Saturday, November 19, 2011

மீண்டும் காலனியாக்கப்பட்ட லிபியா

















   

அய்ஜாஸ் அகமது

தமிழில்: அசோகன் முத்துசாமி

2001 அக்டோபரிலிருந்து 2011 அக்டோபர் வரை காபூல் முதல் திரிபோலி வரையில் பத்தாண்டுகளில் நடத்தப்பட்ட ஈவிரக்கமற்ற புவிக் கோள யுத்தத்தில் இந்துகுஷ் மலையிலிருந்து ஆப்பிரிக்காவின் மத்திய தரைக்கடல் கரையின் வடக்கு முனை வரையிலான மிகப் பரந்த பரப்பில் உள்ள நாடுகள் பாழாக்கப்பட்டன; தலைநகரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. அரபு உலகத்திற்கு உள்ளேயே இந்த அமெரிக்க-ஐரோப்பிய நரபட்சிணிகளின் அதி தீவிர ஏகாதிபத்தியத் தாக்குதல் இன்னும் சிரியா வரையிலும் செல்லலாம்; எதிர்காலத்தில் ஏதோ ஒரு தேதியில் அதற்கும் அப்பால் ஈரானுக்கும் செல்லலாம். எப்படியாயினும் இப்போதைக்கு நேட்டோ வாடிக்கையாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களால் லிபியா ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது அண்டை நாடுகளான டுனிஷியாவிலும் எகிப்திலும் முன்னர் இவ்வருடத்தில்  பற்றவைக்கப் பட்டதிலிருந்தே அணைக்க முயற்சிக்கப்பட்டு வந்த கலக நெருப்பு வென்றடக்கப்பட்டதைக் குறிக்கிறது. எனினும், ஆப்பிரிக்காவின் பெரும் பகுதிக்கு இது அமெரிக்க-ஐரோப்பிய கூட்டமைப்பு தொடுக்கும் ஆக்கிரமிப்பு யுத்தத்தின் மற்றுமொரு துவக்கமாக மட்டுமே இருக்கலாம்; அது 19ம் நூற்றாண்டின் இறுதியில் பெர்லினில் புனிதப்படுத்தப்பட்ட பிரபலமான 'ஆப்பிரிக்காவிற்கான யுத்தத்தை' விட இன்னும் மோசமாக அக்கண்டத்தை நாசமாக்கலாம். (ஆப்பிரிக்காவிற்கான யுத்தம் அல்லது ஆப்பிரிக்காவிற்கான போட்டி என்பது 1881லிருந்து 1914 வரையில் ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்காவின் மீது படையெடுத்ததையும், அதன் பகுதிகளைக் கைப்பற்றியதையும், காலனியாக்கியதையும் குறிக்கிறது-மொர்).

மனிதாபிமான ரீதியாகத் தலையிடுதல்

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயராலும், மனித உரிமைகளின் பெயராலும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம், அணுஆயுதப் பரவலைத் தடுப்பது மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் பெயரால் இராக் மீது படையெடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட மனித உரிமைகளின் பெயரால் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்ட முதல் நாடு லிபியாதான். லிபியாவில் மோதல்கள் துவங்கிய மிக ஆரம்ப நாட்களில் அதிபர் பராக் ஒபாமா பின்வருமாறு தடாலடியாகக் கூறினார்: 'நேட்டோ ஒரு நாள் தாமதித்தித்தால் கூட, பெங்காஷி நகரத்தில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள்; அது அப்பிராந்தியம் முழுவதும் எதிரொலித்து உலகத்தின் மனசாட்சியைக் களங்கப்படுத்தியிருக்கும்'. ஒபாமாவின் மூத்த உதவியாளர்கள் நடக்கவிருந்த படுகொலை ஒரு லட்சம் பேரின் மரணத்திற்கு இட்டுச் சென்றிருக்கும் என்று கூறினார்கள்; இதுதான் அமெரிக்காவின் தொலைக் காட்சிகளில் வெறுப்பேற்றும் வகையில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது; ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தைப் பெறுவதற்காக மனித உரிமைகள் அடிப்படையிலான தலையீடு என்பது விவாதிக்கப்பட்ட அதிகார மையங்களிலும் மீண்டும் மீண்டும் இதுதான் கூறப்பட்டது. இது ஒரு வெட்கங்கெட்ட பொய்யாகும்; இராக் அணுஆயுதங்களைத் தயாரிக்கிறது என்று ஒபாமாவிற்கு முந்தைய அதிபர் ஜார்ஜ் புஷ் கூறிய அச்சுறுத்தும் பொய்யைப் போன்றதே ஆகும் இது. இத்தகைய தவறான தகவல்களின் அடிப்படையில்தான் மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை என்கிற இரண்டகமான கோட்பாட்டைப் பயன்படுத்தி பாதுகாப்பு கவுன்சிலில் 1970 மற்றும் 1973ம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன; ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளின் மீது படையெடுப்புகள் ஏற்கனவே நடந்து கொண்டிருந்த 2005ல்தான் ஐநாவின் கடமைகள் பட்டியலில் இது சொருகப்பட்டது.
