Sunday, February 27, 2011

அடையாள அரசியலும் சட்டமன்றத் தேர்தலும்



அசோகன் முத்துசாமி

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியினர் தமிழினத் துரோகிகள் என்பதால் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். அதாவது, 2009ல் இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் தலையிட்டு இலங்கை அரசின் மீது போரை நிறுத்துமாறு நிர்ப்பந்தம் கொண்டு வராமல்,யுத்தம் நடந்த நேரத்தில் இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்தது, பண உதவி செய்தது-இதுவே அக்கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணம் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.
நடப்பது தமிழ்நாட்டு சட்டமன்றத்திற்கான தேர்தல் என்றபோதிலும், தற்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழக மக்களுக்கு செய்த நன்மை தீமைகள் என்னவென்று பரிசீலிப்பதுதான் பிரதானம் என்ற போதிலும் ஒரு அந்நிய நாட்டுப் பிரச்சனையை இங்கு தேர்தல் பிரச்சனையாக ஆக்க முயற்சிப்பது எவ்வகையில் பொருத்தமாக இருக்கும் என்ற கேள்வி எழலாம். அந்நிய நாட்டுப் பிரச்சனை இங்கு உள்நாட்டு அரசியல் பிரச்சனையாக மாறக் கூடாது என தடை எதுவும் இல்லை. அதில் தவறொன்றும் இல்லை. ஆனால், அது மட்டும்தான் பிரச்சனையாக ஆக்கப்பட வேண்டும் எனும் பொழுதுதான் சிக்கல் வருகின்றது. அல்லது நமக்கு பல கேள்விகள் எழுகின்றன.
தாங்க முடியாத விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல்கள், அராஜகம் என தமிழக மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் பல இருக்கின்றன. சாதி மோதல்கள், சாதி அடிப்படையில் தலித்துகளின் உரிமைகள் மறுக்கப்படுதல், தலித்துகள் தாக்கப்படுதல் என சமூகப் பிரச்சனைகளும் இருக்கின்றன. கல்வி தனியார்மயமாக்கப்பட்டு, வர்த்தகமயமாக்கப்பட்டு, அதனால் ஏற்படும் பல்வேறு விதமான இன்னல்களை மக்கள் அன்றாடம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். விதிக்கப்பட்டதைவிடக் கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக மாநிலமெங்கும் மக்கள் போராடிக் கொண்டே இருக்கின்றனர். இதன்றி பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களும், ஊழியர்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். தனியார் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களும் தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவையன்றி, கொலை கொள்ளை, பாலியல் வன்முறை, ஆள்கடத்தல் எனக் குற்றங்கள் அன்றாடம் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இது வரை தமிழகத்தில் நடக்கவில்லை என்று கருதிக் கொண்டிருந்ததற்கு மாறாக, மற்ற பல மாநிலங்கள் போல் தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நடந்திருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. (2009ல் தமிழகத்தில் 1100 விவசாயிகள் தற்ª£கலை செய்து கொண்டனர்).
இந்த காரணங்களுக்காக ஆளும் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது எமது நிலை. ஆனால், இதைச் சொன்னால் இலங்கைப் பிரச்சனையை முன்வைத்துப் பேசும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், தமிழ்த் தேசியவாதிகள் தமிழினத் துரோகிகளின் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். ஆனால், நாம் மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளை எல்லாம் அனுபவிப்பவர்கள் தமிழர்கள் இல்லையா? இவர்களை எல்லாம் எந்த வகையில் இவர்கள் சேர்த்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இதைச் சுட்டிக் காட்டினால், மேலே குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? உங்களுக்கு விலைவாசி, எங்களுக்கு தமிழின துரோகம் என்கிறார்கள்.
