Friday, May 11, 2012

நித்தியானந்தா நியமனம்-சில விவாதக் குறிப்புகள்


மதுரை ஆதீனத்தை நித்தியானந்தா கைப்பற்றியிருப்பது அல்லது ஆதீனமாக அவர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து இந்துத்துவ அமைப்புகள் அல்லது பிரமுகர்கள் என்ன நினைக்கின்றனர் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கின்றது.
காஞ்சி ஜெயேந்திரர் நியமனத்தை எதிர்த்துள்ளார்.
'மதுரை ஆதீனம் என்பது இந்தியாவின் தலைமையான ஆதீனங்களில் ஒன்று. திருஞான சம்பந்தரால் தலைமை தாங்கப்பட்டது. இந்த மடத்தில் ஆதீனமாகப் பொறுப்பேற்பவர்கள் தலையை மொட்டையடித்து, தலையில் ருத்ராட்சக் கொட்டைகளைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பது மரபு. நித்தியானந்தா அவ்விதம் மொட்டையடித்து ருத்ராட்சம் அணியவில்லை. மேலும், அவர் மீது செக்ஸ் புகார் உள்ளது. அவரது நியமனம் முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல என்று ஜெயேந்திரர் கூறினார்.' (தீக்கதிர், 10.5.12)
செக்ஸ் புகார் பற்றி இவர் பேசலாமா கூடாதா என்பது தனிக்கதை.
இனி சகல இந்துத்துவ சக்திகளையும் ஆட்டுவிக்கும் ஆர்எஸ்எஸ்சின் தமிழகப் பிரச்சாரகர் துக்ளக் சோ என்ன கூறுகிறார் பார்ப்போம்.
'நடந்திருப்பது சரியா தவறா என்பது பற்றிய என் கருத்து என்னோடு இருக்கட்டும். ஆனால், பொதுவாகப் பேசுவது என்றால், இந்த மாதிரி பீடாதிபதிகளை நியமிப்பது (வாரிசுகளை நியமிப்பது) அந்தந்த மடத்தில் ஒரு பரம்பரை வழக்கப்படி நடந்து வருகிறது. இதில் மதுரை ஆதீனம் செய்திருக்கும் நியமனம், அந்த மடத்தின் வழக்கப்படிதான் நடந்திருப்பதாக மடத்தின் சார்பில் கூறப்படுகின்றது. செய்யப்பட்ட தேர்வு சரியா தவறா என்பது பற்றிப் பலவிதக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், நியமனம் செய்கிற உரிமை மதுரை ஆதீனத்திற்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
'சரி, இந்த நியமனம் தவறு என்று நாம் ஆரம்பித்தோமானால், ஒரு மடத்தின் நியமனத்தோடு நாம் நின்று விடுவோமா? அல்லது ஒவ்வொரு மடத்திலும் எப்படிப்பட்ட ஆதீனங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அவர்களுக்குள்ள தகுதிகள் என்ன என்றெல்லாம் ஆராயத் தொடங்குவோமா? அதன் பிறகு மடங்கள் முனிசிபாலிடிகள் மாதிரி விமரிசனத்திற்கு உள்ளாகுமே தவிர, மத ரீதியான அமைப்புகளாக மதிக்கப்படாது. ஒரு மடத்தில் நடக்கிற காரியங்கள் அதைச் சார்ந்துள்ள பக்தர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றால், தங்களுடைய அதிருப்தியைத் தெரிவித்துவிட்டு, அவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாமே?' (துக்ளக் 16.5.12).
தன்னுடைய கருத்து என்ன என்பது பற்றி சோ கூறவேயில்லை. ஆனால், மத பீட நியமனங்களை கேள்வி கேட்கக் கூடாது என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.
சங்பரிவார அமைப்புகள் தவிர்த்து வேறு சில இந்து அரசியல் அமைப்புகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. அவை நித்தியானந்தாவின் நியமனத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதற்கு அடிப்படை அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு. அதே போல், சன் தொலைக் காட்சியில் நித்தியானந்தாவின் படுக்கையறைக் காட்சிகள் (?) ஒளிபரப்பான போது கர்நாடகாவில் சங்பரிவார அமைப்புகள் நித்தியானந்தாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்து மதத்தின் பெயரைக் கெடுத்தவர் என்பது அவர்களது புகார்.