அந்த வேளையில்தான் புஷ் நிர்வாகம் ஐநா உள்பட சர்வதேச அரங்கில் தனக்கு பின்வரும் உரிமைகள் இருப்பதாகக் கூறிக் கொண்டிருந்தது: 1). இந்த பயங்கரவாத யுகத்தில் தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய நாடு என்று அமெரிக்கா கருதுகின்ற எந்த நாட்டின் மீதும் முன்னெச்சரிக்கையாக ராணுவத் தாக்குதல் நடத்தும் உரிமை அமெரிக்காவிற்கு இருக்கிறது; 2) பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நிலைமையில் ஜெனிவா ஒப்பந்தத்தின் பல்வேறு பண்புக் கூறுகள் இனியும் பொருந்தாது. இந்த முன்னெச்சரிக்கை தாக்குதல் எனும் சொல்லாடலுக்கு மனித உரிமைகள் அடிப்படையிலான தலையீடு என்கிற வடிவத்தில் பேரரசின் தயாள குணம் எனும் சொல்லாடல் மூலம் பின்னர் வலு சேர்க்கப்பட்டது. இப்போதைய கூற்று என்னவென்றால், எந்த ஒரு இறையாண்மை உள்ள நாட்டிலும் மக்கள் படுகொலை அல்லது இனப்படுகொலை நடக்கப் போகிறது என்று கருதினாலும் அந்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் உரிமை 'சர்வதேச சமுதாயத்திற்கு' (அமெரிக்க-ஐரோப்பிய சக்திகள் வரையறுக்கின்ற சர்வதேச சமுதாயம்) இருக்கிறது என்பதாகும். கடந்த மார்ச் மாதம் மூன்றாவது வாரம் நேட்டோ படைகள் லிபியாவின் மீது குண்டு வீச்சு தாக்குதலைத் துவங்கின; ஐநா சபையின் வரலாற்றிலேயே மனித உரிமைகள் அடிப்படையிலான தலையீடு என்கிற கோட்பாட்டின்படி அதனால் அனுமதிக்கப்பட்ட முதல் ராணுவத் தாக்குதல் அதுதான். 'இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்.....லிபியா ஒரு நீதி சாஸ்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது....பிரான்ஸ், ஐரோப்பா, மற்றும் உலகத்தின் அயலுறவுக் கொள்கையில் இது ஒரு முக்கியமான திருப்பு முனையாகும்' என்று பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி அடித்துக் கூறியது அவருக்கே உரிய வகையில் சரிதான்.
பெங்காஷியில் ஒரு லட்சம் பேர் படுகொலை செய்யப்படவிருக்கிறார்கள் என்ற ஒபாமாவின் கூற்றுக்கு நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் தென்படவில்லை; போரின் ஆரம்ப கட்டங்களில் கடாபியின் படைகளால் கைப்பற்றப்பட்ட கலகக்காரர்களின் நகரங்களில் படுகொலைகள் எதுவும் நடக்கவும் இல்லை. அதற்கு மாறாக, நேட்டோவின் கூலிப்படைகளால் படுகொலைகள் நடத்தப்பட்டிருக்கின்றன என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. லிபியாவில் குடியிருந்த கறுப்பு ஆப்பிரிக்கர்களில் சுமார் மூன்று லட்சம் பேர் லிபியாவை விட்டு வெளியேற்றப்பட்டனர் என்று நைஜர், மாலி மற்றும் சாட் போன்ற அண்டை நாடுகள் தெரிவிக்கின்றன; நேட்டோவின் உள்ளூர் கூட்டாளிகளும், வாடிக்கையாளர்களும் நேட்டோவின் 40000க்கும் மேற்பட்ட குண்டு வீச்சுகளின் நாசகரமான பாதுகாப்பில் திரிபோலி நோக்கி முன்னேறியபோது இது நிகழ்ந்தது. அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்த அகதிகளையும், தொழிலாளர்களையும் தன்னுடைய நாட்டின் விரிவடைந்து கொண்டிருந்த பொருளாதாரத்தின் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக கடாபியின் ஆட்சி வரவேற்றிருந்தது; அந்த மூன்று லட்சம் பேர் வெளியேற்றப்பட்டது  மட்டுமின்றி, லிபியாவைச் சேர்ந்த கறுப்பின மக்களே படுகொலை செய்யப்பட்டனர் என்பதற்கு நம்பகமான தகவல்கள் இருக்கின்றன. இந்த சூறையாடலின் அளவு இன்னும் அறுதி செய்யப்படவில்லை; ஆனால், ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சிலுடன் சேர்ந்து நேட்டோ கட்டவிழ்த்துவிட்ட இந்த யுத்தத்தால் 50000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது ஏற்கனவே தெளிவு; ஐந்து லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர்;  பெரும்பாலும் நேட்டோவிடம் ஆயுதம் பெற்ற கலகக்காரர்களினால்தான் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; அவர்கள்தான் இப்போது அந்த நாட்டின் அரசாங்கமாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். பாதுகாப்புக் கவுன்சிலோ அல்லது நேட்டோ படைத்தளபதிகளோ அல்லது அமெரிக்க வரலாற்றில் கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபரும், ஒரு கென்ய தந்தைக்குப் பிறந்தவருமான ஒபாமாவோ கூட இந்த நிராதரவான, பெரும்பாலும் கறுப்பின ஆப்பிரிக்க மக்களைப் பாதுகாப்பது தங்களது பொறுப்பு என்று நினைக்கவில்லை; நைஜீரியாவின் அமெரிக்க ஆதரவு அதிபர் உள்பட பல்வேறு ஆப்பிரிக்க அரசுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்றபோதிலும்.