ஒன்று தெளிவாகின்றது.  இந்த வாதத்தை முன்வைப்பவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சனைகள், சாதிப் பிரச்சனைகள் எதுவும் இல்லை. அவை எல்லாம் இல்லாத ஒரு உயர்நிலையில் இவர்கள் இருக்கின்றனர். இருந்திருந்தால் அந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசியிருப்பார்கள் அல்லவா? மேலும், திமுக கூட்டணி தோற்கடிக்கப்பட்டு அதனிடத்தில் ஆட்சிக்கு வருகின்றவர்கள் மக்களின் இந்த பற்றியெறியும் பிரச்சனைகளைக் களைய ஒன்றும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை; இலங்கைப் பிரச்சனையில் மூக்கை நுழைத்து ஏதாவது செய்து கொண்டிருந்தால் போதும் என்பதும் இதன் பொருளாகின்றது. மக்கள் விலை உயர்வால் வாடலாம், பட்டினியால் சாகலாம், வேலையின்மையால் தவிக்கலாம், சாதிக் கொடுமைகளால் துன்புறலாம், கல்விக் கொள்ளையால் ஓட்டாண்டிகளாகலாம். இவை எது பற்றியும் அவர்களுக்குக் கவலையில்லை. இப்படி ஒரு நிலை இயல்பாகவே இங்குள்ள முதலாளிகள், நிலப்பிரபுக்கள், மேல்சாதி வெறியர்கள் ஆகியோருக்குச் சாதகமாக ஆகின்றது என்பது வெளிப்படை.
இனி இந்த விவாதத்தின் அடுத்த கட்டத்திற்குப் போவோம். இலங்கைத் தமிழர் பிரச்சனையின் அடிப்படையில் தமிழினத்திற்கு துரோகம் என்பதை பார்ப்போம்.
இப்போது கடுமையாகக் குற்றம் சாட்டப்படும் காங்கிரஸ் 1980களின் துவக்கத்தில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியும், ஆயுதமும் கொடுத்த கட்சிதான். அதாவது இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம்தான். பின்னர் ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் அமைதி ஒப்பந்தம் போட்டது. அப்போது மாநிலத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி இருந்தது. அந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிற காரணத்திற்குள் இங்கு போகவில்லை. அது இக்கட்டுரையின் பொருளும் அல்ல. பின்னர் இந்திய அமைதிப் படை இலங்கைக்குப் போனது, திரும்பி வந்தது. ராஜிவ்காந்தி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். அதன் நியாய அநியாயங்கள் பற்றியும் நாம் இங்கு விவாதிக்கவில்லை. (ஆனால், அதனால் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன தெரியுமா? சமூகநீதிக்காகப் பதவியைத் துறந்த வி.பி.சிங் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு பறிபோனது. ராஜிவ்காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட அனுதாபம் காங்கிரசுக்குச் சாதகமாக ஆனது). அப்போது திமுக ஆட்சியிலிருந்தது. விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக- காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரமே அத்தேர்தலில் பிரதானமாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளவும். ஆக காங்கிரஸ் மட்டுமின்றி ஜெயலலிதாவும் 'தமிழினத் துரோகி' ஆனார். இப்போது திமுகவும் தமிழினத் துரோகி எனப்படுகின்றது.
தமிழகத்தில் உள்ள மூன்று பெரிய அரசியல் கட்சிகளும் தமிழினத் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த மூன்று அரசியல் கட்சிகளும் சேர்ந்து கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் வாங்கிய வாக்குகள் எவ்வளவு தெரியுமா? மொத்தம் பதிவான வாக்குகளில் 67 சதவீதம்! இவர்களில் சிலர் விஜய்காந்தின் தலைமையிலான தேமுதிகவையும் தமிழினத் துரோகி பட்டியலில் சேர்க்கின்றனர் (தெலுங்கரான விஜய்காந்திற்கு வாக்களிப்பீர்களா என்று கேட்கின்றனர்). அவர் பெற்ற வாக்குகள் 8 சதவீதம். அதையும் சேர்த்தால் 75 சதவீதம்! அதாவது நான்கில் மூன்று பங்கு மக்கள் தமிழினத் துரோகிகளுக்கு வாக்களித்துள்ளனர்.
இது பழைய கதை. இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது நடந்த 2009 பாராளுமன்றத் தேர்தல் நிலவரம் என்ன என்று யாரேனும் கேட்கலாம். அதையும் பார்ப்போம். தமிழகம், புதுவை இரண்டிலும் சேர்த்து மொத்தமிருந்த 40 தொகுதிகளில் காங்கிரஸ், திமுக, அதிமுக மூன்று கட்சிகளும் சேர்ந்து 37 தொகுதிகளில் வென்றன! (வாக்கு சதவீதம் இன்னும் தேர்தல் இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை). ஆனால், நமக்கொன்றும் பிரம்மைகள் தேவையில்லை. இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து குறைந்த பட்சம் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்றிருக்கலாம். இதன் மூலம் நாம் சொல்ல வருவது என்ன?
