Thursday, October 13, 2011

ஊழல் யாத்திரை



அசோகன் முத்துசாமி


மோடியின் ஆட்சி ஊழலற்ற ஆட்சி என்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். டாடாக்களும் அம்பானிகளும் வேறு தனியாக சான்றளிக்கிறார்கள், மோடி நல்லவர் வல்லவர் என்று. கோட்சேயின் வாரிசுகளைப் புகழ்ந்தே பழக்கப்பட்ட நவீன காந்தியவாதி அன்னா ஹசாரேவும் ஆமாம் சாமி என்கிறார்.
ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருப்பது முதலாளித்துவமும் அதன் லாப வெறியும்தான். ஆனால், அந்த முதலாளிகள் ஒருவருக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார்கள் என்றால் நிறையவே யோசிக்க வேண்டியிருக்கிறது. எங்கேயோ இடிக்கிறதே என்கிற சந்தேகம் எழுகின்றது.  ஒரு வேளை இவர் மற்றவர்களைவிடக் குறைவாக வாங்குகிறாரோ? அந்த மகிழ்ச்சியில் அமெரிக்காவும் முதலாளிகளும்  மோடியைக் கொஞ்சி மகிழ்கிறார்களோ? ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு (எவ்வளவு என்று பின்னால் பார்க்கப் போகிறோம்) அள்ளிக் கொடுக்கிறவர் மத்தியில் அதிகாரத்திற்கு வந்தால் எவ்வளவு அள்ளிக் கொடுப்பார் என்பதால்தான் அம்பானிகள் அவர் பிரதமராக வேண்டும் என்கிறார்களோ?
வாருங்கள்  என்னதான் விஷயம் என்று பார்த்துவிடுவோம்.
குஜராத் மாநில காங்கிர° கட்சியின் சார்பில் குடியரசுத் லைவரிடம் மோடி செய்துள்ள ஊழல்கள் பற்றி விரிவாக ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்பது வேறு விஷயம். முதலாளித்துவக் கட்சிகள் தங்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் எதிரிகளைப் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துவது வழக்கம்தானே?
இனி பட்டியல்:
1. மாநிலத் தலைநகர் காந்தி நகரில் மட்டும் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு நிலம் வழங்கப்பட்டதில் 5197 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. மாநிலத் தலைநகரம் தனியே உருவாக்கப்பட்ட ஒரு நகரம். இப்படி தலிநைகரை உருவாக்கும் திட்டத்திற்கு என்று கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அரசு அலுவலகங்கள், சட்டமன்றம், தலைமைச் செயலகம் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கும், அரசு ஊழியர்கள், முன்னுரிமைச் சமூகப் பிரிவினர் ஆகியோருக்கு விடுகள் கட்டிக் கொள்வதற்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எதிர்காலக் கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவைப்படும் என்பதால் அந்த நிலத்தை எந்த தனியாருக்கும் விற்கக் கூடாது. அப்படி விற்க வேண்டிய விசேட நிலை ஏற்படுகின்ற போது அவற்றை பகிரங்க ஏலம் மூலமே விற்க வேண்டும். ஆனால், ஏல முறை பின்பற்றப்படாமல் (2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு போல்) அற்ப விலைக்கு டிஎல்எப் என்கிற கட்டுமான நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீச°, சத்யம் கம்ப்யூட்டர்°, ரகேஜா காhப்பரேஷன் மற்றும் பூரி பவுண்டேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு துhக்கிக் கொடுத்திருக்கிறார்கள். மொத்த 17,67,442 சதுர கிமீ நிலத்தை வெறும் 105 கோடிக்கு விற்றிருக்கிறார்கள். பத்திரப் பதிவுக் கட்டணத்திற்கெனப் பரிந்துரைக்கப்பட்ட விலையின் படி அதன் மதிப்பு 3358 கோடி. சந்தை விலையின்படி அதன் மதிப்பு 5323 கோடி. விற்றதோ வெறும் 105 கோடி. ஆக இழப்பு 5197 கோடி.
2.  டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு 1100 ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர மீட்டர் 900ரூபாய்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. சந்தை விலையோ ரூ10,000 என்கிறார்கள். டாடா நிறுவனம் இந்த நிலத்திற்காகக் கொடுக்க வேண்டியது (ரூ900 என்கிற கணக்கில்) ரூ400 கோடி. அதையும் 6 மாதங்களுக்கு ஒரு முறை ரூ50 கோடி என்று தவணை முறையில் கொடுத்தால் போதும். இந்த நிலமும் கால்நடை பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்டதாகும். முறையான, வெளிப்படையான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல் அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளார்கள்.