நமது காலத்தின் மனித உரிமைகள் பற்றிய ஜனநாயகச் சொல்லாடலின் கொடிய அம்சங்களில் ஒன்று அடுத்தடுத்து இந்த முக்கண்டத்தின் (ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா) இறையாண்மை உள்ள நாடுகளின் உள் விவகாரங்களில் ஏகாதிபத்தியத் தலையீட்டை நியாயப்படுத்துவதற்கு இந்தக் கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது என்பதாகும்; இது ஐநா சாசன விதிகள் மற்றும் தேச அரசுகள் பற்றிய வெஸ்ட்பாலியன் ஒழுங்கமைப்பு (பிரஷ்யாவின் ஒரு பகுதியான வெஸ்ட்பாலியனில் 1648ம் ஆண்டு நாடுகளின் 'நிலப்பரப்பு முழுமை' மற்றும் 'உள்நாட்டு நிர்வாகக் கட்டமைப்புகளில் அந்நியருக்கு இடமின்மை' ஆகிய கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேச அரசுகள் குறித்த ஒப்பந்தம்-மொர்)   ஆகியவற்றை அப்பட்டமாக மீறுவதாகும்; அது மட்டுமின்றி, இன்னும் அடிப்படையாக, நேற்றைய வருடங்களின் காலனியப் பேரரசுகளை அகற்றுவதற்காக நடத்தப்பட்ட காலனிய எதிர்ப்புப் போராட்டங்களின் உணர்வுகளையும், வழக்கங்களையும் அப்பட்டமாக மீறுவதாகும். ஒரு சுதந்திர தேசத்தின் பிரஜைகளாக இருப்பதற்கான உரிமை அந்நிய தலையீடு இன்றி ஒரு சொந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையிலிருந்து பிரிக்க முடியாததாகும். கிட்டத்தட்ட லத்தீன் அமெரிக்காவின் ஒவ்வொரு நாட்டிலும் கடந்த ஐம்பதாண்டுகளில் மக்கள் மிகக் கொடூரமான சர்வாதிகாரங்களை எதிர்த்துப் போராடியிருக்கின்றனர்; ஆனால், அந்நியத் தலையீட்டை அவர்கள் எப்போதும் கேட்டதேயில்லை. அதற்கு மூன்று எளிமையான காரணங்கள். 1) மக்களுக்கு மட்டுமே தங்களது அரசாங்கங்களை மாற்றுவதற்கான உரிமை இருக்கின்றது; 2) கடாபி, சதாம் உசேன் உள்பட ஏகாதிபத்தியத்துடன் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கூட்டு சதி செய்யாத ஒரு சர்வாதிகாரியைப் பார்ப்பது கடினம்; 3) ராணுவத் தலையீடு என்பது எப்போதுமே விதிவிலக்கின்றி பலமிக்கவர்கள் பலவீனமானவர்களுக்கு எதிராகத் தலையிடுவதாகும்; விதிவிலக்கின்றி எப்போதுமே தலையிடுபவர்களின் நலன்களுக்காகவே தலையீடு நடக்கின்றது.
இந்த அடிப்படையான கோட்பாட்டின்படி பார்த்தால், கடந்த காலத்தில் சதாம் உசேனினுடைய ஆட்சியின் தன்மைக்கும் தலையீட்டிற்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அது போலவே இன்று கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கும் தலையீட்டிற்கும் சம்பந்தம் இல்லை. எதிர்காலத்தில் படையெடுப்பு நிகழ்வதாக இருந்தால், அது போலவே சிரியாவின் பசார் அல் அசாத் மற்றும் ஈரானின் அகமதிநிஜாத் ஆகியோரின் சர்வாதிகாரப் போக்கிற்கும் படையெடுப்பிற்கும் சம்பந்தம் இருக்காது. கடாபி ஆட்சியின் முரண்பட்ட தன்மையைப் பற்றி பின்னர் பார்ப்போம்; கடாபி ஒரு வகையான தாராளவாத ஜனநாயகவாதி என்று யாரும் வாதிடப் போவதில்லை. என்றபோதிலும், ஆப்பிரிக்க மற்றும் அரேபிய நாடுகளின் பெரும்பாலான ஆட்சியாளர்களைவிட அவர் ஒன்றும் சர்வாதிகாரி அல்ல என்பதைச் சொல்ல வேண்டும்; குறிப்பாக, சவூதி அரேபியாவிலும், வளைகுடாவின் மன்னராட்சிகள் முழுவதிலும் உள்ள மேற்குலகின் நண்பர்கள். அவருடைய எதேச்சாதிகாரம் மூர்க்கத்தனமாக இருந்தது உண்மைதான். என்றாலும், லிபிய மக்களின் நல்வாழ்வு என்கிற கண்ணோட்டத்திலிருந்து விஷயங்களைப் பார்த்தால், எதேச்சாதிகாரியாக இருந்தபோதிலும் சதாம் உசேன் கிழக்கு அரேபியாவின் மிகவும் முன்னேறிய சமூக நல அரசை நிர்மாணித்தது போல், ஆப்பிரிக்காவின் மிகவும் முன்னேறிய சமூக நல அரசை கடாபி நிர்மாணித்தார் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். சமூக நல அரசை அகற்றுவதும், தேசியச் சொத்துக்களை தனியார்மயமாக்குவதும், பெரு முதலாளிகளின் சொத்தாக மாற்றுவதும்தான் உண்மையில் இந்த மனித உரிமைகள் ஏகாதிபத்தியத்தின் அருவருப்பான மர்மஸ்தானமாக இருக்கிறது. அத்தகைய தலையீட்டிற்கான காரணம் மனித உரிமைகள் பிரச்சனைதான் என்பது சற்றேனும் உண்மையாக இருந்தால், நியாயமாக சவூதி அரேபியாதான் முதல் இலக்காக இருந்திருக்க வேண்டும். பாலஸ்தீன மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றவும் நேட்டோ நாடுகள் ஏன் உடனடியாக இஸ்ரேலை ஆக்கிரமிக்கக் கூடாது?
யதார்த்தத்தில், லிபியாவில் மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் நேட்டோவால் நடத்தப்பட்ட மகத்தான புனிதப் போர் கத்தாரைச் சேர்ந்த, எமிரேட்சைச் சேர்ந்த மதவாதிகள் உள்பட மற்றவர்களின் உதவியோடுதான் நடத்தப்பட்டது; அது போல், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் பெயரால் அசாத் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ய சிரியாவில் உள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும், அதன் கூட்டாளிகளுக்கும் துருக்கியில் உள்ள நேட்டோவின் இஸ்லாமியவாதிகள் சவூதி அரோபியாவுடன் சேர்ந்து ஆயுதம் வழங்கினர்.

