப்பந்தங்கள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன. ஒரு போர்க் குற்றத்தில் இதுதான் நடந்திருக்கிறது என்றால் அது விசாரிக்கபட வேண்டும்'.
என்றபோதிலும், சிக்கல் என்னவென்றால் கடாபியைக் கொல்பவருக்கு அல்லது கொல்லவோ, பிடிக்கவோ உதவுகிறவருக்கு 20 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று மேற்கத்தியக் கூட்டணி முன்னர் அறிவித்திருக்கிறது. எனவே, மேற்கத்திய விழுமியங்களுக்கு இங்கு ஒரு சோதனை: கடாபியைக் கொன்ற மனிதர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டுமா? அவருக்கு 20 மில்லியன் டாலர்கள் பரிசாகக் கொடுத்து, வீரனாகக் கொண்டாட வேண்டுமா? அல்லது சட்டத்தின் பிடியிலிருந்தும், வரலாற்றிலிருந்தும், நினைவிலிருந்தும் தப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டுமா? அப்படித் தப்பித்து ஒரு பெரிய தொகையுடன் மியாமியிலோ, தெற்கு கலிபோர்னியாவிலோ அல்லது ரைன் நதிக்கரையில் ஒரு மாளிகையிலோ அமைதியாக வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமா?
கடாபின் சொந்த இனம் பின்வரும் அறிக்கையை வெளியிட்டது: 'இஸலாமிய சம்பிரதாயங்கள் மற்றும் விதிகளின் படி புதைப்பதற்கு ஏதுவாக சிர்டேவில் உள்ள எங்களது இனத்தவரிடம் தியாகிகளின் உடல்களைக் கொடுக்கும்படி தேசிய இடைக்கால அரசாங்கத்தை நிர்ப்பந்திக்குமாறு ஐநா, இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு மற்றும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஆகிய அமைப்புகளைக் கேட்டுக் கொள்கிறோம்.' ஆனால், அப்படி ஒரு பாக்கியம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை! நேட்டோவின் கூலிப்படையினர் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இடுப்பு வரை நிர்வாணமான கடாபியின் உடலையும், அவரது மகன் முடாசிமின் உடலையும் மிஸ்ராடாவில் உள்ள ஒரு கிடங்கில் காட்சிக்கு வைத்திருந்தார்கள்; நினைவுச் சின்னம் போல் பலர் அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
மனித உரிமைகள் ஏகாதிபத்தியம் ஒரு புதிய பொழுது போக்குத் தொழிலைக் கண்டுபிடிப்பது போல் தெரிகிறது; பிணங்களுடன் உறவு கொள்ளும் சுற்றுலாத் தொழில்!
அது அப்படியே இருக்கட்டும். இந்த நிகழ்வு அமெரிக்காவின் தலைமைப் பண்பின் பலத்தை நிரூபிக்கிறது என்று அதிபர் ஒபாமா சரியாகவேச் சொன்னார். நேட்டோவின் கூலிப் படையினராகக் களத்தில் போரிட விதிக்கப்பட்டவர்கள் துவக்கத்திலிருந்தே ஆயுதம் தாங்கியவர்களாக இருப்பதை உறுதி செய்வதற்காக அமெரிக்கச் சிறப்புப் படையினரும் சிஐஏவினரும் கலகம் துவங்குவதற்கு முன்பே களத்தில் இருந்தனர்; பின்னர் அவர்களுடன் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு சிறப்புப் படைகளும், உளவுத் துறையினரும் சேர்ந்து கொண்டனர்; அவர்களுக்கு ஆதரவாக கத்தார், எமிரெட்ஸ் மற்றும் அவற்றைப் போன்ற நாடுகளின் ஆயுதம் தாங்கியக் குழுக்களும் சேர்ந்து கொண்டனர். பெரும்பாலான