இப்போதிருக்கும் நிலைமையிலும் சரி, முன்பிருந்த நிலைமையிலும் சரி தமிழகத்தின் பெரும்பகுதி மக்கள் 'தமிழினத் துரோகிகளுக்கே' வாக்களிக்கின்றார்கள் என்பதுதான். இவர்கள் எந்த இனத்தின் நலனுக்காக தாங்கள் பேசுவதாகச் சொல்கிறார்களோ அந்த இனத்திற்கு 'எதிராக' (?) தமிழக மக்கள் வாக்களிக்கின்றார்கள். அது எப்படி நடக்கும்? இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?
பிரச்சனை மக்களிடம் இல்லை. மக்கள் எப்போதுமே அறிவாளிகள்தான். மக்களையும், அவர்களது பிரச்சனைகளையும் புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்கள் அல்லது புரிந்து கொள்ள விரும்பாதவர்கள் அல்லது தங்களது விருப்பத்தை மக்கள் மீது திணிக்க விரும்புகின்றவர்கள் மக்களை முட்டாள்கள் என்கின்றனர். தமிழ்த் தேசியவாதிகள், விடுதலைப் புலி ஆதரவாளர்கள் ஆகியோரைப் பொருத்த வரையில், அவர்கள் அடிக்கடி புலம்பலாக வெளிப்படுத்தும் ஒரு கருத்து, உலகமே தமிழ் இனத்¬க் கைவிட்டு விட்டது என்பதாகும். ஆனால், எப்போதும் ஏன் உலகம் தங்கள் பிரச்சனையைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை என்பதைப் பற்றி கவலைப்பட்டதேயில்லை. எங்களுக்குப் பிரச்சனை இருக்கின்றது, அது பற்றி அக்கறை கொள்வதைத் தவிர உங்களுக்கு வேறு என்ன வேலை என்கிற அதிகார தோரணையிலிருந்து மட்டுமே இந்த கருத்து எழுகின்றது. ஆனால், இவர்கள் வேறு எந்த மக்களைப் பற்றியும், தமிழகத்தில் வாழும் மக்களைப் பற்றியும் கூடக் கவலைப்பட மாட்டார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பு உலகில், இந்தியாவில் எந்தப் பிரிவு மக்களின், தமிழகத்தின் எந்தப் பிரிவு மக்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கின்றது? எதற்கு ஆதராவாகவாவது ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்கின்றதா? எவன் எக்கேடு கெட்டால் என்ன தங்களது அரசியல் வெற்றி பெற்றால் போதும் என்பதனால்தான் அவர்களால் காஞ்சி கொலைகாரன் ஜெயேந்திரனிடம் பேச்சு வார்த்தை நடத்த முடிகின்றது; மராட்டி இனவெறியன் பால் தாக்கரேயைப் புகழ முடிகின்றது; இங்கே தாமரை மலர்ந்தால் அங்கே ஈழம் மலரும் என்று பாசிஸ்டுகளைப் புகழ முடிகின்றது; இவர்கள் மதச்சார்புள்ளவர்கள், தமிழ் சைவ மதப் பற்றுள்ளவர்கள் என்பதனால்தான் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட முடிகின்றது; முஸ்லிம்கள் தங்களது மதச் சுதந்திரத்தைக் கடைப்பிடிப்பதற்கு எதிராக அவர்களை விரட்டியடிக்க முடிகின்றது; அவர்கள் தங்களது மத நம்பிக்கை உரிமையைக் கைவிட்டு விட்டு தங்களைத் 'தமிழர்கள்' என்று பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அச்சுறுத்த முடிகின்கின்றது.
இது ஒரு பக்கம். இவர்களின் வாதப்படி, மக்களின் மிகப் பெரும் பகுதியினர் தமிழினத் துரோகிகளின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். திமுக கூட்டணி தோற்று அதிமுக கூட்டணி வெற்றி பெற்றாலும், திமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்றாலும் இதுதான் முடிவு. இதுதான் பொருள். அப்படி எனில் பிரச்சனை எங்கே இருக்கின்றது?
அடையாள அரசியல் கோட்பாட்டில் இருக்கின்றது. அடையாளமே எல்லாம் என்று முன் வைக்கப்படுவதால் தமிழகத்தின் மாபெரும் சமூக சீர்திருத்தவாதி பெரியார் தமிழர் இல்லை என்று பழிக்கப்படுகின்றார்; பழிக்கின்றார்கள். (தலித் அடையாள அரசியல் செய்பவர்கள் அவரை தலித் இல்லை என்றும் பழிக்கின்றார்கள்.) அடையாள அரசியல் செய்கிறவர்களிடமாவது ஒத்த கருத்து இருக்கின்றதா என்றால் இல்லை. இருக்காது; இருக்கவும் முடியாது. ஏனெனில், அரசியலில் வேறு பல சக்திகள், காரணிகள் செயல்படுகின்றன. ஆனால் இவர்கள் மீண்டும் அடையாளத்திலேயே அவற்றிற்கு விடை தேட முயல்வதால் அவர்களது அரசியல் நாகரீகமற்றதாகவும், பாசிசத் தன்மை கொண்டதாகவும் ஆகி விடுகின்றது.