எங்கே எண்ணை இருக்கிறதோ அங்கே பேரரசு செல்லும்

லிபியாவில் கலகம் துவங்கிய ஆரம்ப நாட்களில் லிபியாவின் தேசிய ஆட்சிமாற்றக் கவுன்சில் (என்டிசி) பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்திடம் ஒரு ரகசிய ஆலோசனையை முன் வைக்கிறது; என்டிசிக்கு பிரெஞ்சு அரசாங்கம் முழுமையான, நிலையான ஆதரவு வழங்குகிற பட்சத்தில் அதற்கு கைமாறாக லிபியாவின் தேசிய எண்ணை உற்பத்தியில் 35%த்தை பிரான்சிற்குத் தருவதாக அந்த ரகசிய முன் மொழிவு கூறுகின்றது. லிபியாவில் மனிதாபிமான அடிப்படையில் தலையிடுவதற்கு அதிகாரம் அளித்த பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானம் இந்த ரகசிய முன் மொழிவில் நன்கு பிரதிபலிக்கப்பட்டிருக்கின்றது. லிபரேஷன் என்கிற பிரெஞ்சு நாளிதழ் இந்தத் தகவல் பரிமாற்றத்தை வெளியிட்டபோது பிரெஞ்சு அரசாங்கம் அதை மறுத்தது. சதிகாரர்களின் இந்தப் பாசாங்கு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கடாபியின் படுகொலை அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அக்டோபர் 21ம் தேதி பிரிட்டனின் புதிய பாதுகாப்பு அமைச்சர் பிலிப் ஹாமன்ட், எண்ணைக் கிணறுகள் தோண்டுவதற்கு உரிமம் வழங்குமாறு ஒரு வேண்டுகோளை பிரிட்டன் அரசாங்கம் என்டிசிக்கு அனுப்பியிருக்கிறது என்று அறிவித்தார். அத்துடன் பின்வருமாறும் கூறினார்:
'எண்ணை வளங்கள் கொண்ட லிபியா ஒப்பீட்டளவில் வளமான நாடு...லிபியாவின் மறுகட்டமைப்பில் ஈடுபடுவதற்கு பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்...பிரிட்டிஷ் நிறுவனங்களும், பிரிட்டிஷ் விற்பனை அதிகாரிகளும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தங்களது பெட்டிகளைக் கட்டிக் கொண்டு லிபியாவிற்குப் புறப்பட வேண்டும் என்றும், அந்நாட்டின் மறு கட்டமைப்பில் பங்கெடுக்க வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கிறேன்'.
திரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த செப்டம்பர் 22 (2011) அன்று மீண்டும் திறக்கப்பட்ட நிகழ்ச்சியில் கொடியேற்றிய அமெரிக்கத் தூதர் ஜெனி கிரெட்சும் இதே அளவு மகிழ்ச்சியாக இருந்தார்:
'லிபியாவின் இயற்கை வளங்கள் எனும் கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ள வைரம் எண்ணை என்பது எங்களுக்குத் தெரியும். கடாபியின் காலத்திலும் கூட உள்கட்டமைப்பு நிர்மாணம் மற்றும் இதர விஷயங்களில் அவர்கள் எல்லாவற்றையும் அ முதல் ஃ வரைத் துவக்கிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்க நிறுவனங்களை பெரிய அளவிற்கு இங்கு கொண்டு வர நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்வோம்; அப்படிச் செய்ய எங்களால் முடிந்து விட்டால், அமெரிக்காவில் எங்களது சொந்த வேலை வாய்ப்பு நிலவரத்தை மேம்படுத்த அது உதவும்'.        
இத்தாலி எண்ணை நிறுவனத்தைக் குறிப்பிட்டு அந்நாட்டின் அயலுறவுத் துறை அமைச்சர் பிராங்கோ பிராட்டினியும் இந்த வெற்றிக் களிப்புப் பாடகர் குழுவில் தானும் மகிழ்ச்சியாக சேர்ந்து கொண்டார்: 'எதிர்காலத்தில் எனி (எண்ணை நிறுவனம்) முதன்மையான பாத்திரம் வகிக்கும்'. நேட்டோவின் தாக்குதலில் மிகக் கணிசமான அளவு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களித்த கத்தார் இப்போதே கிழக்கு லிபியாவில் எண்ணை விற்பனையை நிர்வகித்துக் கொண்டிருக்கிறது; வரும்காலத்தில் வலுவான நிலையிலிருந்து யுத்தத்தின் பலன்களை விநியோகிக்கும் வேலையிலும் இறங்கும். 'லிபியாவின் இடைக்கால அரசாங்கம் மேற்கத்திய தொழில் நிறுவனங்களை வரவேற்க தனக்கு மிகுந்த விருப்பமிருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளது......தன்னுடைய மேற்கத்திய ஆதரவாளர்களுக்கு லிபியாவின் வர்த்தகத்தில் முன்னுரிமை அளிக்கவும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது' என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இது கச்சிதமாக இருக்கிறது. 'இத்தாலி, பிரெஞ்சு மற்றும் பிரிட்டன் நிறுவனங்கள் போன்றவை விஷயத்தில் எங்களுக்கு மேற்கத்திய நாடுகளுடன் எந்தப் பிரச்சனையும் இல்லை; ஆனால், ரஷ்யா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுடன் எங்களுக்கு சில அரசியல் பிரச்சனைகள் இருக்கின்றன' என்று என்டிசியின் கட்டுப்பாட்டில் உள்ள அகோகோ என்கிற எண்ணை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஜலீல் மாயோப் என்பவர் கூறியதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