குண்டு வீச்சுக்களை நேட்டோவின் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் பிரிவுகளே கவனித்துக் கொண்டன; ஆனால், உயர் மின்னணு தொழில் நுட்பத்தின் பெரும்பகுதியையும், (லிபியா) உள்கட்டமைப்பின் அடிப்படையான விஷயங்களையும் அமெரிக்கப் படைகள் கவனித்துக் கொண்டன; எடுத்துக் காட்டாக, மின்னணு உளவுத் தகவல்களைச் சேகரிப்பதையும், லிபியாவின் விமான எதிர்ப்பு ஏற்பாடுகளை அழிப்பதையும், அதன் கடற்கரையை யாரும் அணுக முடியாதபடிச் செய்வதையும் அமெரிக்கப் படைகள் கவனித்துக் கொண்டன. நேட்டோ விமானங்கள் எரிபொருள் நிரப்பிக் கொள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைப் பயன்படுத்திக் கொண்டன; அமெரிக்காவின் ஐரோப்பியக் கூட்டாளிகளுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டபோது அவற்றைக் கொடுத்தன. ஒரு முக்கியமான பொருளில், இந்த ராணுவ நடவடிக்கை, 'ஆப்ரிகாம்' என்றழைக்கப்படும் ஆப்பிரிக்காவைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்கப் படைத்தலைமை மற்றும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளும் சேர்ந்து நடத்திய இந்த தாக்குதல், ஒரு வெற்றிகரமான பரிசோதனையாகும் லிபியா.
ஒபாமா சூசகமாகப் பேசினார் என்றால் அவருடைய ஜடம் போன்ற துணை அதிபர் ஜோ பிடென் நறுக்கென்று கூறினார்: 'இந்தப் போரில் அமெரிக்கா 200 கோடி டாலர்கள் செலவழித்தது; ஒரு உயிரைக் கூட இழக்கவில்லை. கடந்த காலத்தைவிட வரும் காலத்தில் உலகை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறையாகும் இது.' உயிர் எனும்போது பிடென் அமெரிக்க உயிரையே குறிப்பிடுகிறார் என்பது கண்கூடு. மிகக் குறைவான மதிப்பீடுகள் கூட லிபியாவில் நடந்த யுத்தம் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் உயிர்களின் இழப்பிற்கு இட்டுச் சென்றது என்று கூறுகின்றன; அவர்களில் பெரும்பாலானோர் நேட்டோ குண்டு வீச்சு விமானங்களாலும், அவற்றின் உள்ளூர் கூட்டாளிகளாலும் கொல்லப்பட்டவர்கள்.
இன்னும் பொதுவாக இங்கு நாம் கூற வருவது என்னவென்றால், மிகவும் முன்னேறிய தொழில்நுட்பங்களைக் கொண்டு யுத்த களத்தை 'இயந்திரமயமாக்கப்பட்ட யுத்தகளமாக' மாற்றுவதும், அதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவு தரைப்படைகளைப் பயன்படுத்தாமலேயே யுத்தங்களை வெல்வது மற்றும் நாடுகளைக் கைப்பற்றுவது என்கிற அமெரிக்காவின் குறிக்கோள்தான். இந்தக் கருத்து முதன் முதலில் வியட்நாம் யுத்தத்தின்போது உருவானது. அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் (ஐரோப்பாவில்), இனி முதற்கொண்டு மேற்கு நாடுகள் இராக்கில் செய்தது போல் லட்சக்கணக்கான வீரர்களை கொண்டு படையெடுப்பதைவிட லிபிய மாதிரி தலையீட்டையே மேற்கொள்ள வேண்டும் என்று இதே கருத்தை பாடி ஆஸ்டவுன் போன்றோர் கூறினர்; ஆஸ்டவுன் ஒரு காலத்தில் போஸ்னியா-ஹெர்சகோவினாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியாகப் பணியாற்றினார்.