இந்த நில பரிமாற்றத்திற்கு டாடா நிறுவனம் செலுத்த வேண்டிய °டாம்ப் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
இந்த திட்டத்தின் மொத்த மதிப்பே வெறும் 2200 கோடிதான். மேற்கு வங்கத்திலிருந்து இந்த திட்டத்தை குஜராத்திற்கு மாற்றிய செலவு 700 கோடி. இரண்டையும் சேர்த்தால் மொத்தம் 2900 கோடி. பொதுவாக கடன் கொடுக்கும்போது இந்த 700 கோடி செலவை நிதிநிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளாது. ஆக அதைக் கழித்துவிட்டால் 2200 கோடிதான் அதன் மதிப்பு. ஆனால், மோடி அரசாங்கத்தால் அதற்கு எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? 9570 கோடி. கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று சொன்னால் தொழிற்சாலையைக் கையகப்படுத்தி, அது அதே 2200 கோடிக்கு விற்றாலும் கூட அரசாங்கத்துக்கு 7370 கோடி நட்டம்.  அதாவது, மக்கள் பணம்.
இந்தக் கடனையும் இருபது வருடங்கள் கழித்து திருப்பிச் செலுத்தினால் போதும். அது வரைக்கும் வட்டி எவ்வளவு தெரியுமா? வெறும் 0.10 சதவீதம்தான். இது போதாதென்று தயாரிக்கப்பட்டு வெளியே வரும் ஒவ்வொரு நானோ காருக்கும் ரூ60,000 மானியமாக வழங்கப்படுகிறது. இது இந்தத் தொழிற்சாலை இயங்கும் வரை தொடரக் கூடியது. குஜராத் மாநில மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் துhக்கிக் கொடுக்கிறார் பாருங்கள், மோடி?
இந்த ஆலை அமைக்கப்பட்டிருக்கும் இடம் நீர்ப்பற்றாக்குறை இடமாக அறிவிக்கப்பட்டுள்ள இடம். ஆதலால், எந்த விவசாயிக்கும் நிலத்தடி நீரை எடுத்துக் கொள்ளும் உரிமை இல்லை. விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பும் கொடுக்கப்படுவதில்லை. நிலத்தடி நீரை உறிஞ்சி விடுவார்களாம். அடப்பாவிகளா, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் நீங்கள் எப்படி உருப்படுவீர்கள் என்று பார்ப்போம்.
ஆனால், டாடா நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 1400 கியூபிக் மீட்டர் நீர் வழங்கப்படுகின்றது. அதாவது, 14 லட்சம் லிட்டர் தண்ணீர். அவசரத் தேவைக்கு நிலத்தடி நீரையும் உறிஞ்சிக் கொள்ளலாம்.
நானோ கார் தொழிற்சாலைக்கு மோடி காட்டியிருக்கும் மொத்த சலுகை சுமார் 33000 கோடி. இந்தத் திட்டத்தை பேசி முடித்தது வெவ்வேறு வகையான கொள்ளையர்களுக்கு இடையில் தரகு பேசும் நீரா ராடியா.
3. முந்த்ரா துறைமுகம் மற்றும் முந்த்ரா சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியவற்றுக்காக அதானி குழுமத்திற்கு 2003, 2004ம் ஆண்டுகளில் 3,86,83,079 சதுர மீட்டர் நிலத்தை பாஜக அரசாங்கம் வழங்கியிருக்கிறது. முதலில் ஒரு ச.மீ. 1 ரூபாய்க்கும் கடைசியாக 32 ரூபாய்க்கும் விற்றிருக்கிறது. உண்மையில் விலை கொஞ்சம் அதிகம்தான். மொத்தம் 46 கோடி ரூபாய். ஆயிரக்கணக்கான கோடி சொத்து மதிப்புள்ள அதானி குழுமம் அநேகமாக கடன் வாங்கித்தான் இந்தத் தொகையைக் கட்டியிருக்கும்.  பாவம், மிகவும் கஷ்டப்படுகிறார்கள் அல்லவா?
இதைவிடப் பெரிய அநியாயம் என்னவென்றால், இதே பகுதியில் சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு ச.மீ. 800லிருந்து 10000 வரை குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள். விற்கவில்லை என்பதைக் கவனிக்கவும். லாபம் தனியாருக்கு, நட்டம் பொது மக்களுக்கு என்பது தனியார்மயம். இதுதான் இந்துத்துவத்தின் கொள்கையும்.