லிபியாவில் 4600 கோடி (46 பில்லியன்) பேரல்கள் மரபான எண்ணை வளம் இருப்பதாக் கூறப்படுகிறது; அந்நாட்டை அது ஆப்பிரிக்காவின் மிகப் பெரும் எண்ணை வளம் கொண்ட நாடாக ஆக்குகிறது. ஆனால், நைஜீரியாவும், அங்கோலாவும் லிபியாவின் இந்த முதன்மை நிலையை மறுக்கின்றன. பிப்ரவரி மாதம் உள்நாட்டு யுத்தம் முழுவீச்சில் துவங்குவதற்கு முன்னர் லிபியா நாளொன்றுக்கு 16 லட்சம் பேரல் எண்ணை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. அதன் பெரும் பகுதி தெற்கு ஐரோப்பாவிற்குச் சென்றது. அங்குள்ள எண்ணைச் சுத்திகரிப்பு ஆலைகள் லிபியாவின் அடர்த்தி குறைந்த, உயர்தர கச்சா எண்ணையைச் சுத்திகரிப்பதற்கு ஏற்ற வகையில் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை. அதற்கு மாறாக, சவூதி அரேபியாவின் கச்சா எண்ணை கனமானது; இந்த சுத்திகரிப்பு ஆலைகளில் பெரும்பாலானவைக்கு அவை பொருத்தமற்றவை; புவியியல் ரீதியாக லிபியா அருகில் இருப்பதும் மிக மிகக் கூடுதலான ஈர்ப்புடையதாக அதை ஆக்குகிறது. நேட்டோ யுத்தத்திற்கு முன்னரே லிபியாவின் எண்ணையில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளுக்குச் சென்றன; நேட்டோ குண்டுகளை வீசி வெற்றிப் பாதையில் பயணிக்கத் துவங்கியபோது முதலில் கைப்பற்றப்பட்டவை எண்ணை உற்பத்தி செய்யும் பகுதிகள்தான். இதற்கிடையே எண்ணைத் தொழிலின் பெரிய நிறுவனங்கள் தங்களது பழைய சலுகைகளை மீட்டெடுக்கத் தயாராக இருப்பது மட்டுமின்றி புதிய சலுகைகளைப் பெறவும் தயாராக இருக்கின்றனர். 42 வருடங்களுக்கு முன்னர் கடாபி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து கடாம்ஸ் மற்றும் சிர்தே போன்ற மிகப் பெரும் எண்ணை வயல்கள் பெரும்பாலும் அந்நிய எண்ணை நிறுவனங்களின் கைகளுக்கு எட்டாதவையாகவே இருந்தன. அவை இப்போது தனியார்மயமாக்கப்படும் எனவும், அந்நிய நிறுவனங்களுக்குத் திறந்து விடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. லிபியாவின் கடலில் உள்ள எண்ணை வளங்களுக்கும், எரிவாயு வளங்களுக்கும் இது பொருந்தும்.
எனவே, அரசியல் இறையாண்மையை இழப்பது என்பது இன்றியமையாதபடி பொருளாதார இறையாண்மை பெருமளவு வெட்டிச் சுருக்கப்படுவதற்கு இட்டுச் செல்கிறது.
ஆப்பிரிக்க ஒன்றியம் (எதிர்) 'சர்வதேச சமுதாயம்'

நேட்டோ படைகள் லிபியாவின் மீது விமானக் குண்டு வீச்சைத் துவக்கிய மூன்று மாதங்களுக்குப் பின்னர், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் உயர்மட்ட இடைக்காலக் குழுவிற்கும் பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இவ்வருடம் ஜீன் 15ம் தேதி நடைபெற்ற ஒரு சந்திப்பில் லிபிய நெருக்கடி பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கும் கடிதம் ஒன்றை ஆப்பிரிக்க ஒன்றியம் பாதுகாப்பு கவுன்சிலிடம் அளித்தது. இப்போது திரிபோலி வீழ்ந்துவிட்டது, கடாபி படுகொலை செய்யப்பட்டுவிட்டார்; இதற்குப் பின்னரும் பிற நாட்டு விவகாரங்களில் தலையிடும் பிரச்சனையில், ஒரு பக்கம் முக்கண்டத்தின் தேச அரசுகளுக்கும், மறு பக்கம் ஐரோப்பிய-அமெரிக்க தலையீட்டை நியாயப்படுத்தும் சர்வதேச சமுதாயத்தின் அமைப்புகளுக்கும் இடையில் கண்ணோட்டங்களுக்கும் பரிந்துரைகளுக்கும் இடையில் உள்ள பெரிய இடைவெளியை மதிப்பிட நாம் விரும்பினால் அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தை மீண்டும் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். அந்த முக்கியமான ஆவணத்திலிருந்து முதலில் வரிசையாக சில மேற்கோள்களைக் கொடுப்போம்.
1. லிபியாவில் நேட்டோவின் தலையீட்டிற்கான மூலகாரணம் என்னவாக இருந்த போதிலும், பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று ஐநா தீர்மானங்கள் 1970 மற்றும் 1973க்கு முன்னரும் அந்த தீர்மானங்களுக்குப் பின்னரும் ஆப்பிரிக்க ஒன்றியம் வேண்டுகோள் விடுத்தது. மூன்று மாதங்களாக ஆப்பிரிக்க ஒன்றியத்தை அலட்சியப்படுத்துவதும், புனித ஆப்பிரிக்க மண்ணின் மீது குண்டு வீச்சகளைத் தொடர்வதும் ஆணவமும், தான்தோன்றித்தனமும், சினமூட்டும் தன்மையும் கொண்ட செயலாகும்.
2. லிபியாவின் மீதோ அல்லது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் எந்த உறுப்பு நாட்டின் மீதோ ஆப்பிரிக்க ஒன்றியத்தின் வெளிப்படையான ஒப்புதல் இன்றி தாக்குதல் நடத்துவது அபாயகரமான ஆத்திரமூட்டலாகும்... இறையாண்மை என்பது ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்கான ஒரு கருவியாகும்; அடிமை வர்த்தகம், காலனியம் மற்றும் நவகாலனியம் ஆகியவற்றால் நூற்றாண்டு கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் மாற்றத்திற்கான பாதையை வகுக்கத் துவங்கியுள்ளார்கள். ஆதலால், மக்கள் மீது அக்கறையின்றி ஆப்பிரிக்க நாடுகளின் இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஆப்பிரிக்க மக்களின் ஊழ்வினையின் மீது புதிய காயங்களை ஏற்படுத்துவதற்கு ஒப்பாகும்.