இம்மரிதிரியான ஈவிரக்கமற்ற ஆங்கிலோ-சாக்ஸன் ஆணவத்தை தற்போதைய பிரெஞ்சு அதிபர் சர்கோஷி போன்ற பேராசை கொண்ட அரசியல்வாதிகளால் வரலாறு மற்றும் நாகரீகம் பற்றிய உயர் கோட்பாடுகள் கொண்ட பிரெஞ்சு சொல்லாடலின் சொற்புரட்டுகளாக எளிதில் மாற்றிவிட முடியும். 'லா ஹீயூமனைட்' என்கிற பிரெஞ்சு இதழின் முன்னாள் ஆசிரியர் பியர்ரே லெவ்வி 2007ல் சர்கோஷி ஆற்றிய உரையொன்றின் ஒரு பத்தியை சமீபத்தில் நினைவூட்டியிருந்தார். அதில் 'சா£லிமேக்னே (8-9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமப் பேரரசர்-மொர்) மற்றும் புனித ரோமப் பேரரசின் உடைத்தெறியப்பட்ட கனவுகள், புனிதப் போர்கள், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கிறித்துவத்திற்கு இடையிலான மாபெரும் பிளவு, 14ம் லூயி மற்றும் நெப்போலியன்  ஆகியோரின் வீழ்ச்சி.....' போன்றவற்றை சர்கோஷி மிக உயர்வாகப் புகழ்ந்தார். மேலும் தொடர்ந்த அவர் 'ஒரு நாகரீகத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய இன்று ஐரோப்பாவிற்கு மட்டுமே இருக்கிறது' என்றார். நாகரீகமயமாக்கும் ஆற்றல் தங்களுக்கு மட்டுமே இருப்பதாக அவர் கூறிக் கொண்ட உடனேயே அது வென்றடக்குவதற்கான பேராவலுக்கு இட்டுச் சென்றது. '12 நூற்றாண்டுகள் நீடித்த பிரிவினைக்கும், வேதனை மிக்க மோதலுக்கும் பின்னர் மத்திய தரைக் கடல் பகுதிகளை ஒன்றிணைக்கும்போக்கிற்குக் கொண்டு வரும் பிரான்சின் அதிபராக நான் இருக்க விரும்புகிறேன்....அமெரிக்காவும், சீனாவும் ஆப்பிரிக்காவை வென்றடக்கும் வேலையை ஏற்கனவே துவக்கி விட்டன. நாளைய ஆப்பிரிக்காவை நிர்மாணிப்பதற்கு பிரான்ஸ் எவ்வளவு காலம் காத்திருக்கும்? ஐரோப்பா தயங்கிக் கொண்டிருக்கும் போது மற்றவர்கள் முன்னேறுகிறார்கள்.'
லெவ்வி பின்னர் பிரான்ஸ் சோஷலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டொமினிக் ஸ்டிராஸ்-கானை (பாலியல் துர்நடத்தைகளுக்காக சமீபத்தில் செய்திகளில் அதிகமாக அடிபட்டவர்) மேற்கோள் காட்டுகிறார். அவரும் சர்கோஷிக்கு இணையாக ஆராவரமாகப் பேசுகிறார்: 'வடக்கே ஆர்க்டிக்கின் குளிரும் பனியிலிருந்து தெற்கே சகாராவின் சுடும் மணல் வரை விரிந்து கிடக்கும் ஐரோப்பா' வேண்டும் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்துகிறார். அந்த ஐரோப்பா தொடர்ந்து இருந்தால் மத்திய தரைக் கடலை ஒரு நிலப்பரப்பின் உள்புறத்தில் இருக்கும் கடலாக மாற்றி அமைத்து விடும்; ரோமானியர்கள் அல்லது மிகச் சமீபத்தில் நெப்போலியன் ஒன்று சேர்க்க முயற்சித்த பரப்பை மீண்டும் வென்றுவிடும்'.      