தமிழினத் துரோகிகள் என்கிறார்கள்; தமிழனே இல்லை என்கிறார்கள்; தமிழனுக்கே பிறக்கவில்லை என்கிறார்கள்; அப்படியே சீர் கெட்டு சீர் கெட்டு மரபணுப் பரிசோதனையில் மூழ்கிவிடுகின்றனர். அப்புறமும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை என்றால் மரபணுக்களை மேலும் மேலும் பிளப்பதில் இறங்கிவிடுகின்றனர். இறுதியில் பாசிச ரத்தத் தூய்மை கோட்பாட்டில் சரண் அடைகின்றனர். தமிழகத்தில் சங்பரிவாரிகளைப் போலவே காதலர் தினத்தை எதிர்த்த தமிழ் இனவாதம் பேசும் கட்சிகள் இருக்கின்றன (பாமக காதலர் தினத்தை எதிர்த்ததை நினைவில் கொள்க). அது வர்த்தகமயமாக்கப்படுவதற்கான எதிர்ப்பு அல்ல அது; காதல் ரத்தக் கலப்பிற்கு இட்டுச் செல்கின்றது என்பதனால் காட்டப்பட்ட எதிர்ப்பு.




மொத்தத்தில் இந்த ஆராய்ச்சியில் மக்களை மூழ்கடித்துவிட்டு, உள்நாட்டு-பன்னாட்டு முதலாளிகள் தங்களது கொள்ளையை நடத்த முயற்சிக்கின்றனர். நடத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே, திமுக-காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு முதன்மையான காரணமாக அதன் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளும், சமூகக் கொள்கைகளுமே இருக்க வேண்டும். இல்லை என்றால் அக்கூட்டணி தோற்கடிக்கப்பட்டாலும் மக்களின் வாழ்க்க¬ நிலைமையில் குறிப்பிடத்தகந்த எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.

--------------------------------------------------------27.2.11
       






கலாசாரமும் அரசியலும் (பெண்கள் இடஒதுக்கீட்டை முன்வைத்து)


'பெண்கள் நலம் சார்ந்தது என்ற நல்ல நோக்கத்தில்தான் எதிர்க்கட்சிகளும் மகளிர் மசோதாவை நிறைவேற்றியுள்ளன. ஆனால், சில கட்சிகள் பெண்களை அரசியல் பகடைக்காய்களாய்ப் பயன்படுத்துவார்கள் என்பது திண்ணம். பெயரளவில் பெண்களை வைத்து விட்டு அவர்களின் வீட்டு ஆண்கள்தான் அதிகாரம் செலுத்துவர். இப்படிப்பட்ட சூழலில் இம்மசோதாவில் பெண்கள் அடையும் பலன் என்ன?' (தினமணி வாசகர் கடிதம், 17.3.10, மு.விஜயலட்சுமி, கள்ளக்குறிச்சி).
 women_300உண்மையில் இந்தக் கேள்வி பெரும்பாலான சாமான்யர்களின் மனதில் துருத்திக் கொண்டிருக்கின்றது. சாமான்யர்களின் கேள்வி என்பதனாலேயே சாதாரண கேள்வியாக எதுவும் ஆகிவிடாது. அது போல், இதுவும் முக்கியமான கேள்விதான்.
 பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்றால் ஆண்கள் மட்டுமே ஆண்டு கொண்டிருப்பார்கள். நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் ஆண்களின் பிரதிநிதித்துவம் சுமார் 90% இருக்கின்றது. பெண் சிசுக் கொலைகளும், பாலியல் கொலைகளும், வரதட்சணைக் கொலைகளும் இன்னபிற காரணங்களுக்காக பெண்கள் கொலை செய்யப்படுவதும் (பிறக்கும் முன்பும், பிறந்த பின்பும்), தற்கொலை செய்துகொள்வதும் தொடர்ந்து கொண்டிருந்தால் மக்கள் தொகையில் ஆண்களின் விகித்தாச்சாரமும் சட்டமன்றங்களில் அவர்களது பிரதிநிதித்துவமும் சரிசமமாகிவிடும். நிற்க.
