Thursday, September 1, 2011

தூக்கு


ஜார்ஜ் ஆர்வெல்


தமிழில்: அசோகன் முத்துசாமி

அது பர்மாவில் மழையில் நனைந்திருந்த ஒரு காலை நேரம். மஞ்சள் வெள்ளீயத்தாள் போன்ற மங்கலான மஞ்சள் ஒளி சிறையின் உயர்ந்த மதில்கள் மீது சாய்ந்திருந்தது. மரண தண்டனை கைதிகளின் அறைகளுக்கு வெளியே நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம்; முன்புறம் இரட்டைக் கம்பிகள் கொண்ட, மிருகங்களை அடைத்து வைக்கும் கூண்டுகள் போன்ற அறைகள் வரிசையாக இருந்தன. ஒவ்வொரு அறையும் பத்தடிக்கு பத்தடி அளவு கொண்டது; மரத்தாலான ஒரு படுக்கையும் தண்ணீர் குடமும் தவிர அவற்றுக்குள் வேறொன்றுமில்லை. அவற்றுள் சிலவற்றில் மாநிற மனிதர்கள் தங்கள் உடல்களை போர்வையால் சுற்றிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் மரண தண்டனைக் கைதிகள்; இன்னும் ஓரிரு வாரங்களில் தூக்கிலிடப்படப் போகிறவர்கள்.
எங்களுடைய கைதி அவரது அறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டார். அவர் ஒரு இந்து; உருவில் மிகச் சிறியவர்; குடுமி தவிர தலை முழுமையாக மழிக்கப்பட்டிருந்தது; தெளிவற்ற கண்களில் நீர் ததும்பிக் கொண்டிருந்தது. பெரிய, கனமான மீசை வைத்திருந்தார்; திரைப்படங்களில் வரும் நகைச்சுவை நடிகரைப் போல அவரது உடலின் அளவிற்கு ஒவ்வாத வகையில் நகைப்பிற்கிடமான அளவு மிகப் பெரிய மீசை. உயரமாக வளர்ந்திருந்த ஆறு இந்திய சிறைக் காவலர்கள்  அவருக்குப் பாதுகாப்பாக இருந்தார்கள்; அவரை தூக்கு மேடைக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முனையில் கத்தி பொருத்தப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் அருகில் நின்றிருந்தனர்; மற்றவர்கள் அவருக்கு கைவிலங்கு மாட்டி, அதன் சங்கிலியை விலங்கிற்குள் சுற்றி, தங்களது இடுப்பு பெல்டுடன் பிணைத்துக் கொண்டனர்; அவரது கைகளை அவருடைய உடலுடன் இறுக்கமாகச் சேர்த்துக் கட்டினர். அவருக்கு மிக நெருக்கமாக முண்டியடித்துக் கொண்டிருந்த அவர்களது கைகள் எப்போதும் அவரது உடலின் மீதே இருந்தன; வருடிகொடுப்பது போலவும், எச்சரிக்கையாகவும் அவரைப்  பிடித்திருந்தன. அவரைத் தொட்டு உணர்ந்து கொண்டே இருப்பதன் மூலம் அவர் தங்கள் பிடியில்தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொள்வது போல பற்றியிருந்தனர். இன்னும் உயிருள்ள மீனை, தண்ணீருக்குள் தாவிவிடக் கூடிய மீனைப் பிடித்திருப்பது போல. ஆனால், அவர் எதிர்க்காமல் அமைதியாக நின்றிருந்தார்; என்ன நடக்கிறது என்றே தெரியாதவர் போல் தனது கைகளை தளர்ச்சியாகக் கயிற்றுக்குக் கொடுத்திருந்தார்.