இந்த உலகக் கண்ணோட்டத்தின்படி, ரோமானியப் பேரரசிடமிருந்தும்,  நெப்போலியனிய யுத்தங்களிடமிருந்தும் ஒரு பணித் திட்டத்தை மரபுரிமையாக நேட்டோ பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது; அப்படியெனில், வட ஆப்பிரிக்காவை மீண்டும் கைப்பற்றுவதும் அதில் உள்ளடங்கியிருக்கிறது. அல்ஜீரியா ஒரு அந்நிய காலனி நாடு அல்ல, பிரான்சின் தொலைதூர மாகாணம்தான் என்று கொண்டாடி வந்த உரிமையை 50 வருடங்களுக்கு முன்னர்தான் பிரான்ஸ் துறந்தது. எப்படியாயினும், 'நாகரீகத்தை' முதலில் 'நாடுகளைக் கைப்பற்றுவதுடனும்' பின்னர் 'மீண்டும் கைப்பற்றுவதுடனும்' மிக நெருக்கமாகச் சேர்த்து நெய்திருப்பதுதான் கவனத்தை ஈர்க்கின்றது.

ஒபாமா, ஆப்பிரிக்கா மற்றும் ஏகாதிபத்திய திட்டம்

பரிதாபத்திற்குரிய 'பழைய ஐரோப்பா'! அதன் மூர்க்கத்தனமான நாகரீகப் பிதற்றல்களிலும் கூட அதனால் வட ஆப்பிரிக்காவில் இருந்த தன்னுடைய காலனியப் பேரரசை மீண்டும் கைப்பற்றுவது பற்றிதான் கற்பனை செய்ய முடிகின்றது. அதற்கு மாறாக, எப்படி நேரடியாக விஷயத்திற்கு வருவது என்பது அமெரிக்காவிற்குத் தெரிந்திருக்கிறது. லிபியாவிற்கு எதிரான யுத்தம் வெல்லப்பட்டு, ஆனால் கடாபி இன்னும் கொல்லப்படாமலிருந்த அக்டோபர் இரண்டாவது வாரத்தில் அதிபர் ஒபாமா பின்வருமாறு அறிவித்தார்: 'மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள பிராந்திய சக்திகளுக்கு உதவுவதற்காக சிறு எண்ணிக்கையிலான அமெரிக்கப் படைகளை அப்பகுதிக்கு அனுப்புவதற்கு நான் அதிகாரமளித்துள்ளேன்...அக்டோபர் 12ம் தேதி பொருத்தமான போர்க் கருவிகளுடன் அமெரிக்க ராணுவத்தின் முதல் குழு உகாண்டாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் கூடுதலான படைகள் அனுப்பப்படும்...யுத்த களத்திலிருந்து எல்ஆர்ஏவின் (கடவுளின் புரட்சிப் படை) ஜோசப் கோனி மற்றும் அதன் மூத்த தலைமையை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ள கூட்டாளிப் படைகளுக்கு இந்தப் படைகள் ஆலோசகர்களாகச் செயல்படும்....சம்பந்தப்பட்ட நாடுகள் ஒவ்வொன்றின் ஒப்புதலுடன் இது போன்ற அமெரிக்கப் படைகள் உகாண்டா, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளுக்குள் அனுப்பப்படும்'.
எனவே, லிபியாவில் வெற்றி பெற்றவுடன் உடனடியாக அமெரிக்கப் படைகள் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நான்கு நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளன; மனித உரிமைகள் மீறலில் ஈடுபடும், கொடூரமான சர்வாதிகாரச் செயல்கள் புரியும் ஆட்சிகளின் சேர்ந்து ஒத்துழைக்கப் போகிறார்கள். கொடூரமான சர்வாதிகாரிகளில் உகாண்டாவின் 'நிரந்தர அதிபர்' யொவேரி முசெவேனியும் அடங்குவார். உகாண்டாவில் இந்த மனிதாபிமானப் பணித் திட்டத்தை எல்ஆர்ஏ-வை அகற்றுவது என்கிற காரணத்தைக் கூறி ஒபாமா நியாயப்படுத்தினார். இது விநோதமாக இருக்கிறது. எல்ஆர்ஏ சுமார் 25 வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது; அது இப்போது போல் எப்போதும் பலவீனமாக இருந்ததில்லை. ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியில் ஏன் இப்படியொரு நடவடிக்கை திடீரென்று எடுக்கப்பட வேண்டும்? ரொனால்ட் ரீகன் அமைச்சரவையில் நிதித் துறை துணை அமைச்சராக இருந்த (அதனால் இடதுசாரி என்று சொல்ல முடியாத) பால் கிரெய்க் ராபர்ட்ஸ் விஷயத்தை ரத்னச் சுருக்கமாகக் கூறினார்: 'லிபியா கைப்பற்றப்பட்டு விட்டதால், எரிசக்தியிலும் கனிமப் பொருட்களிலும் சீனா முதலீடு செய்துள்ள மற்ற ஆப்பிரிக்க நாடுகளின் மீது ஆப்ரிகாம் தன்னுடைய வேலைகளைத் துவங்கும்.... ஆப்பிரிக்காவிற்கு முதலீடுகளையும், பரிசுகளையும் சீனா கொண்டு வருகின்றது; அமெரிக்கா படைகளையும், குண்டுகளையும், ராணுவத் தளங்களையும் அனுப்பி வைக்கிறது'.