பொதுவாக ஒரு கருத்து சமூக அக்கறையுள்ள சிந்தனையாளர்களின் மத்தியில் நிலவுகிறது. சாமியார்களில் இரண்டு வகைதான் உண்டு; ஒன்று, சிக்கிக் கொண்டவர்கள்; மற்றொன்று, சிக்கிக் கொள்ளாதவர்கள். ஆக, இந்த விவகாரத்தில் அது மையப் பிரச்சனை அல்ல.
ஜெயேந்திரரோ, சோவோ, மற்ற இந்து மதவாதிகளோ மரபுகள் கறாராகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் ஒத்த கருத்து கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் சோ-தான் எதிர்கால விளைவுகள் குறித்தும் எச்சரிக்கை அடைந்தவராக இருக்கிறார். மட விவகாரங்களை ஆராயவே கூடாது என்கிறார். நாளைக்கு பிராமணீய மடங்களும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டால் என்ன ஆவது என்கிற பயம் அவருக்கு இருக்கலாம். அத்துடன் மதம் சார்ந்த முடிவுகளை கேள்வி கேட்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார்.
வலியுறுத்தப்படும் மரபுகளில் சாதியும் ஒன்று என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த நியமனத்தை பார்ப்பன ஜெயேந்திரர் மட்டும் எதிர்க்கவில்லை; இதர சைவ மடாதிபதிகளும் எதிர்க்கின்றனர். அவர்கள் எதிர்ப்பிற்குச் சொல்லும் பிரதானமான காரணம், நித்தியானந்தா சைவப் பிள்ளை அல்ல என்பதாகும்; எனவே, பிராமணீயத்தை எதிர்த்து, அதற்கு மாற்றாக (பவுத்த, சமண மதங்களையும் எதிர்த்ததுதான், தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒழித்ததுதான் சைவ மதம். மதுரை ஆதீனத்தை நிறுவிய திருஞானசம்பந்தர் பற்றி 'ஆயிரம் சமணர்களின் தலை வாங்கியவர்' என்று புகழ் போற்றும் பக்திப் பாடல்கள் இன்றும் மதுரை மாவட்டத்தில் பிரபலம்.) உருவாக்கப்பட்ட சைவ மதம் சாதிக் கட்டமைப்பை மாற்ற விரும்பவில்லை என்பது மட்டுமின்றி, அதைக் கட்டிக்காப்பாற்றியே வந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். இன்ன சாதியினர்தான் மடாதிபதியாக முடியும் என்றால் அதற்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும்? தீண்டாமையை இன்னும் கடைப்பிடிக்கும் மடங்கள்தான் சைவ மடங்கள்.
கிட்டத்தட்ட அனைத்து மடங்களுக்குமே ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இதில் மதுரை ஆதீனம் உள்ளிட்ட சைவ மடங்களும் அடங்கும். மடாதிபதிகள் இவற்றை அனுபவிக்கலாமே ஒழிய தங்களுக்கு உரியதாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. எனினும், இவற்றை தங்களுடையதாக ஆக்கிக் கொள்ள அவ்வப்போது சில மடாதிபதிகள் முயற்சிப்பது வழக்கம்தான். நித்தியானந்தாவின் நியமனத்திலும் சொத்துக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது என்பது இப்போது ஊரறிந்த ரகசியம். பழைய ஆதீனம் தனக்குச் சொந்தமாக சொத்துக்களில் ஒரு பகுதியை லவட்டிக் கொண்டு போக நித்தியானந்தாதான் உதவுவார் என்றோ, உதவ வேண்டும் என்றோ அல்லது அவர் மூலம் வேறு வழியில் வேறு சொத்துக்கள் கிடைக்கும் என்றோ, இப்படி ஏதேனும் ஒரு ஏற்பாட்டின் அடிப்படையில்தான் இந்த நியமனம் நிகழ்ந்திருக்க வேண்டும்.