கடிகாரம் எட்டு முறை ஒலித்தது; தூரத்தில் பாசறையிலிருந்து கொம்பொலி ஈரக்காற்றில் தனியே மிதந்து வந்தது. எதையோ யோசித்த வண்ணம் எங்களிடமிருந்து தனியே பிரிந்து நின்று தன்னிடமிருந்த கைத்தடியால் சரளைக் கற்களைக் குத்திக் கிளறிக் கொண்டிருந்த சிறைக் கண்காணிப்பாளர் அந்த ஓசை கேட்டு நிமிர்ந்தார். அவர் ராணுவ மருத்துவராக இருந்தவர்; டூத் பிரஷ் போன்ற வெள்ளை மீசையும், கரகர குரலும் கொண்டவர். 'கடவுளே, பிரான்சிஸ் சீக்கிரம் சீக்கிரம்' என்றார், எரிச்சலுடன். 'இந்த மனிதன் இந்நேரம் செத்துப் போயிருக்க வேண்டும். இன்னுமா நீ தயாராகவில்லை?'.
தலைமை சிறைக் காவலரான பிரான்சிஸ் ஒரு திராவிடர்; குண்டாக இருந்த அவர் உடற்பயிற்சி ஆடையும், தங்க பிரேம் போட்ட கண்ணாடியும் அணிந்திருந்தார்; 'இதோ ஐயா, இதோ' என்று கையசைத்த வண்ணம் வெறுமையாகக் கூறினார். 'எல்லாம் திருப்திகரமான வகையில் தயாராக இருக்கிறது. தூக்கிலிடுபவர் காத்துக் கொண்டிருக்கிறார். நாம் போகலாம்'.
'நல்லது, அப்படியானால் வேகமாக நடந்து செல்லுங்கள். இந்த வேலை முடிகிற வரையில் கைதிகளுக்குக் காலைச் சிற்றுண்டி கொடுக்க முடியாது'.
நாங்கள் தூக்கு மேடையை நோக்கி நடந்தோம். கைதியின் இருபக்கமும் இரு சிறைக் காவலர்கள் தங்கள் தூப்பாக்கிகளை கீழ் நோக்கி சாய்த்துப் பிடித்த வண்ணம் நடந்து வந்தனர். மற்றும் இருவர் அவரது கைகளையும், தோள்பட்டைகளையும் இறுகப் பற்றிய வண்ணம் அவருக்கு மிக நெருக்கமாக நடந்து வந்தனர்; ஏககாலத்தில் அவரைத் தள்ளிக் கொண்டும், அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டும். மாஜிஸ்டிரேட்டுகளும் அவர்களைப் போன்றவர்களுமான எஞ்சிய நாங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தோம். ஒரு பத்து கெஜம் நடந்திருப்போம்; எங்களது ஊர்வலம் எவ்வித உத்தரவோ அல்லது எச்சரிக்கையோ இன்றி திடீரென்று நின்றது. ஒரு பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துவிட்டது; எப்போது என்ன நடக்கும்  என்று யாருக்குத் தெரியும்? ஒரு நாய் சிறைச்சாலைக்குள் தோன்றியது. சத்தமாகக் குறைத்துக் கொண்டே எங்களுக்கு மத்தியில் வந்தது; அத்தனை மனிதர்களை ஒன்றாகப் பார்த்த மகிழ்ச்சியில் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே எங்களைச் சுற்றித் சுற்றித் தாவியது. அது ரோமங்கள் நிறைந்த பெரிய நாய்; ஏர்டேல் வகைக் கலப்பினம்......ஒரு கணம் எங்களைச் சுற்றி இறுமாப்புடன் நடந்தது; பின்னர், எவரும் அதைத் தடுக்கும் முன்னர், அது கைதியை நோக்கிப் பாய்ந்து அவரது முகத்தை நக்க முயற்சித்தது. நாயைப் பிடிக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் எல்லோரும் திகைத்துப் போய்விட்டோம்.
'இந்தக் கொடூரமான மிருகத்தை யார் உள்ளே விட்டது? யாராவது அதைப் பிடியுங்கள்' என்று கண்காணிப்பாளர் கோபமாகக் கூறினார்.