 பெயரளவில் பெண்களை வைத்துவிட்டு ஆண்களே ஆள்வார்கள் என்பதற்காக பெண்களுக்கு அதிகாரமளிக்காமலேயே இருந்துவிடலாமா? அப்படி இருப்பது ஆண்கள் மட்டுமே நேரடியாக அதிகாரம் செலுத்துவதைத் தொடரச் செய்யுமே ஒழிய பெண்களின் அதிகாரமற்ற நிலையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிடாது. எனவே, இந்த மசோதாவே பெண்களின் அந்த நிலையை மாற்றுவதற்கான ஒரு முயற்சிதான். பெண்கள் ஆண்களைச் சார்ந்தே இருக்கின்ற நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சிதான். இடஒதுக்கீடு இல்லாவிட்டால் என்ன நிலை நீடிக்குமோ அதே நிலைதான் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டாலும் தொடரும் என்பது சரியான பார்வை அல்ல.    வேறு பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடாது என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் சட்டமன்றங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதே ஒரு பெரிய மாற்றம்தான்.
 மேலும், இதே போன்ற நிலைமைதான் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டபோதும் இருந்தது. அவர்கள் ஏற்கனவே மேல்சாதி பண்ணையார்களின் பிடியில் இருந்ததாலும், தேர்தல் செலவுகளை எதிர்கொள்ளக் கூடிய அளவு பொருளாதார வசதி அற்ற ஏழைகளாக இருந்ததாலும் பண்ணையார்களின் தயவிலேயே அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டியிருந்தது. அதாவது, பண்ணையார்களே மறைமுகமாக தலித்துகள் மூலமாகவும், பழங்குடியினர் மூலமாகவும் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தனர். ஆனால், பின்னர் காலப்போக்கில் அப்பிரிவினர் மத்தியிலிருந்து 'சுயேச்சையான' அரசியல் தலைவர்கள் உருவாகிவிட்டார்கள். இதுதான் யதார்த்தம். இதுதான் பெண்கள் விஷயத்திலும் நடக்கப் போகின்றது. ஏற்கனவே இடஒதுக்கீடு இல்லாத நிலையிலேயே பல பெண் தலைவர்கள் உருவாகி வளர்ந்திருப்பதை நாம் கண்டு கொண்டுதான் இருக்கின்றோம்.
 மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட அனுபவமும் இருக்கின்றது. '..உபி, பீகார் போன்ற மாநிலங்களில் கூட இப்போது கணவன்மார்கள் தங்களை பஞ்சாயத்துத் தலைவரின் கணவர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதை சர்வசாதாரணமாகக் காணலாம்' (அக்சயா முகுல், தி டைம்ஸ் ஆப் இந்தியா, மார்ச் 13, 2010). இது போன்ற காட்சிகள் தமிழ்நாட்டிலும் அங்கங்கே காணக் கிடைக்கின்றன.
 உண்மையில் இது ஒரு சாதாரண விஷயம். பெண் தன்னை இன்னாரின் பெண் அல்லது மனைவி அல்லது சகோதரி என்று அறிமுகப்படுத்திக் கொள்வது எவ்வளவு சாதரணமோ அவ்வளவு சாதாரணம். ஆனால் இதை ஒரு அசாதாரண நிகழ்வு போல் சொல்ல வேண்டியிருப்பதன் காரணம் கலாச்சார மதிப்பீடுகள்தான். கணவனை விட மனைவி உயர்ந்த நிலையில் இருப்பதை ஆணாதிக்க க‌லாச்சாரமும், ஆணாதிக்க மனமும் அனுமதிப்பதில்லை. பெண் பார்க்கும் போதே மாப்பிள்ளையை விட குறைவாகப் படித்த பெண், உயரம் குறைவாக உள்ள பெண் என்று பலவகையிலும் பெண் ஆணைவிட குறைவானவளாக இருக்க வேண்டும் என்று பார்ப்பவர்கள்தானே நாம். ஒரேயொரு விதிவிலக்கு இருக்கின்றது, பொருட்செல்வம். பெண் மாப்பிள்ளையைவிட செல்வம் மிக்கவளாக இருந்தால் அந்தப் பெண் வேண்டி விரும்பிக் கட்டிக் கொள்ளப்படுவாள். அவளுடைய சொத்து மாப்பிள்ளையின் சொத்தாக ஆகிவிடுமல்லவா? அதுதானே நமது கலாச்சாரம்?