மேலும், கலாச்சார ரீதியாக பார்க்குமிடத்து ஹைடெக் சாமியாரான நித்தியானந்தாவை ஆதீனமாக நியமித்திருப்பதன் மூலம் மடத்தின் செயல்பாடுகளையும் ஹைடெக்காக ஆக்கும் ஒரு திட்டமும் இருக்கலாம். இருக்கிறது என்றே கூடச் சொல்லலாம். மடத்தின் பக்தர் குடும்பங்களில் சமீபத்தில் கல்வி கற்று உருவான நவீன தலைமுறைக்கு ஏற்ப, உலகமய-தாராளமய-தனியார்மய ஆன்மீக வடிவங்களுக்கு ஏற்ப மடத்தின் ஆன்மீகச் செயல்பாட்டு வடிவங்களை மாற்ற வேண்டிய அவசியத்தை ஆதீனம் உள்ளிட்ட மட நிர்வாகிகள் உணர்ந்ததன் வெளிப்பாடே அல்லது இப்படி ஒரு தொன்மையான மடம் தனக்குத் தேவை என்று நித்தியானந்தா நினைத்ததன் வெளிப்பாடே இந்த நியமனம். உலகமயம் அனைத்து கலாச்சார வடிவங்களின் உள்ளடக்கத்தையும் அப்படியே வைத்துக் கொண்டு தன்னுடைய மேலாடையை அவற்றுக்கு அணிவித்து விடுகின்றது. (இது குறித்து சு.பொ.அகத்தியலிங்கம் உள்பட வேறு சிலரும் எழுதியிருக்கிறார்கள்)
இதன்றி வேறு ஏதேனும் கலாச்சார உள்நோக்கம் இருக்குமா என்பது பற்றியும் யோசிக்க வேண்டும். அதாவது, வைதீகக் கலாச்சாரத்தைத் திணிக்கும் திட்டம் எதுவும் இருக்குமா? நித்தியானந்தாவைப் பொருத்தவரையில், அவர் சாதியில் வேளாளராக இருந்தாலும், சில வேத மரபுகளைப் பின்பற்றுபவராக இருப்பதால் மதுரை சைவ மடத்தின் செயல்பாடுகளில் அது தாக்கத்தைச் செலுத்தலாம். ஆனால், வைதீக சக்திகள் திட்டமிட்டு சைவ மடத்தை வைதீக மடமாக மாற்றுவதற்காக அவரை அனுப்பியிருக்கின்றன என்று கருதுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இதுவரையிலும் இல்லை. அப்படியரு திட்டமே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.
மேலும், காஞ்சி ஜெயேந்திரர் மற்றும் சில இந்துத்துவ அமைப்புகள் அவரது நியமனத்தை எதிர்க்கின்றன; ஏற்கனவே நித்தியானந்தா பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான போது விஎச்பி போன்ற இந்துத்துவ அமைப்புகள் அவரைக் கடுமையாக விமரிசித்தன. ஆனால், சோ மதம், மடம் சம்பந்தமான விவகாரங்களைக் கேள்வி கேட்கக் கூடாது என்கிறார். தன்னுடைய கருத்து என்று அவர் எதுவும் சொல்லவில்லை. மேலும், நித்தியானந்தாவின் நியமனத்தை எதிர்க்கும் இதர சைவ மடாதிபதிகளும் தங்களுடைய எதிர்ப்பிற்கு இப்படி ஒரு காரணத்தைக் கூறவில்லை. எனவே, இது பற்றி முடிவிற்கு வரும் முன் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இக்கருத்துக்களைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது?
சைவம் வைதீகத்திற்கு மாற்றாக மட்டும் எழுந்த மதமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி அது சமணம் மற்றும் பவுத்தம் ஆகியவற்றுக்கு எதிராகவும் எழுந்த மதம். ஆனால், வைதீகத்திற்கு மாற்றாக என்பதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்த அம்சத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை (பார்க்க: அருணன் அவர்களது கட்டுரை, தீக்கதிர், 12.5.12).