பாதுகாப்பிலிருந்து விலகிய ஒரு சிறைக் காவலர் அலங்கோலமாக நாயை விரட்டிக் கொண்டு ஓடினார். ஆனால், அது அவரது பிடிக்குள் சிக்காமல், எல்லாவற்றையும் விளையாட்டின் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டது போல், துள்ளிக் குதித்தாடியபடி ஓடியது. கை நிறைய கற்களை எடுத்துக் கொண்ட ஒரு இளம் யுரேசியக் காவலர் நாயைக் கல்லால் அடித்து விரட்டிவிட முயற்சித்தார்; ஆனால், அது கற்களிடமிருந்து தப்பித்து மீண்டும் எங்களை நோக்கி வந்தது. அதன் குரைப்புச் சத்தம் சிறைச் சுவர்களில் எதிரொலித்தது. இரண்டு சிறைக் காவலர்களின் பிடியில் இருந்த கைதி இதுவும் தூக்கிலிடுவது தொடர்பான ஒரு சம்பிரதாயம் என நினைத்துக் கொண்டவர் போல் ஆர்வமின்றி பார்த்துக் கொண்டிருந்தார். பல நிமிடங்களுக்குப் பின்னர் யாரோ ஒருவர் அந்த நாயைப் பிடித்துவிட்டார். பின்னர் நாங்கள் என்னுடைய கைக்குட்டையை அதன் கழுத்தில் சுற்றி இழுத்துக் கொண்டு மேலே நகர்ந்தோம். நாய் இன்னும் திமிறிக் கொண்டும், சிணுங்கிக் கொண்டும் இருந்தது.
தூக்கு மேடை இன்னும் நாற்பது கெஜம் தூரத்தில் இருந்தது. எனக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த கைதியின் வெற்று முதுகைப் பார்த்தேன். கட்டப்பட்ட கைகளுடன் நயமின்றி, ஆனால் தடுமாறாமல் உறுதியாக நடந்தார்; எப்போதும் தன்னுடைய முழங்கால்களை நேராக வைக்காத இந்தியராக சற்று குலுங்கி குலுங்கி நடந்தார். அவர் ஒவ்வொரு அடி வைக்கும்போதும் அவரது தசைகள் மிகச் சரியான இடத்திற்குச் சரிந்து வந்தன, அவரது தலைக் குடுமி மேலும் கீழும் ஆடியது, ஈரமான சரளைக் கற்களில் அவரது கால்கள் தடம் பதித்தன. அவரது தோள்களை சிறைக்  காவலர்கள் இறுகப் பற்றியிருந்தபோதிலும் பாதையிலிருந்த சேற்றுக் குட்டையைத் தவிர்ப்பதற்காக அவர் ஒரு முறை சற்று விலகி நடந்தார்.
