Tuesday, October 25, 2011

தீபாவளிக் கவிதைகள்






குழந்தைகளின் ஏக்கங்களும்
பெற்றோர்களின் கடமைகளும்
தவிப்புடன் 
அலைந்து கொண்டிருந்தன
கடைவீதிகளில்
தீபாவளி அன்றும்
மறுநாளும்
அதற்கு மறுநாளும்.....


----


வெடிச் சத்தத்தில்
நடுங்கிச் சிலிர்த்தன
கசாப்புக் கடையில்
கட்டப்பட்டிருந்த ஆடுகள்.




------

வயிற்று நெருப்பால்
அடுப்புக்கு ஒளி 
ஏற்ற முடியுமா 
என்று ஆராய்ச்சி 
செய்து கொண்டிருபவனுக்கு
தீபாவளி 
தேவர்கள் அசுரர்கள்
யாருடைய பண்டிகையாக
இருந்தால் என்ன?
அந்நியர்களின் பண்டிகைதான்!
-----

பெரிய கடைகள்
மூடிக் கிடக்கின்றன
அவற்றின் வாடிக்கையாளர்களைப் போலவே
கொண்டாடுவதற்கு.


சாலையோர, தள்ளு வண்டிக்
கடைகள் காத்திருக்கின்றன
இன்னும்  
யாராவது வந்தால்
கொண்டாடலாம் என்று. 


1,2,4 கவிதைகள் வண்ணக்கதிர் 6.11.11 இதழில் வெளிவந்துள்ளன.