சாதியக் கட்டமைப்பில் சைவம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. பார்ப்பன பூசாரிகளின், சமஸ்கிருதத்தின் தேவையற்ற ஒரு வழிபாட்டு முறையை உருவாக்கியிருக்கிறது; அவ்வளவுதான். அதற்காகவே அதை விமரிசிக்காமல் இருப்பது சரியல்ல. திராவிட இயக்கங்கள் வைதீக மதத்தை எதிர்த்த அளவு, வைதீக மடங்களை எதிர்த்த அளவு சைவ மடங்களின் சாதீய, பிற்போக்குத்தனமான மரபுகளையோ, அவற்றின் கொடூர கடந்த காலத்தையோ (எண்ணாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றியது) விமரிசிக்கவில்லை. கண்டிக்கவில்லை.
இன்னும் சொல்லப் போனால் வைதீகத்தின் கொடூரத்தை, அநீதியைக் காரணம் காட்டி இவை வளர மறைமுகமாக உதவின. அவ்வறாக தலித்துகளுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர வழிவகுத்தன. சுருக்கமாகச் சொன்னால், பார்ப்பனர்களின் சமூக ஆதிக்க நிலையை பார்ப்பனரல்லாத மேல்சாதியினர் கைப்பற்றுவதற்கு உதவின. சைவத்தின் பிரதான குறிக்கோள்களில் அதுவும் ஒன்று. மற்றொன்று சமண, பவுத்த எதிர்ப்பு.
இப்போது சமூகத்தின் எல்லா தளங்களில் இல்லை என்றாலும் பல்வேறு தளங்களில் இதர மேல்சாதியினர் ஆதிக்க நிலையை எட்டிக் கொண்டிருக்கும் பின்னணியில், அரசு அதிகாரத்திலும், பொருளாதார அதிகாரத்திலும் கணிசமான பங்கு வகிக்கும் நிலையிலும் வெறும் வைதீக எதிர்ப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது தாழ்த்தப்பட்ட மக்களின், பெண்களின், தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு உகந்ததல்ல. எல்லாப் பழியையும் தூக்கி வைதீகத்தின் மீது அல்லது பார்ப்பனீயத்தின் மீது போடுவது இதர மேல்சாதியினரின் ஆதிக்க நலன்களுக்கே உகந்தது. (கீழவெண்மணிப் படுகொலைகளுக்கு பார்ப்பனீய சதியே காரணம் என்றும் ஒரு கருத்து சொல்லப்பட்டது. இத்தனைக்கும் அங்கு நடந்தது ஒரு வர்க்க, அரசியல் போராட்டம். அதில் பிரதான குற்றவாளி கோபாலகிருஷ்ண நாயுடு என்கிற இதர மேல்சாதிக்காரர்; அவருடன் ஒன்றிரண்டு பார்ப்பன நிலப்பிரபுக்கள் உள்பட வேறு மேல் சாதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்களும் கூட்டு சதி செய்தனர். இன்றும் கூட தலித்துகளின் ஆலய நுழைவுப் போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறையை பிற்படுத்தப்பட்ட சாதியினரும், பிற்படுத்தப்பட்ட சாதியினரை மட்டுமே கொண்ட அரசாங்கங்களும் கட்டவிழ்த்து விடுகின்றன. வன்னியப் பெண்களுக்கு 'சாதிக் கலப்புத்' திருமணம் செய்து வைத்தால் கொன்று போடுவேன் என்று வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மிரட்டுகிறார். இப்படி ஏராளமான உதாரணங்களைக் கொடுக்க முடியும்).  