3. அரசுப் படைகளுக்கும் ஆயுதத் தாங்கிய கலகக்காரர்களுக்கும் இடையிலான போர் இனப்படுகொலை ஆகாது. அது ஒரு உள்நாட்டு யுத்தம்.....அரசுகளின் இறையாண்மையை அழிப்பதற்கு ஒரு சாக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு வன்முறையையும் இனப்படுகொலை என்றோ அல்லது நடக்கவிருக்கும் இனப்படுகொலை என்றோ வகைப்படுத்துவது தவறாகும்.
4. ஒரு உள்நாட்டு யுத்தத்தில் ஐநா எந்தத் தரப்பையும் ஆதரிக்கக் கூடாது. ஐநா பேச்சு வார்த்தையையே ஊக்குவிக்க வேண்டும்....பேச்சு வார்த்தைக்கு முன்னர் கர்னல் முவம்மர் கடாபி பதவி விலக வேண்டும் என்ற சில நாடுகளின் கோரிக்கை சரியல்ல. கடாபி பதவியில் இருக்க வேண்டுமா அல்லது போக வேண்டுமா என்பது லிபிய மக்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம். குறிப்பாக, கடாபி வெளியேற வேண்டும் என்று அந்நியர்கள் கோருவது தவறாகும். 2011 ஏப்ரல் 11 அன்று ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சமரசக் குழு திரிபோலிக்குச் சென்றபோது கடாபி பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டார். அதற்குப் பிந்தைய யுத்தச் செயல்பாடுகள் எதுவும் ஆப்பிரிக்காவிற்கு ஆத்திரமூட்டுவதாகும். இது ஒரு தேவையற்ற யுத்தமாகும். இது நிற்க வேண்டும்...கடாபி வெளியேறாமல் கலகக்காரர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட முடியாது என்கிற கதையை நாங்கள் ஏற்கவில்லை. அவர்கள் பேச்சு வார்த்தையை விரும்பவில்லை என்றால் அவர்கள் கடாபியுடனான தங்களது யுத்தத்தை நேட்டோ குண்டு வீச்சுகள் இல்லாமல் நடத்திக் கொள்ளட்டும்....அந்நியர்களின் ஆதரவு பெற்ற குழுக்கள் பேச்சு வார்த்தையையும், உள்நாட்டில் கருத்தொற்றுமையை வளர்ப்பதையும் அலட்சியப்படுத்துகின்றன; அந்நிய ஆதரவாளர்களை வென்றெடுப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
ஆப்பிரிக்க ஒன்றியம் எந்த வகையிலும் முற்போக்குவாதிகளின் ஒரு கூட்டமைப்பு அல்ல என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அது தேச அரசாங்கங்களின் ஒரு பழமைவாதக் குழுவாகும்; அவற்றில் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் மேற்கின் கூட்டாளிகளாக இருப்பவை; எந்தக் குறிப்பிட்ட நேரத்திலும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் அரசுகளின் தலைவர்களில் பலர் பணத்திற்காக எதையும் செய்பவர்கள், ஊழல்வாதிகள், எதேச்சாதிகாரிகள் அல்லது இன்னும் மோசமானவர்கள். என்றபோதிலும், சர்கோசி அல்லது சில்வியோ பெர்லுஸ்கோனி அல்லது மற்ற எந்த மேற்கத்திய தலைவரின் தனிப்பட்ட நீசத்தனத்தை விடவும் அவர்களது நீசத்தனம் பெரியதல்ல. விஷயம் என்னவென்றால், ஆப்பிரிக்க நாடுகள் ஒற்றுமையாக தங்களது குரலை எழுப்பும் ஒரே அமைப்பு ஆப்பிரிக்க ஒன்றியம்தான்; அது எழுப்பியுள்ள கோட்பாடுகளும், உண்மை விஷயங்களும் மறுக்க முடியாதவை.
முதல் விஷயமே என்னவென்றால், ஆப்பிரிக்க அரசுகளின் கூட்மைப்பின் கருத்திற்கு எதிராக பாதுகாப்புக் கவுன்சிலோ அல்லது நேட்டோவோ அல்லது அரசுகள் மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்புகள் எதுவுமோ கருத்து கூறும்போது தங்களது கருத்தை சர்வதேசச் சமுதாயத்தின் கருத்து என்று கூறிக் கொள்ளக் கூடாது என்பதுதான். இரண்டாவது விஷயம் என்னவென்றால், ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் எழுப்பப்படும் இறையாண்மை பிரச்சனை ஐரோப்பிய மற்றும் வெஸ்ட்பாலியன் குறிப்பிடும் வகையில் மட்டும் எழுப்பப்படவில்லை; ஆனால், அதை விட மிகவும் உணர்வு பூர்வமாகவும் மற்றும் வெடிப்புடனும், காலனியச் சூறையாடலின் நீண்ட வரலாற்றுக்குப் பின்னர் சமீபத்தில்தான் நாடுகள் விடுதலையடைந்தன என்கிற கண்ணோட்டத்திலிருந்து எழுப்பப்படுகின்றது; அந்த நாடுகளின் சுதந்திரம் இன்னும் பலவீனமானதாகவே இருக்கின்றது. மேலும், ஓபாமா, நேட்டோ கூட்டாளிகள் மற்றும் பாதுகாப்புக் கவுன்சில் ஆகியவற்றின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டையும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் கடிதம் நிராகரிக்கின்றது; அதாவது லிபியாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது அல்லது நடக்கவிருக்கின்றது என்கிற நிலைப்பாட்டை நிராகரிக்கின்றது. மாறாக, அரசுப் படைகளுக்கும் ஆயுதம் தாங்கிய கலகக்காரர்களுக்கும் இடையில் உள்நாட்டு யுத்தம்தான் நடக்கிறது என்று கறாராகக் கூறுகின்றது; எந்தத் தரப்பையும் ஆதரிக்கக் கூடாது என்று ஐநாவிடம் கேட்டுக் கொள்கிறது; மேலும், அந்நியர்களின் ஆதரவு பெற்ற குழுக்களையும், அந்நிய ஆதரவாளர்களை வென்றெடுப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட கோரிக்கைகளையும் வெறுப்புடன் ஒதுக்கித் தள்ளுகிறது.