 பெண்களின் பெயரில் ஆண்கள்தான் அதிகாரம் செலுத்துவார்கள் என்கின்ற வாதம் நமது கலாச்சார சட்ட திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. எனினும், பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டவள்தான். கலெக்டராகவே ஆனாலும், மந்திரியாகவே ஆனாலும், அதிபராகவே ஆனாலும் பெண் ஆணுக்குக் கட்டுப்பட வேண்டும். பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டும் என்கின்ற இந்தக் கலாச்சாரம் நீடிக்கின்ற வரையில் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் வேலைக்குச் சென்றாலும், சட்டமன்றங்களுக்குச் சென்றாலும் நீடிக்கத்தான் செய்யும் என்பது இந்த வாதத்தின் சாரம்.
 நிலைமை அப்படித்தான் இருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆண் என்றால் சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமல்ல, மற்ற ஆண்களிடமும் அடக்க ஒடுக்கமாகத்தான் நடந்து கொள்ள வேண்டும். இந்தக் கலாச்சார விழுமியம் சாத்தியமான அனைத்து வழிகளிலும் இடைவிடாமல் மறுஉற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. மதம், கல்வி, ஊடகங்கள் அதைச் செய்து கொண்டிருக்கின்றன. (அதிலும் நமது சூப்பர் ஸ்டார்கள் பேசுகின்ற பஞ்ச் டயலாக்குகள் பொறுத்துக் கொள்ளவே முடியாத கலாச்சார வன்முறையாகும்).
 நமது நாடு என்றில்லை. மற்ற நாடுகளிலும் இதுதான் நிலைமை.
 "உள்ளம் குதூகலிக்கும் எண்ணிக்கையில் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் ருவாண்டாவின் பெண் எம்பிக்கள் (56.3%!) பாலினப் பிரச்சனைகளில் போதுமான அளவு கூடுதலாக எதையும் செய்து விடவில்லை" என்று விமரிசிக்கப்படுகிறார்கள். 2007 ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 'நாடாளுமன்றத்தில் அதிகரித்துள்ள பெண்களின் பிரதிநிதித்துவத்தின் தாக்கம்: ருவாண்டா அனுபவம்' என்கிற ஆய்வில், அதன் ஆசிரியர்கள் டேவ்லின் மற்றும் எல்ஜியே ஆகியோர் கடந்த ஏழு வருடங்களில் அவர்கள் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஒரேயொரு முக்கியமான சட்டத்தை நிறைவேற்றுவதில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள் என்கின்றனர்; அதற்கு முன்னர் பாலியல் பலாத்காரம், பாலியல் சித்ரவதை, அன்னையர் உரிமைகள் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்பட பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தகைய பதவிகளுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவது மட்டும் போதுமானதில்லை என்பது தெளிவு. அதனினும் பெரிய பெண்களின் மக்கள்தொகையின் வாழ்நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றால் அவர்கள் உரக்கப் பேச வேண்டும்.
 "பாகிஸ்தானைவிடவும் இது வெளிப்படையாக வேறு எங்கும் இல்லை. இந்த நாட்டில் இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண் பிரதமராக இருந்தார். அதிகாரத்தில் இருந்தபோது பெனாசிர் புட்டோவால் ஹீடூட் சட்டத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் எதையும் மாற்ற முடியவில்லை. வல்லாங்கிற்கு உள்ளான பெண்கள் தங்களுக்கு ஆதரவாக நான்கு ஆண் சாட்சிகளையும் அவர்களே கொண்டு வர வேண்டும், இல்லை எனில்  அவர்கள் 'விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக' கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்கள்', என்பதும் அதில் அடங்கும். 2000த்தில் சட்டமன்றத்தில் 17.5% இடங்களை நாடாளுமன்றம் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்தது; 342 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 60 இடங்கள் பெண்களுக்கு. எனினும், 2009ம் ஆண்டு ஸ்வாட் பள்ளத்தாக்கிற்காக அரசாங்கம் 'நிஜாம் இ அடில் ஷரியா' என்கின்ற சட்டத்தை நிறைவேற்றியது; பெண்கள் பள்ளிக்குச் செல்வதையும், வேலைக்குச் செல்வதையும் தடுப்பது அச்சட்டத்தின் பிற்போக்கான அம்சங்களில் சிலவாகும். எனினும், செர்ரி ரஹ்மான் தவிர வேறு எந்த பெண் பாராளுமன்ற உறுப்பினரும் அதை எதிர்க்க முன்வரவில்லை". (சுஹாசினி ஹைதர், தி ஹிந்து, 12.3.10).