வகுப்புவாதத்தைப் பற்றி வரலாற்றாசிரியர் பிபன் சந்திரா எழுதியிருக்கும் 'நவீன இந்தியாவில் வகுப்புவாதம்' எனும் நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
'வகுப்புவாதம் குறித்த இப்பகுப்பாய்வு 19ம் நூ£ற்றாண்டின் மத்தியிலிருந்து இந்தியாவில் வளர்ச்சி பெற்று வந்துள்ள வட்டார, சாதிய, மொழி போன்றவற்றின் அடிப்படையிலான மற்ற பிளவுவாதப் போக்குகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. சாதி, வட்டார, மொழிப் பிரச்சனைகள் ஒவ்வொன்றும் வேறுபட்ட, தனித்த அம்சங்களைக் கொண்டிருந்தபோதிலும் அவற்றுக்கும் வகுப்புவாதத்திற்கும் இடையில் பல்வேறு பொதுத்தன்மைகளும், கட்டமைப்புக் கூறுகளும், அதே போல் வேர்களும் செயல்பாடுகளும் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன. அவை ஒரே மாதிரியான சமூகப் போக்குகளைப் பிரதிபலிக்கின்றன. மேலும், இந்த இசங்கள் தங்களுக்கு இடையிலான போட்டியில் ஒன்றையன்று அகற்ற முற்படுகின்றன.' (பக். 8,9).
ஆம், ஒன்றையன்று அகற்றி விட்டு, அதன் இடத்தைப் பிடித்துக் கொள்ளவே இம்மாதிரியான அடையாள அரசியல்கள் முற்படுகின்றன.

12.5.12
------------------------------------------------------------------------------------------------------------------







பண்டையக் கால இந்தியா


நூல் அறிமுகம்:


   
பேராசிரியர் டி.என்.ஜா
தமிழில்: அசோகன் முத்துசாமி
முதல் பதிப்பு: டிசம்பர் 2011
வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை

கி.ரவீந்திரன் (சேலம்)

முனைவர் திவிஜேந்திர நாராயண் ஜா டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்திய வரலாற்றுப் பேரவையின் பண்டைய இந்திய வரலாற்றுத் துறையின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றியவர். இந்து தேசியவாதம் மற்றும் இந்துத்துவம் ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறவர். அந்த வகையில் 'கிஸீநீவீமீஸீt மிஸீபீவீணீ வீஸீ பிவீstஷீக்ஷீவீநீணீறீ ஷீutறீவீஸீமீ' என்ற நூல் மிகவும் குறிப்பிடத்தக்கது. அசோகன் முத்துசாமி இந்நூலை 'பண்டையக் கால இந்தியா' என்கிற பெயரில் மிகச் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி குப்தர்கள் காலம் வரையிலான வரலாற்று நிகழ்வுகளை ஜா இந்த நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார். அறியப்பட்ட வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறுகளே என்கிற புரிதலுடன் கூடிய நூலாசிரியரின் தேடுதலும் ஆய்வும் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுகின்றன.
எகிப்து, மெசபடொமியா நாகரீகங்களைக் காட்டிலும் மிகச் சிறப்பான நகர நாகரீகமாக விளங்கிய சிந்து சமவெளி நாகரீகத்தை நூலாசிரியர் நுணுக்கமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பிரம்மாண்ட நகர அமைப்பும், மாட மாளிகைகளும் இருந்த அதே நேரத்தில், நகருக்கு வெளியே வறியவருக்கான இரு அறைக் குடில்கள் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன என்பதை ஆசிரியர் விவரிக்கும்போது, ஹரப்பா காலத்திலும் வர்க்க வேற்றுமை நிலவி வந்ததை நம்மால் உணர முடிகின்றது. சிந்து சமவெளி மக்கள் வலமிருந்து இடமாக எழுதும் முறையைக் கொண்டிருந்தனர் என்பதையும், இறந்தவர்களைப் புதைத்து கல்லறை கட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதையும் ஆசிரியர் விளக்கும்போது நமக்கு பல புதிய பரிமாணங்கள் புலப்படுகின்றன.