எப்படியாயினும் மிகுந்த காரிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்னவெனில், ஏப்ரல் 10ம் தேதியே கடாபி பேச்சுவார்த்தைக்கும், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சமரசத்திற்கும் ஒப்புக் கொண்டு விட்டார்; அதற்குப் பின்னர் ஆப்பிரிக்க ஒன்றியம் மிகச் சரியாகவே நேட்டோ தன்னுடைய ராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரியது; ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ஆதரவுடன் ஐநா சமரசப் பேச்சு வார்த்தைகளுக்கு உதவ வேண்டும் என்றும் கோரியது. பேச்சு வாத்தைக்காகவும், புருண்டியில் செய்தது போல் ஆப்பிரிக்க ஒன்றியப் படையைக் கொண்டு லிபியாவிற்குள் வன்முறையைக் கட்டுப்படுத்தவும், அமைதிப் பேச்சு வாத்தைக் காலத்தில் தண்டனையிலிருந்து தற்காலிகப் பாதுகாப்பு எனும் கோட்பாடுகளைப் பயன்படுத்தி மோதலை முடிவிற்குக் கொண்டு வரவும், அமைதி மீட்டெடுக்கப்பட்ட பின்னர் உண்மை அறியும் குழுக்கள் மற்றும் இணக்கத்தை ஏற்படுத்தும் குழுக்களை அமைக்கவும் ஒரு விரிவான திட்டத்தை அக்கடிதம் விவரித்திருந்தது.
இதில் எதுவுமே செவி மடுக்கப்படவில்லை; ஏனெனில், நியாயத்தின் குரல் பலவீனமானவர்களிடமிருந்து வந்திருந்தது; தலையிடுவதற்கும், ஆட்சியை மாற்றுவதற்குமான விருப்பம் உலகின் எஜமானர்களாக தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்டவர்களிடமிருந்து வந்திருந்தது.

நாகரீகமும் வெற்றிக் களிப்பும்

வெற்றியின் தருணத்தில், மற்ற மேற்கத்திய தலைவர்களைவிட அதிபர் ஒபாமா வார்த்தைகளை அளந்து பேசினார். நேட்டோவின் 40000க்கும் மேற்ப்பட்ட குண்டு வீச்சுக்களுக்கு லிபியா வீழ்ந்ததானது உலகெங்கும் அமெரிக்காவின் தலைமை வலுவாக இருக்கின்றது என்பதற்குச் சான்று என்றார். அவர் அந்தப் பெருமைக்கு உரிமை கொண்டாடுவது முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. அமெரிக்காவின் கட்டாயப்படுத்தும் சக்தியில்லாமல் நேட்டோவிற்கு தாக்குதல் நடத்தும் அதிகாரத்தை வழங்கிய பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானத்தை நினைத்துப் பார்க்கவும் முடியாது. ஒசாமா பின் லேடன் மற்றும் அன்வர் அல் அவலாக்கி ஆகியோர் உள்ளிட்ட பலரின் படுகொலைகளை, நீதித்துறைக்கு அப்பாற்பட்ட தண்டனை நிறைவேற்றங்களை ஒபாமா இறுமாப்புடன் ஏற்றுக் கொண்டது நிராயுதபாணியான கடாபியைக் கொல்வதற்கும் வழங்கப்பட்ட பரிபூரண ஒப்புதலாகும். கடாபி உண்மையில் கொல்லப்படுவதற்கு முந்தைய 48 மணி நேரத்திற்குள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் திரிபோலிக்கு வெற்றி விஜயம் செய்தார்; நேட்டோவாலும் அதன் உள்ளூர் வாடிக்கையாளர்களாலும் இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அங்கு கிளின்டன் சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் மிகத் தெளிவாகக் கூறினார்: 'கடாபியை விரைவிலேயே பிடித்து விடுவோம் அல்லது கொன்று விடுவோம் என்று நம்புகிறோம்'. கொலை செய்யத் தூண்டுவதை இத்தகைய கடுமையான வார்த்தைகளிற்குள் ஒளித்து வைக்க முடியாது.
அதிகார ஒப்புதல் அளிக்கப்பட்ட படுகொலைப் பிரச்சனை நம்மை ஒரு வகையில் தடுத்து நிறுத்துகிறது; ஏனெனில், மனித உரிமைகள் விஷயத்தில் ஏகாதிபத்தியத்தின் இரட்டை வேடத்துடன் அது மோதுகின்றது. கடாபியின் மரணமும் அவர் புதைக்கப்பட்டதும் பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாக இல்லை. திரிபோலி சுற்றி வளைக்கப்பட்ட போது கடாபி பின்வாங்கிய நகரம் அவரையும் அவரைச் சுற்றி இருப்பவர்களையும் கொல்லும் ஒரே நோக்கத்துடன் நடத்தப்பட்ட நேட்டோ விமானங்களின் நூற்றுக்கணக்கான குண்டு வீச்சுகளினால் அழிக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும். வாகனங்களின் மூலம் சிர்டே நகரத்தை விட்டு அவர் வெளியேறிக் கொண்டிருந்தபோது அந்த வாகனங்கள் மீதும் குண்டு வீசப்பட்டன என்பது நமக்குத் தெரியும். தங்களுடைய ரபாலே போர் விமானம்தான் கடாபியின் வாகனத்தைச் செயலிழக்கச் செய்தது என்று பிரெஞ்சுக்காரர்கள் கூறிக் கொண்டனர். தங்களுடைய நரபட்சிணிகளில் (யுத்த விமானங்கள்-மொர்) ஒன்றின் வேலைதான் அது என்று அமெரிக்கர்கள் கூறிக் கொண்டனர். முக்கியமான விஷயம் என்னவெனில் அவர் நேட்டோ கூலிப்படையினரால் நிராயுதபாணியாகவும் உயிருடனும் பிடிக்கப்பட்டார், அங்கும் இங்குமாக உதைத்திழுக்கப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டார். லிபியக் கலகக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் அமெரிக்க, பிரெஞ்சு, பிரிட்டிஷ், கத்தார் நாட்டுப் படைகளும், இதர சிறப்புப் படையினரும் எவ்வளவு பேர் அந்த இடத்தில் இருந்தார்கள் என்பதை வைத்துப் பார்க்கும்போது, சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த கலகக்காரர்களிடமிருந்து அந்த செத்துப் போன மனிதனின் உடல் எடுத்துப் போகப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐநாவின் அதிகாரபூர்வ விசாரணை அதிகாரியான கிறிஸ்டோப் ஹெய்ன்ஸ் இந்த விஷயத்தில் தெளிவாக இருப்பது போல் தெரிகிறது: 'கைதிகள் சிறைப் பிடிக்கப்படும்போது அவர்களை வேண்டுமென்றே கொல்லக் கூடாது என்று ஜெனிவா ஒப்பந்தங்கள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன. ஒரு போர்க் குற்றத்தில் இதுதான் நடந்திருக்கிறது என்றால் அது விசாரிக்கபட வேண்டும்'.