அது புதிர்தான்; ஆனால், ஆரோக்கியமான, சுயநினைவுள்ள ஒரு மனிதனை அழிப்பதென்றால் என்னவென்று அந்த கணம் வரையிலும் நான் உணர்ந்திருக்கவில்லை. சேற்றுக் குட்டையைத் தவிர்ப்பதற்காக அந்த மனிதர் சற்று விலகி நடந்ததைப் பார்த்தபோது, முழு வீச்சில் இருக்கும் ஒரு வாழ்க்கையை வெட்டிச் சுருக்குவதன் மர்மத்தையும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத தவறையும் கண்டேன். இந்த மனிதர் செத்துக் கொண்டிருக்கவில்லை. நம்மைப் போலவே அவரும் உயிருடனே இருந்தார். அவரது உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கிக் கொண்டிருந்தன; குடல்கள் உணவைச் செரித்துக் கொண்டிருந்தன; தோல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டிருந்தது; நகங்கள் வளர்ந்து கொண்டிருந்தன; திசுக்கள் உருவாகிக் கொண்டிருந்தன; மனப்பூர்வமான முட்டாள்தனத்துடன் அனைத்தும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தன. தூக்கு மேடையில் அவர் நின்று கொண்டிருக்கும்போதும், வாழ்வதற்கு ஒரு நொடியில் பத்தில் ஒரு பாகம் நேரம் மட்டுமே இருக்கும் வகையில் மேடை விலகி அவர் கீழே விழும்போதும் அவரது நகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும். அவரது கண்களால் மஞ்சள் நிறக் கற்களையும், சாம்பல் நிறச் சுவர்களையும் பார்க்க முடிந்தது; அவரால் நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது; அவரால் முன்னுணர முடிந்தது; அவரால் பகுத்தறிய முடிந்தது-சேற்றுக் குட்டைகளையும் பகுத்தறிய முடிந்தது. அவரும் நாங்களும் ஒன்றாக நடந்து கொண்டிருந்த, ஒரே உலகத்தை பார்த்துக் கொண்டிருந்த, கேட்டுக் கொண்டிருந்த, உணர்ந்து கொண்டிருந்த, புரிந்து கொண்டிருந்த ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். இன்னும் இரண்டு நிமிடங்களில், சொடக்கென்ற ஒரு அதிவிரைவான  முறிவில், 'இருவரில்' ஒருவர் இறந்திருப்போம்-ஒருவர் அறிவற்றவர், ஒருவர் உலகமற்றவர்.
சிறையின் பிரதானப் பகுதியிலிருந்து தனியாக ஒரு சிறு முற்றத்தில் தூக்கு மேடை இருந்தது. உயரமான முட்புதர்கள் அளவுக்கு மீறி வளர்ந்திருந்தன. அது ஒரு கொட்டகையின் மூன்று பக்கங்கள் போல செங்கல்லால் கட்டப்பட்டிருந்தது; மேலே மரப்பலகையால் மூடப்பட்டிருந்தது. அதன் மீது இரண்டு தூண்களும், அவற்றுக்குக் குறுக்கே ஒரு உத்தரமும் இருந்தது; அதில் கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. தூக்கிலிடுபவர் சிறையின் வெள்ளைச் சீருடை அணிந்திருந்த தண்டனைக் கைதி; தலை நரைத்திருந்த அவர் தன்னுடைய இயந்திரத்திற்குப் பக்கத்தில் காத்துக் கொண்டிருந்தார். நாங்கள் நுழைந்தபோது ஒரு அடிமை போல் குனிந்து எங்களை வரவேற்றார். பிரான்சிஸினுடைய உத்தரவின்படி கைதியை இறுகப் பிடித்திருந்த சிறைக்காவலர்கள் இருவரும் அவரைத் தூக்கு மேடைக்கு தள்ளிக் கொண்டு போயினர்; மேடைப் படிகளில் ஏறுவதற்கு உதவினர். பின்னர் தூக்கிலிடுபவரும் மேலே ஏறி கயிற்றை கைதியின் கழுத்தைச் சுற்றி மாட்டினார்.  