மாட்டிறைச்சி மற்றும் பசு மாமிசம் உண்ணும் வழக்கம் இஸ்லாமியர் வருகையை ஒட்டியே இந்தியாவிற்குள் நுழைந்தது, பசு புனிதமானது, அதைக் கொல்வது இந்து மத விரோதம் என்றெல்லாம் கதைக்கும் இந்துத்துவ அமைப்புகளின் கூற்றுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதை வரலாற்றுச் சான்றுகள் வாயிலாக ஜா நிரூபிக்கின்றார். 'கோக்னா' எனப்படும் விருந்தாளிகளுக்கு பசு மாட்டு இறைச்சியை வழங்கி வேதகால ஆரியர்கள் கௌரவித்தனர்; ரிக்வேதம் பல்வேறு பலிச் சடங்குகளை விவரிக்கும் 428 பாடல்களைக் கொண்டது; ராஜரூய யாகம், அசுவமேத யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்களின் போது பசு மாடுகள் பலியிடப்பட்டு அவற்றின் இறைச்சி விருந்தாக வழங்கப்பட்டது என்பன போன்ற ஆதாரங்களை முன்வைக்கிறார். ஆனால், இன்றோ பசுவைப் புனிதமாக்கி, கொன்றால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று சட்டம் இயற்றுகின்றனர் சங்பரிவாரிகள். எதிரிகளின் நிலத்தைக் கைப்பற்றி புனிதப்படுத்தும் ஆரியர்கள் ஹரப்பாவையும் அவ்வாறே வீழ்த்தியிருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். ஹரியுப்பா என்கிற இடத்தில் ஆரியர்கள் மேற்கொண்ட போரைப் பற்றி ரிக்வேதப் பாடல்கள் சில பாடுவதைச் சுட்டிக் காட்டுகின்றார். நகர்புபற சிந்து வெளி நாகரீகம் அழிந்து, புராதன கிராமப்புற வேதகால நாகரீகம் தொடங்குகிறது. ரிக்வோத கால ஆரம்பத்தில் சமூகம் தாய் வழிச் சமூகத்தின் எச்சமாகவே இருப்பதையும், சமூக ஒழுங்குமுறை எதுவும் உருவாகாத சூழல் நிலவியதையும் ஆசிரியர் விளக்குகின்றார். தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன்-தங்கை போன்ற பாலுறவுகள் நிலவி வந்ததை ஆசிரியர் ரிக்வேதப் பாடல்கள் மற்றும் யாமா-யாமி உரையாடல்கள் உள்ளிட்ட சான்றுகளுடன் சுட்டிக் காட்டுகிறார். ஜனா என்றழைக்கப்பட்ட இனக்குழுத் தலைவனை வழிநடத்த சபா, சமிதி என்ற அமைப்புகள் இருந்தன. அரசருக்குச் செலுத்த உபரியாக மக்களிடம் எதுவும் இருக்கவில்லை. இது போன்ற தகவல்கள் மூலம் அன்று நிலவிய தாய்வழிச் சமுதாயத்தின், புராதனப் பொதுவுடமைச் சமுதாயத்தின் தன்மையை நம்மால் உயர முடிகின்றது.
ரிக்வேத கால முடிவில் இதர மூன்று வேதங்கள் உருப்பெற்றன. (கிமு 1000-600). சபா, சமிதி அமைப்புகள் வலுவிழந்து வாரிசு முறையில் மன்னராட்சி அமைப்பு வலுப் பெற்றதையும், ரிக்வேதப் பலிச் சடங்கு முறைக்கு எதிர்ப்பு மற்றும் மாற்றாக தனிமனித ஒழுங்கு, உயர்வு, ஆன்மா, துறவு போன்றவற்றை உயர்த்திப் பிடிக்கும் உபநிஷத்துகளின் தோற்றத்தையும் தெளிவுபடுத்தும் ஆசிரியர், இவற்றை தனதாக்கிக் கொள்ளும் வகையில் வேதமதம் ஆசிரமம், பிரம்மச்சரியம், கிரகஸ்தம் மற்றும் வனப்பிரஸ்தம் ஆகிய நான்கு தளிமனித நிலைகளை முன்னிறுத்தியதையும் தெளிவுபடுத்துகிறார். இதே காலத்தில் இதே பிரச்சனைகளை முன்வைத்து பௌத்தஇ சமண மதங்கள் உருவாகி வலுப் பெற்றதையும் பதிவு செய்கின்றார்.