இப்போது இப்படிப் படைவீரர்களை அனுப்பி வைப்பதும் கூட வரப் போகும் பெரிய நடவடிக்கையின் ஒரு அறிகுறி மட்டும்தான். மேற்காசியாவில் எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்காக  'சென்ட்காம்' என்ற ராணுவக் கேந்திரத்தை அமைத்திருப்பது போல் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கு என ஆப்ரிகாம் என்கிற ராணுவ கேந்திரத்தை கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்கா நிர்மாணித்து வருகின்றது. ஆப்பிரிக்காவில் இந்த ஏகாதிபத்தியப் பணித் திட்டத்தின் ஒரு பகுதியாக மாலி, சாட், நைஜர், பெனின், போட்ஸ்வானா, கேமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, எத்தியோப்பியா, காபோன், ஜாம்பியா, உகாண்டா, செனகல், மொசாம்பிக், கானா, மாளாவி மற்றும் மொரிடானியா ஆகிய நாடுகளின் ராணுவங்களுக்கு சுறுசுறுப்பாக பயிற்சி அளித்து வருகின்றது. இதர நேட்டோ நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா எண்ணற்ற ராணுவப் பயிற்சிகளை ஆப்பிரிக்காவில் நடத்தியுள்ளது; இதற்கு நைஜர் டெல்டா பகுதியிலிருந்தும் கினியா வளைகுடாவிலிருந்தும் வரும் எண்ணை விநியோகத்தைப் பாதுகாப்பது என்று வெளித் தோற்றத்திற்குக் காரணம் சொல்லப்பட்டது. அப்பகுதியில் லிபியா தவிர்த்து அங்கோலா, நைஜீரியா, கேமரூன், பூமத்தியரேகை கினியா, சாட் மற்றும் மொரிடானியா ஆகியவை எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கியமானவையாகும். இவை அனைத்தும், அவற்றுடன் மற்றவையும், தேவை ஏற்பட்டால் லிபியாவைப் போலவே பாதுகாக்கப்படும்.