ஐந்து கெஜ தூரத்தில் நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். தூக்கு மேடையைச் சுற்றி சிறைக் காவலர்கள் ஒரு வட்டமாக நின்றார்கள். சுருக்குக் கயிறு பொருத்தப் பட்ட பின்னர் கைதி கடவுளின் பெயரைச் சொல்லி கூக்குரலிடத் துவங்கினார். அது 'ராம்! ராம்! ராம்! ராம்!' என்று சத்தமாக, மீண்டும் மீண்டும் வலியுறுத்திய அழுகுரல். அது அவசர அவசரமாகக் கூறப்பட்டதோ, பயத்தில் கூறப்பட்ட பிரார்த்தனையோ அல்லது உதவி கோரும் ஓலமோ அல்ல; ஆனால், அது கிட்டத்தட்ட மணியோசை போல் ஒரு சீராக, லயமாக இருந்தது. அந்த ஓலிக்கு நாய் ஒரு சிணுங்கலைப் பதிலாகக் கூறியது. தூக்கு மேடையில் நின்று கொண்டிருந்த தூக்கிலிடுபவர் மாவுப் பை போன்ற ஒரு சிறு பருத்திப் பையை எடுத்தார். அதை கைதியின் முகத்தில் போட்டு மூடினார். ஆனால், அந்தத் துணியால் கம்மிய அந்த குரல் இன்னும் தொடர்ந்து பிடிவாதமாக ஒலித்துக் கொண்டிருந்தது. 'ராம்! ராம்! ராம்! ராம்!' என்று மீண்டும் மீண்டும் ஒலித்தது.
தூக்கிலிடுபவர் கீழே இறங்கி நெம்புகோலைப் பிடித்துக் கொண்டு விறைப்பாக நின்றார். நிமிடங்கள் கழிவது போல் தோன்றியது. கைதியின் கம்மிய அழுகுரல் ஒரு கணம் கூட தடுமாறாமல் 'ராம்! ராம்! ராம்!' என்று ஒலித்துக் கொண்டே இருந்தது. தலை குனிந்து நின்றிருந்த கண்காணிப்பாளர் தன் கைத்தடியால் மெல்ல தரையைக் குத்திக் கிளறிக் கொண்டிருந்தார். அநேகமாக அவர் அந்த கூக்குரல்களை எண்ணிக் கொண்டிருக்கலாம்; கைதி ஐம்பது அல்லது நூறு தடவை கூக்குரலிடலாம் என்று அவர் ஒரு எண்ணிக்கையை நிர்ணயித்திருக்கலாம். கெட்டுப் போன காபி போல் இந்தியர்கள் வெளிறிப் போயிருந்தார்கள். ஒன்றிரண்டு துப்பாக்கி முனைக் கத்திகள் தள்ளாடிக் கொண்டிருந்தன. முக்காடிடப்பட்டு தூக்கு மேடையில் நின்றிருந்த அந்த மனிதரைப் பார்த்தோம். அவரது கூக்குரல்களைக் கேட்டோம். ஒவ்வொரு கூக்குரலுக்கும் அவரது ஆயுள் இன்னுமொரு நொடி அதிகரிக்கிறது. எங்கள் எல்லோர் மனதிலும் இந்த சிந்தனைதான் இருந்தது: 'சீக்கிரமாக அவரைக் கொன்று காரியத்தை முடியுங்கள்; சகிக்க முடியாத அந்த சத்தத்தை நிறுத்துங்கள்!'
திடீரென்று கண்காணிப்பாளர் முடிவெடுத்துவிட்டார். தலையை நிமிர்த்தி தன்னுடைய கைத்தடியை வேகமாக ஆட்டினார். 'ஆகட்டும்' என்று கிட்டத்தட்ட மூர்க்கமாகக் கத்தினார்.
சலசலக்கும் ஓசை கேட்டது; பின்னர் மயான அமைதி. கைதி மறைந்து விட்டார். கயிறு தன்னைத் தானே முறுக்கிக் கொண்டிருந்தது. நான் நாயை என் பிடியிலிருந்து விடுவித்தேன். அது உடனடியாக தூக்கு மேடையின் பின்பக்கத்திற்குத் தாவி ஓடியது. ஆனால், அது அங்கு சென்றவுடன் சட்டென்று நின்றது; குரைத்தது; பின்னர் கொட்டடியின் ஒரு மூலைக்குப் பின்வாங்கியது; முட்புதர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு, அஞ்சி நடுங்கியவாறு எங்களைப் பார்த்தது. கைதியின் உடலைப் பரிசோதிப்பதற்காக நாங்கள் மேடையைச் சுற்றிச் சென்றோம். கால் பெருவிரல்கள் நேராகக் கீழ் நோக்கிப் பார்த்திருக்க, ஒரு கல்லைப் போல் உயிரற்று, மெல்லச் சுழன்ற வண்ணம் அவர் தொங்கிக் கொண்டிருந்தார்.