வணிக வளர்ச்சி, கடல் கடந்த வணிகம், அங்காடிகள், உணவு விடுதிகள் போன்றவற்றை வேத மதம் மறுத்தது; அதே நேரத்தில் பௌத்த, சமண மதங்கள் இவற்றை ஆதரித்தன. வட்டிக்குப் பணம் கொடுப்பதை வைதீக மதம் கண்டித்தது. பௌத்த சமண மதங்களோ வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்காமல் இருப்பதையும், வட்டி கட்டாமல் இருப்பதையும் கண்டித்தன. அவை அடிமைகளையும், கடன்காரர்களையும் ஏற்றுக் கொள்ள மறுத்தன. வரலாறு தோறும், மதங்கள் தோறும் பொருளாதார ஏற்றதாழ்வுகளே தீர்மானகரமான சக்திகளாக இருந்திருக்கின்றன என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
வேத மதத்தின் வர்ண மற்றும் சாதிப் பிரிவினைகளுக்கு எதிராக பௌத்த சமண மதங்கள் வலுவான போராட்டங்களை நடத்தவில்லை என்கிற குற்றச்சாட்டை ஜா அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
கிமு 6ம் நூற்றாண்டு முதல் 3ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் பெரிய அளவிலான அரசுகள் தோன்றியதைச் சுட்டிக்காட்டும் ஜா, சத்திரிய குலத்தைச் சாராத முதல் சூத்திர அரச வம்சமாக நந்த வம்சம் விளங்கியதையும், அதன் முதல் மன்னன் மகாபத்ம நந்தனின் தாய் ஒரு சூத்திர சாதியைச் சேர்ந்தவர் என்பதையும் குறிப்பிடுகிறார்.
நந்தர்களைத் தூக்கி எறிந்து அரியணை ஏறிய மௌரியர்களே முதல் பேரரசை உருவாக்கினர். சந்திரகுப்தரும் சாணக்கியரும் தங்களது அரசியல் சாதுர்யத்தின் காரணமாக பேரரசிற்கு வழி கோலினர். கலிங்கப் போரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டதே கொடுங்கோலன் அசோகரின் மனமாற்றத்திற்கும், பௌத்த மதமாற்றத்திற்கும் காரணம். மௌரியப் பேரரசிற்கு பெருமளவில் வரிப்பணம் வந்தபோதிலும் (விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு விவசாய வரி) மிகப் பெரிய பேரரசையும், படையையும் நிர்வகிக்கப் போதுமானதாக இல்லை. இறுதியில் அசோகரின் புத்த மதத்தழுவலும், அகிம்சையும், தர்மப் பணிகளும் கஜானாவைக் காலி செய்தன. அசோகரின் இறுதி நாட்களில் அவரிடம் ஒரு அரை மாம்பழம் மட்டுமே இருந்ததாக ஒரு பௌத்த ஜாதகக் கதை தெரிவிப்பதாக ஜா கூறுவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
கிமு 180ல் கடைசி மௌரிய மன்னன் பிருஹத்ரதரை அவருடைய பிராமணப் படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கர் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுகிறார். அதுவே சத்தியரல்லாத முதல் பிராமண வம்ச ஆட்சி என்று அறியப்படுகிறது. நூறு வருடங்கள் நீடித்த பிராமண மன்னர்களின் ஆட்சியை வேத மதம் தன்னுடைய மீட்சிக்குப் பயன்படுத்திக் கொண்டது. 84000 பௌத்த ஸ்தூபிகள் புஷ்யமித்திரனால் அழிக்கப்பட்டன. மௌரியப் பேரரசிற்கும் அதற்குப் பின்னர் அமைக்கப்பட்ட குப்தப் பேரரசிற்கும் இடைப்பட்ட காலத்தில் (கிமு 200 முதல் கிபி 300வரை) பல்வேறு இனமன்னர்களின் ஆட்சிகள் நடைபெற்றன. கிமு முதலாம் நூற்றாண்டில் ஆண்ட பார்த்திய மன்னன் தோன்டோ பர்னசின் அரசவைக்கு புனித தாமஸ் முக்கிய விருந்தினராக வந்தார் என்று ஜா குறிப்பிடுகிறார்.