 lady_290பாகிஸ்தானைவிட இந்தியாவில் பெண்களின் நிலைமை பொதுவாகப் பரவாயில்லை என்றபோதும் பெண்கள் அதிகாரத்திற்கு வந்துவிடுவதாலேயே பெண்களின் நிலைமை பெரிதாக மாறிவிடுவதில்லை என்பது இங்கேயும் உண்மைதான். ஒரு பெண் பிரதமராக இருந்திருக்கிறார்; பல பெண் அமைச்சர்கள் இருக்கின்றனர்; பெண் முதலமைச்சர்கள் இருந்திருக்கின்றனர்; இருக்கின்றனர். ஆனால் பெண்களின் பிரச்சனைகள் அதிகம் பெண்களின் நிலையிலிருந்து விவாதிக்கப்படுவதில்லை; மிகப் பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த எந்த மாற்றமும் இல்லை. ஒரே மாதிரியான செயலைச் செய்கின்ற ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்பது தொடரத்தான் செய்கின்றது. வரதட்சிணைக் கொலைகள், மரியாதைக் கொலைகள், ஈவ்டீசிங் கொலைகள், பாலியல் வன்முறைகள், குடும்ப வன்முறைகள், பெண் சிசுக் கொலைகள், பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதற்காகக் கடத்தப்படுவது உள்ளிட்ட ஏராளமான கொடூரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்துடன் பெண்களைத் தற்கொலைக்குத் தள்ளும் கலாச்சார விழுமியங்கள், சட்டதிட்டங்கள் வேறு. (பொதுவாக இந்தியாவில் நடைபெறும் கொலைகள் மற்றும் தற்கொலைகளில் பெரும்பாலானவை கலாச்சார காரணங்களுக்காகத்தான் நடக்கின்றன என்பது கண்கூடு).
 இந்த இடத்தில் இத்தாலிய மார்க்சிய அறிஞர் அந்தோனியோ கிராம்ஷியை நாம் நினைவுறுத்திக் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். 'ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது வெறும் அகழியைத் தாண்டுவது போலத்தான். அதற்கப்பால் கலாச்சாரம் என்கின்ற கோட்டை கொத்தளங்கள் இருக்கின்றன' என்பது அவரது கூற்று. பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சட்டமாக ஆவது என்பது வெறும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது போலத்தான். அதாவது வெறும் அகழியைத் தாண்டுவது போலத்தான். அகழியைத் தாண்டுவதே கோட்டையைக் கைப்பற்றுவதாக ஆகிவிடாது.
 இப்போது கோட்டையைக் கைப்பற்ற வேண்டிய வேலை பாக்கியிருக்கின்றது. அந்த வகையில் கலாச்சார தளத்தில் ஏற்கனவே பல அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அது பெருமளவு போதுமானதாக இல்லை. அதைப் பெருமளவு அதிகரிக்க வேண்டியிருக்கின்றது. ஆணுக்குப் பெண் கட்டுப்பட வேண்டும் என்கின்ற அடிப்படையான கலாச்சார விழுமியத்தை, கோட்டை கொத்தளத்தை உடைத்து நொறுக்கி து£ள்து£ளாக ஆக்க வேண்டியிருக்கின்றது. இருந்த இடம் தெரியாமல் துடைத்து எறியவும் வேண்டும். ஆண்கள் செய்யக் கூடிய எந்த வேலையையும் செய்யக் கூடியவர்களாக பெண்களை உருவாக்குவதுடன் கூடவே இதைச் செய்ய வேண்டும். (அதே போல் பெண்ணுக்கு மட்டுமே என்று இதுநாள் வரை ஒதுக்கப்பட்டிருந்த சமையல், துணி துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், குழந்தைகளை வளர்த்தல் போன்ற வேலைகளை ஆண்களும் செய்கின்ற கலாச்சாரத்தை உருவாக்கி வளர்க்க வேண்டும். அதாவது பெண்களுக்கான அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்). அப்போது பெண்கள் சுதந்திரமாக சிந்திக்கக் கூடியவர்களாகவும், செயல்படக் கூடியவர்களாகவும் பரிணாமம் கொள்வார்கள். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்கிற செயல் தன் முழுபலனையும் அப்போதுதான் அடையும்.