கண்காணிப்பாளர் தன்னுடைய கைத்தடியை நீட்டி அந்த வெற்றுடம்பைக் குத்திப் பார்த்தார். அது சற்று இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஆடியது. 'அவர் நன்றாக இருக்கிறார்' (லீமீ's ணீறீறீ க்ஷீவீரீலீt) என்றார் கண்காணிப்பாளர். தூக்கு மேடைக்குக் கீழே இருந்து வெளியே வந்தார்; ஆழமான பெருமூச்சு விட்டார். அவர் முகத்தில் இருந்த ஆழ்ந்த யோசனை சட்டென்று விலகிவிட்டிருந்தது. அவர் தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். 'மணி எட்டு எட்டாகிவிட்டது. நல்லது, இன்று காலை வேலை முடிந்தது. கடவுளுக்கு நன்றி'.
சிறைக் காவலர்கள் தங்களது துப்பாக்கி முனைக் கத்திகளைக் கழற்றினர்; அவ்விடத்தைவிட்டுச் சென்றனர். தான் தவறாக நடந்து கொண்டதை உணர்ந்து அமைதியடைந்திருந்த நாய் அவர்கள் பின்னால் சந்தடியின்றிச் சென்றது. தூக்கு மேடைக் கொட்டடியைவிட்டு வெளியே வந்தோம்; மரண தண்டனைக் கைதிகள் இருந்த அறைகளைக் கடந்து, சிறையின் மையத்தில் இருந்த பெரிய முற்றத்திற்கு நடந்தோம். தடிகள் வைத்திருந்த சிறைக்காவலர்களின் கட்டுப்பாட்டில் தண்டனைக் கைதிகள் ஏற்கனவே தங்களது காலை உணவைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். நீண்ட வரிசையில் தரையில் அமர்ந்திருந்த அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் தகரத் தட்டு இருந்தது; இரண்டு சிறைக் காவலர்கள் வாளிகளில் இருந்து அரிசிச் சோறு போட்டுக் கொண்டே வந்தார்கள்; தூக்கிலிடப்பட்டதைப் பார்த்த பிறகு அது ஒரு மிகவும் இனிமையான, மகிழ்ச்சியான காட்சி போல் இருந்தது. வேலை செய்து முடிக்கப்பட்டு விட்டதில் எங்களுக்கு ஒரு பெரும் சுமை இறக்கப்பட்டுவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டிருந்தது. பாட வேண்டும் போல், வேகமாக ஓட வேண்டும் போல், உள்ளூறச் சிரிக்க வேண்டும் போல் ஒரு உந்துதல் ஏற்பட்டது. உடனே எல்லோரும் மகிழ்ச்சியாக வளவளவென்று பேசத் துவங்கினார்கள்.
என்னருகே நடந்து வந்து கொண்டிருந்த யுரேசிய இளைஞன் நாங்கள் வந்த வழியை நோக்கி தலையசைத்துக் கொண்டே வந்தான்; பரிச்சயமான புன்னகையுடன் கூறினான்: 'ஐயா, உங்களுக்குத் தெரியுமா, நம்முடைய நண்பர் (செத்துப் போன மனிதரைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்) அவருடைய மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுவிட்டது என்பதைக் கேட்டவுடன் பயத்தால் தன்னுடைய அறையின் தரையில் சிறுநீர் கழித்துவிட்டார். -ஐயா, தயவு செய்து என்னுடைய சிகரெட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஐயா, என்னுடைய புதிய வெள்ளி சிகரெட் பெட்டியை நீங்கள் மெச்ச மாட்டீர்களா? பாக்ஸ்வாலாவிடமிருந்து இரண்டு ரூபாய் எட்டணாவிற்கு வாங்கினேன். அற்பபுதமான ஐரோப்பிய பாணி பெட்டி'.