கிமு முதலாம் நூற்றாண்டிலிருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டு வரையிலான மன்னர்கள், குறிப்பாக சாதவாகனர்கள் தங்களைக் கடவுளின் அவதாரம் என அறிவித்துக் கொண்டனர். இவர்களின் காலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் முழு வீச்சில் துவக்கப்பட்டன. தொழில் கழகங்கள் (கில்டுகள்)  துவக்கப்பட்டன. நால் வருண முறையை சட்டப்படுத்தக் கூடிய மனுதர்மக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது இந்த காலத்தில்தான். உயர் வர்ணத்தவருக்குச் சேவை செய்வதற்காகவே சூத்திரர்கள் படைக்கப்பட்டுள்ளனர் என்கிற கோட்பாடு, பெண்களின் சொத்துரிமையையும் திருமண உரிமையையும் பறிக்கும் சட்டங்கள் அதில் இடம் பெற்றன. பல்வேறு புராணங்களும், மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற இதிகாசங்களும் இந்தக் காலத்தில்தான் படைக்கப்பட்டன. சிவன், விஷ்ணு, கிருஷ்ணன் போன்ற கடவுளர்களும் இக்காலத்தில்தான் சிருஷ்டிக்கப்பட்டனர். பக்தி என்கிற கருத்தாக்கமும், பகவத் கீதையும் இக்காலத்திலேயே உருப்பெற்றன. பரத முனியின் நாட்டிய சாஸ்திரமும் இக்காலத்தைச் சேர்ந்ததே.
கிபி நான்காம் நூற்றாண்டில் நிலை பெற்றது குப்தப் பேரரசு. பள்ளிகளில் போதிக்கப்படுவது போல் குப்தர்களின் காலம் பொற்காலமல்ல  என்பதைத் தெளிவுபடுத்துகிறார், ஜா. குப்தர்களின் காலத்தில் கலை, இலக்கிய, கணித, அறிவியல் வளர்ச்சி ஒரு புதிய பரிமாணத்தை எட்டிய போதிலும், பொது சமுதாயம் சீர் கெட்டது; மனு தர்மமும், வருண வேறுபாடுகளும் தங்களது புதிய உச்சங்களை எட்டின; பாடலிபுத்திரம், அயோத்தி, மதுரா போன்ற நகரங்கள் தங்கள் பொலிவை இழந்தன. அந்நிய வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது. பட்டு நெசவாளர்கள் சௌராஷ்டிரத்தை விட்டு வேறு பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்தனர். தொழில் கில்டுகள் தொழில் அடிப்படையிலான சாதிகளாக உருப்பெற்றன. நிலத்துடன் அதில் பணியாற்றியவர்களும் மன்னரால் சிலருக்கு தானமாக அளிக்கப்பட்டதும், தானமாக அளிக்கப்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமை அவர்களுக்கு அளிக்கப்படடதும் நில உடமைச் சமுதாயம் உருப் பெற்று, வலுப் பெற உதவின. இத்தகைய நிகழ்வுகள் குப்தர்களின் காலம் பொற்காலம்தானா என்கிற கேள்வியை எழுப்புகின்றன.
அம்பா பாலி என்கிற பாலியல் தொழிலாளியின் வீட்டிற்கு புத்தர் விருந்தாளியாகச் சென்றார், சீனாவைச் சேர்ந்த பௌத்தப் பயணி யுவான் சுவாங்க் ஒரு துர்க்கை முன்பு தீ வைத்து பலியடப்பட இருந்தார், திடீரென வீசிய புயல் அவரைக் காப்பாற்றியது போன்ற பல சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவல்கள் நிறைந்த நூல். வரலாற்றியல் பொருள்முதல்வாத நோக்கில் ஒரு தேடல் கோர்வையாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ள இந்நூலை அனைவரும் அவசியம் படிக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.
(புத்தகம் பேசுது மே 2012 இதழில் வெளிவந்துள்ளது)--------------------------------------------------------------------------------------------------------------
 
----