பொதுவாகவே வெறும் அரசியல் நடவடிக்கைகள் மட்டுமே பொருளாதர, கலாச்சார தளங்களில் முழுமையான பலன்களை ஏற்படுத்தி விடுவதில்லை. எடுத்துக் காட்டாக, தீண்டாமை ஒரு குற்றம் என்று சட்டம் போட்டு சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் சட்டம் போட்டவுடனேயே தீண்டாமை மறைந்து விட்டதா என்ன? சட்டத்தை நிறைவேற்ற வேண்டியவர்களே தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள். அது இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றது. வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று சட்டம் போட்டு பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அது இன்னும் பரவலாகத் தொடர்வது மட்டுமின்றி, அதை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகளே அந்தக் குற்றங்களைச் செய்கின்றவர்களாக இருக்கின்றார்கள். அரசின் சட்டங்களை விட கலாச்சாரச் சட்டங்கள் வலுவானவையாக இருக்கின்றன என்பதுதான் இதன் பொருள். இந்தக் கலாச்சாரச் சட்டங்களை ஒழிக்காமல் அரசின் சட்டங்கள் எதிர்பார்க்கின்ற பலனை முழுமையாகத் தராது. அதற்காக எந்த பலனையும் தருவதே இல்லை என்கின்ற முடிவிற்கு வந்துவிட வேண்டாம். இந்தச் சட்டங்கள் போடப்பட்டிருப்பதால்தான் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகின்றவர்கள் புகார் கொடுக்க முடிகின்றது. வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகின்றவர்கள் புகார் கொடுக்க முடிகின்றது. இந்தச் சட்டங்கள் இல்லை என்றால் அத்தகைய செயல்கள் எல்லாம் குற்றமாகவே கருதப்படாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைச் சட்டமாக்குகின்ற காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும், அதை ஆதரிக்கின்ற வகுப்புவாத பாஜக-சிவசேனை போன்ற கட்சிகளும் கலாச்சார தளத்தில் உடைப்பை ஏற்படுத்த தங்களது அணிகளைக் களத்தில் இறக்கிவிடுவார்களா? குறிப்பாக, பெண் ஆணுக்கு அடிமை என்பதை தன்னுடைய தத்துவமாகக் கொண்டிருக்கின்ற பாஜக செய்யுமா? காங்கிரஸ் போன்ற கட்சிகள் கிட்டத்தட்ட கலாச்சார தளத்தில் செயல்படுவதே இல்லை. பாஜகவிற்கோ கலாச்சார தளம்தான் முதன்மையான தளம். மற்றதெல்லாம் அடுத்துதான். ஆனால், இருக்கும் பிற்போக்குக் கலாச்சாரத்தைக் கெட்டிப்படுத்துவதுதான் அதன் நோக்கம்.
 பாஜக இச்சட்டத்தை ஆதரிப்பதை பின்வருமாறுதான் விளங்கிக் கொள்ள முடியும். கலாச்சார தளத்தில் எந்த மாற்றமும் இல்லாதபோது பெண் எம்பியானால் என்ன, மந்திரியானால் என்ன, இதையும் நமது வாக்கு வங்கியை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவர்களது எண்ணமாக இருக்க வேண்டும். இப்பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கலாச்சாரப் பிரச்சனைகளில் இயக்கம் நடத்திக் கொண்டிருக்கும் இடதுசாரி முற்போக்கு சக்திகளை அவர்கள் ஏற்கனவே தங்களது எதிரிகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். இந்த இயக்கங்களும், இதர ஜனநாயக எண்ணம் கொண்ட இயக்கங்களும் கலாச்சார தளத்தில் பெண் விடுதலைக் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும்போது, அதைத் தீவிரப்படுத்தும்போது பாரதீயக் கலாச்சாரம் என்கின்ற பெயரில் அதுவும் அதன் தத்துவக் கூட்டாளிகளும் நிச்சயமாக எதிர்த்தாக்குதல் நடத்தாமல் இருக்கப் போவதில்லை.
   
 அரசியல் நடவடிக்கைகள் கலாச்சார, பொருளாதார விளைவுகளையும் உண்டாக்குகின்றன; கலாச்சார நடவடிக்கைகள் அரசியல், பொருளாதார விளைவுகளையும் உண்டாக்குகின்றன; பொருளாதார நடவடிக்கைகள் அரசியல், கலாச்சார விளைவுகளையும் உண்டாக்குகின்றன.
 கீற்று.காம் (மார்ச் 29, 2010)