பலர் சிரித்தார்கள்; ஆனால், யாருக்கும் எதற்காகச் சிரிக்கிறோம் என்பது உறுதியாகத் தெரியாது.
கண்காணிப்பாளருடன் நடந்து வந்து கொண்டிருந்த பிரான்சிஸ் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தார். 'ஐயா, நல்லது, எல்லாம் மிகவும் திருப்திகரமாக முடிந்தது. எல்லாம் இப்படி சொடக்கென்று முடிந்துவிட்டது. எப்போதுமே இப்படி இருப்பதில்லை. மருத்துவர்கள் தூக்குமேடைக்குக் கீழே குனிந்து சென்று கைதியின் காலை இழுத்துப் பார்த்து அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்ய வேண்டிய நிகழ்வுகள் பற்றி எனக்குத் தெரியும். மிகவும் ஏற்றுக் கொள்ள முடியாதது!'
'உடலை வளைத்து நெளிக்க வேண்டியிருப்பது? அது மோசம்' என்றார் கண்காணிப்பாளர்.
'ஆம் ஐயா, அவர்கள் சமாளிக்க முடியாதவர்களாக ஆகும் போது ரொம்ப மோசம். எனக்கு நினைவிருக்கிறது. ஒருவரை நாங்கள் வெளியே அழைத்து வரச் சென்ற போது அவரது கூண்டின் கம்பிகளை இறுகப் பற்றிக் கொண்டுவிட்டார். நீங்கள் நம்பமாட்டீர்கள் ஐயா, அவரைப் பெயர்த்து எடுப்பதற்கு ஆறு சிறைக் காவலர்கள் தேவைப்பட்டார்கள். ஒவ்வொரு காலையும் மூன்று பேர் பிடித்து இழுத்தார்கள். நாங்கள் அவருக்குப் புரிய வைக்க முயற்சித்தோம். 'அன்பான நண்பரே, எங்களுக்கு எவ்வளவு வேதனையும் தொந்தரவும் கொடுக்கிறாய் என்று நினைத்துப் பார்' என்று கூறினோம். ஆனால், அவர் அதைக் கேட்கவில்லை. அவர் ரொம்பவும் தொந்தரவு கொடுத்துவிட்டார்!'.
நான் மிகவும் சத்தமாகச் சிரித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். கண்காணிப்பாளரும் கூட நடுவாந்திரமாகப் புன்னகைத்தார். 'நீங்கள் அனைவரும் என்னுடன் வெளியில் வாருங்கள், மது அருந்தலாம்' என்று மிகவும் நட்புடன் அழைத்தார். 'என்னுடைய காரில் ஒரு பாட்டில் விஸ்கி இருக்கிறது. நாம் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்'.
சிறையின் மிகப் பெரிய இரட்டைக் கதவுகளைத் தாண்டி சாலைக்குச் சென்றோம். 'அவருடைய கால்களை இழுத்துப் பார்ப்பது' என்று திடீரெனக் கூவிய பர்மா நீதிபதி ஒருவர் சத்தமாக வாய்விட்டுச் சிர்ததார். நாங்கள் அனைவரும் மீண்டும் சிரிக்கத் துவங்கினோம். அக்கணம் பிரான்சிஸ் கூறிய கதை மிக மிக வேடிக்கையானது போல் தோன்றியது. உள்நாட்டுக்காரர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் என நாங்கள் அனைவரும் மிகவும் நட்புணர்வுடன் மது அருந்தினோம். செத்துப் போன மனிதர் நூறு கெஜங்களுக்கு அப்பால் இருந்தார்.

நன்றி: தி ஹிந்து, 31.8.11
  ........................................