இதன் மூலம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு 10000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
4. குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்பது ஒரு நவரத்னா பொதுத்துறை நிறுவனம். நல்ல லாபத்தில் இயங்கக் கூடியது. மாநிலத்தில் எங்கே எண்ணை, எரிவாயு இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடித்து, உற்பத்தி செய்யும் வேலை அதனிடம் ஒப்படைக்கப்பட்டது. எதிர்காலத்தில் அது பல கோடிக்கணக்கான லிட்டர்கள் எண்ணை,எரிவாயுவை உற்பத்தி செய்யும் என்று கூறப்பட்டது. குஜராத் பெட்ரோலிய மையமாக ஆகும் என்கிறார்கள். பல்வேறு இடங்களிலிருந்து கடன் பெற்று 4933 கோடி ரூபாய் முதலீடு செய்தது அந்த நிறுவனம். 51 இடங்களில் எண்ணை தேடும் உரிமம் பேற்ற அந்நிறுவனம் வெறும் 13 இடங்களில் மட்டும் எண்ணை இருப்பதைக் கண்டுபிடித்தது. 2009, மார்ச் 31 வரை அது வெறும் 297 கோடி பெறுமானமுள்ள எண்ணையையும், எரிவாயுவையும் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. முதலீடோ 4933 கோடி.
இதற்கிடையே ஜியோ குளோபல் என்கிற பன்னாட்டு நிறுவனத்துடன் இந்த அரசுத் துறை நிறுவனம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளது. எதற்காக, ஏன் இந்த ஒப்பந்தம் என்பது யாருக்கும் தெரியாது. எனவே இது விரிவான விசாரணைக்கு உட்டுபடுத்தப்பட வேண்டும். ஏனெனில், ஒன்று எண்ணை கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது அங்கு நிச்சயமாக எண்ணை இருப்பு இருக்க வேண்டும்.
இப்போது அந்நிறுவனம் வேண்டுமென்றே எந்த உற்பத்தியிலும் ஈடுபடவில்லை. அப்படி எனில் என்ன ஆகும்? காலப் போக்கில் அது நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக அறிவிக்கப்பட்டு, எண்ணை வளத்தோடு சேர்த்து அடிமாட்டு விலைக்கு யாராவது தனியாருக்கு விற்கப்படக் கூடும்.
மேலும், கிருஷ்ணா கோதாவரி படுகை ஊழலைப் போலவே இதிலும் நடக்கிறதோ என்கிற சந்தேகம் இருக்கிறது. ஜியோ குளோபல் நிறுவனம் தேவையான இயந்திரங்களை அளிக்கும் என்றும், அதற்கான வாடகையை மட்டுமின்றி உற்பத்தியில் ஒரு பங்கும் அந்நிறுவனத்திற்கு அளிக்கப்படும் என்றும் அந்த ஒப்பந்தம் கூறுகிறது. வெறும் இயந்திரச் சேவை மட்டும் வழங்குவதாக இருந்தால் வாடகைக் கட்டணம் மட்டும் கொடுத்தால் போதும். லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டியதில்லை. இதுதான் வர்த்தக முறை. லாபத்தில் பங்கு வேண்டும் எனில், அந்த நிறுவனமும் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், அப்படி எதுவும் இல்லை.
இந்தப் பட்டியல் மிகவும் பெரியது. பாஜக தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடுவிற்குத் தொடர்புள்ள நிறுவனங்களுக்கு கட்ச் மாவட்டத்தில்  மிகக் குறைந்த விலைக்கு நிலம் அளித்தது, விவசாயப் பல்கலைக்கழக நிலத்தை 7 நட்சத்திர விடுதி கட்டுவதற்கு சாத்ராலா ஹோட்டல் நிறுவனத்திற்கு அற்ப விலைக்கு விற்றது, எ°ஸார் நிறுவனத்திற்கு வன நிலத்தை வழங்கியது,  அகமதாபாத்துக்கு அருகில் ச.மீ. ஒரு லட்சம் மதிப்புள்ள நிலத்தை வெறும் 4424 ரூபாய் விலைக்கு பாரத் ஹோட்டல்° என்கிற நிறுவனத்திற்கு விற்றது என மொத்தம் 17 குற்றச்சாட்டுகள் அந்த மனுவில் உள்ளன.
அரசுக்குச் சொந்தமான விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ மோடி பயன்படுத்துவதே இல்லை. உள்நாட்டுப் பயணமாகட்டும், வெளிநாட்டுப் பயணமாகட்டும் பெரு முதலாளிகள் கொடுக்கும் மிக ஆடம்பரமான தனியார் விமானங்களில்தான் பயணிக்கிறார். மோடி ஏன் தான் விரும்புகிற நபரே ஊழல் தடுப்பு அதிகாரியாக (லோகாயுக்தா) நியமிக்கப்பட வேண்டும் என்கிறார் என்பது இப்போது புரிந்திருக்கும்.
இந்த லட்சணத்தில் அத்வானி ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை போகிறார். அதை அவர் பீகாரில் இருந்து துவக்கியிருக்கிறார். கர்நாடகாவிலிருந்தோ, குஜராத்திலிருந்தோ துவங்கியிருந்தால் அவர் உண்மையிலேயே ஊழலை எதிர்க்கிறார் என்று நம்பலாம்.
------------------------------------------------13.10.11