விவரங்களுக்குள் போவதற்கான இடம் இதுவல்ல. ஆப்பிரிக்காவில் மிதமிஞ்சி கிடைக்கும் இயற்கை வளங்களைக் கைப்பற்றுவதற்கான யுத்தத்தில் லிபியாவின் வீழ்ச்சி முதல் படியாக இருக்கும் என்று சொல்வது போதுமானது. பல்வேறு கலகங்களும், ரத்தக்களறிகளும் ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால் இறுதியில் இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செய்தது போலவே ஆப்ரிகாம்-நேட்டோ கூட்டணியின் பல புதிய ராணுவத் தளங்கள் நிர்மாணிக்கப்படப் போவதை நாம் காணப் போகிறோம். ஆப்பிரிக்காவின் இயற்கை வளங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஐரோப்பிய-அமெரிக்க ஏகாதிபத்தியக் கூட்டணிக்காக பாதுகாத்து வைப்பது மட்டுமல்ல நோக்கம்; சீனாவிற்கு அவை கிடைக்காமல் மறுப்பதும் நோக்கம்; சீனா தன்னுடைய எண்ணைத் தேவைகளில் மூன்றில் ஒரு பகுதியை ஆப்பிரிக்காவிலிருந்து, குறிப்பாக அங்கோலா மற்றும் சூடான் ஆகிய நாடுகளிலிருந்து, பெறுகின்றது; அது மட்டுமின்றி பிளாட்டினம், செம்பு, மரம் மற்றும் இரும்புத் தாது ஆகியவற்றையும் பெறுகின்றது. சுமார் 75 சீன நிறுவனங்கள் 36000 ஊழியர்களுடன் லிபியாவில் செயல்பட்டு வந்தன; எண்ணைத் துறையைவிட உள்கட்டமைப்புத் துறையில் அதிகமாகச் செயல்பட்டு வந்தன. போருக்கு முந்தைய லிபியாவின் ஏற்றுமதியில் சீனாவின் பங்கு மட்டும் 11% ஆகும். அது தன்னுடைய ஊழியர்களை லிபியாவிலிருந்து வெளியேற்றியது; லிபிய மக்களைப் பாதுகாப்பது என்ற பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானத்தை ஆட்சியை மாற்றுவது என்பதாக நேட்டோ தன்னிச்சையாக மாற்றிக் கொண்டது என்று குற்றம் சாட்டியது.
லிபியாவிலிருந்து சீனா வெளியேறியதை நிரந்தரமாக்க வேண்டும் என்றும், ஆப்பிரிக்கா எங்கும் அத்தகைய வெளியேற்றம் மீண்டும் மீண்டும் நிகழ வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது. அது நடக்குமா? இப்போதே சொல்ல முடியாது. அமெரிக்காவிடம் ராணுவ பலமும், வீழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வல்லரசின் மூ£க்கத்தனமும் இருக்கின்றது; ஆனால், சீனாவிடம் பணமும், வளரும் ஒரு பொருளாதார சக்திக்கு உரிய பனி போன்ற பொறுமையும் இருக்கிறது. ஒரு மோதல் நடந்து கொண்டிருக்கிறது; அது முடிவதற்கு பல பத்தாண்டுகள் ஆகும்.

நிறைவு

லிபிய யுத்தத்தின் முக்கியத்துவம் தொடர்பான முக்கியமான பிரச்சனைகள் இங்கு விவாதிக்கப்படவில்லை; அரேபிய எழுச்சி என்று சொல்லப்படுகிறதே அதன் மீது இவை எல்லாம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? தூக்கி எறியப்பட்ட கடாபி ஆட்சியின் தன்மை என்ன? உருவாகிக் கொண்டிருக்கும் ஆட்சியில் எந்தெந்த சக்திகள் இருக்கக் கூடும்? லிபிய யுத்தத்தால் சாகேல் பகுதியின் ஸ்திரத்தன்மை குலைக்கப்பட்டிருப்பது மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட உள்நாட்டு யுத்தங்கள் வெடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இன்னும் அது போன்றவை பற்றி இங்கு எழுதப்படவில்லை. இக்கட்டுரையாளர் எதிர்காலத்தில் அவை குறித்து எழுதக் கூடும்.
எனவே, கடாபி உண்மையில் ஒரு உயில் எழுதி வைத்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டும், அவரது இறுதி வார்த்தைகளில் சிலவற்றை நினைவு கூர்ந்தும் இக்கட்டுரையை முடிக்கிறேன்.
''தனிப்பட்ட முறையில் பாதுகாப்பான, நிலையான வாழ்க்கைக்கு கைம்மாறாக எங்களது லட்சியத்தை விட்டுக் கொடுத்து எங்களால் பேரம் பேசியிருக்க முடியும் என்பதை இவ்வுலகின் சுதந்திர சிந்தனை உள்ள மக்கள் தெரிந்து கொள்ளட்டும். அப்படியொரு வாய்ப்பை அளிக்கத் தயாராக இருப்பதாகப் பலர் எங்களிடம் கூறினார்கள்; ஆனால், இந்தப் போரின் முன்னணியில் கடமை மற்றும் கண்ணியத்தின் அடையாளமாக இருப்பது என்று நாங்கள் தீர்மானித்தோம். உடனடியாக நாங்கள் வெல்லவில்லை என்றாலும் தேசத்தைப் பாதுகாக்கத் தீர்மானிப்பது ஒரு கவுரவம் என்றும், அதை விற்றுவிடுவது என்பது, மற்றவர்கள் வேறு மாதிரிச் சொல்ல முயற்சித்தாலும், வரலாறு எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் ஒரு மாபெரும் துரோகமாகும் என்கிற பாடத்தை எதிர்கால தலைமுறைகளுக்கு கொடுத்துச் செல்வோம்.''
அது உண்மைதான். ஆப்பிரிக்க நட்பு நாடுகள் சில பாதுகாப்பான புகலிடம் அளிக்க முன்வந்தன; சில ஐரோப்பிய நாடுகள் அவர் ஒரு கொண்டாடப்படும் தியாகியாக (குறைந்தபட்சம் லிபியாவின் சில பகுதிகளிலாவது) ஆவதைவிட முனை மழுங்கடிக்கப்பட்ட நண்பராக வைத்திருப்பதை விரும்பின. உண்மையில் அவருக்கு வாழ்வதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. இருந்தும் அவர் மரணத்தைத் தேர்வு செய்தார். அந்த சிறிய உயிலில் அவர் ஒரு எளிய ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.
''நான் கொல்லப்பட்டால் இஸ்லாமிய சடங்குகளின் படி, மரணத்தின்போது நான் அணிந்திருந்த உடைகளுடன், குளிப்பாட்டாமல், சிர்டேவில் உள்ள கல்லறையில், என்னுடைய குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு அருகே புதைக்கப்படுவதை விரும்புகிறேன். என்னுடைய மரணத்திற்குப் பின்னர் என்னுடைய குடும்பத்தார், குறிப்பாக பெண்களும் குழந்தைகளும், நன்றாக நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன்.''
இஸ்லாமிய சம்பிராதாயத்தில், இறந்தவர்கள் குளிப்பாட்டுப்பட்டு, புதிய போர்வையால் சுற்றப்பட்டு புதைக்கப்பட வேண்டும் என்கிற விதி தியாகிகளின் விஷயத்தில் தளர்த்தப்படுகின்றது. சரியோ அல்லது தவறோ தன்னை நெருங்கிக் கொண்டிருந்த மரணத்தை வீரமரணம் என்று கடாபி எண்ணினார். நாம் அப்படி நினைக்காமல் இருக்கலாம்; ஆனால் பலர் அப்படித்தான் நினைப்பார்கள். கடாபி மிகப் பெருமளவிற்கு ஒரு கோமாளியாகவே இருந்தார்; பல வகைகளில் மிருகத்தனமானவராக இருந்தார்; வயது ஆக ஆக மிருகத்தனமும் அதிகரித்தது; தான் என்ற அகங்காரமும் அதிகரித்தது; ஆனால், அவருக்கு ஒரு தொலை நோக்குப் பார்வையும் இருந்தது என்பதையும், தன்னுடைய மக்களுக்கு ஆப்பிரிக்காவிலேயே மிகவும் முன்னேறிய ஒரு சமூக நல அரசை நிர்மாணித்தார் என்பதையும் எல்லோரும் மறக்கப் போவதில்லை. அவருடைய மரபு ஒரு முரண்பட்ட மரபாகும். போரில் வெற்றி பெற்றவர்கள் அவருடைய சடலத்திற்கு என்ன செய்தார்கள் என்பதை முன்னர் விவரித்திருக்கிறோம். அவருடைய குடும்பத்தினர் அல்லது அவரது இனக்குழுவினரால் மட்டுமல்ல, எண்ணற்ற வேறு பலராலும் அதை எளிதில் மறந்துவிட முடியாது.

--------------------------------------------நன்றி: பிரன்ட்லைன், நவம்பர் 18, 2011