என்றபோதிலும், சிக்கல் என்னவென்றால் கடாபியைக் கொல்பவருக்கு அல்லது கொல்லவோ, பிடிக்கவோ உதவுகிறவருக்கு 20 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று மேற்கத்தியக் கூட்டணி முன்னர் அறிவித்திருக்கிறது. எனவே, மேற்கத்திய விழுமியங்களுக்கு இங்கு ஒரு சோதனை: கடாபியைக் கொன்ற மனிதர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டுமா? அவருக்கு 20 மில்லியன் டாலர்கள் பரிசாகக் கொடுத்து, வீரனாகக் கொண்டாட வேண்டுமா? அல்லது சட்டத்தின் பிடியிலிருந்தும், வரலாற்றிலிருந்தும், நினைவிலிருந்தும் தப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டுமா? அப்படித் தப்பித்து ஒரு பெரிய தொகையுடன் மியாமியிலோ, தெற்கு கலிபோர்னியாவிலோ அல்லது ரைன் நதிக்கரையில் ஒரு மாளிகையிலோ அமைதியாக வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமா?
கடாபின் சொந்த இனம் பின்வரும் அறிக்கையை வெளியிட்டது: 'இஸலாமிய சம்பிரதாயங்கள் மற்றும் விதிகளின் படி புதைப்பதற்கு ஏதுவாக சிர்டேவில் உள்ள எங்களது இனத்தவரிடம் தியாகிகளின் உடல்களைக் கொடுக்கும்படி தேசிய இடைக்கால அரசாங்கத்தை நிர்ப்பந்திக்குமாறு ஐநா, இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு மற்றும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஆகிய அமைப்புகளைக் கேட்டுக் கொள்கிறோம்.' ஆனால், அப்படி ஒரு பாக்கியம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை! நேட்டோவின் கூலிப்படையினர் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இடுப்பு வரை நிர்வாணமான கடாபியின் உடலையும், அவரது மகன் முடாசிமின் உடலையும் மிஸ்ராடாவில் உள்ள ஒரு கிடங்கில் காட்சிக்கு வைத்திருந்தார்கள்; நினைவுச் சின்னம் போல் பலர் அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
மனித உரிமைகள் ஏகாதிபத்தியம் ஒரு புதிய பொழுது போக்குத் தொழிலைக் கண்டுபிடிப்பது போல் தெரிகிறது; பிணங்களுடன் உறவு கொள்ளும் சுற்றுலாத் தொழில்!
அது அப்படியே இருக்கட்டும். இந்த நிகழ்வு அமெரிக்காவின் தலைமைப் பண்பின் பலத்தை நிரூபிக்கிறது என்று அதிபர் ஒபாமா சரியாகவேச் சொன்னார். நேட்டோவின் கூலிப் படையினராகக் களத்தில் போரிட விதிக்கப்பட்டவர்கள் துவக்கத்திலிருந்தே ஆயுதம் தாங்கியவர்களாக இருப்பதை உறுதி செய்வதற்காக அமெரிக்கச் சிறப்புப் படையினரும் சிஐஏவினரும் கலகம் துவங்குவதற்கு முன்பே களத்தில் இருந்தனர்; பின்னர் அவர்களுடன் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு சிறப்புப் படைகளும், உளவுத் துறையினரும் சேர்ந்து கொண்டனர்; அவர்களுக்கு ஆதரவாக கத்தார், எமிரெட்ஸ் மற்றும் அவற்றைப் போன்ற நாடுகளின் ஆயுதம் தாங்கியக் குழுக்களும் சேர்ந்து கொண்டனர். பெரும்பாலான குண்டு வீச்சுக்களை நேட்டோவின் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் பிரிவுகளே கவனித்துக் கொண்டன; ஆனால், உயர் மின்னணு தொழில் நுட்பத்தின் பெரும்பகுதியையும், (லிபியா) உள்கட்டமைப்பின் அடிப்படையான விஷயங்களையும் அமெரிக்கப் படைகள் கவனித்துக் கொண்டன; எடுத்துக் காட்டாக, மின்னணு உளவுத் தகவல்களைச் சேகரிப்பதையும், லிபியாவின் விமான எதிர்ப்பு ஏற்பாடுகளை அழிப்பதையும், அதன் கடற்கரையை யாரும் அணுக முடியாதபடிச் செய்வதையும் அமெரிக்கப் படைகள் கவனித்துக் கொண்டன. நேட்டோ விமானங்கள் எரிபொருள் நிரப்பிக் கொள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைப் பயன்படுத்திக் கொண்டன; அமெரிக்காவின் ஐரோப்பியக் கூட்டாளிகளுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டபோது அவற்றைக் கொடுத்தன. ஒரு முக்கியமான பொருளில், இந்த ராணுவ நடவடிக்கை, 'ஆப்ரிகாம்' என்றழைக்கப்படும் ஆப்பிரிக்காவைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்கப் படைத்தலைமை மற்றும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளும் சேர்ந்து நடத்திய இந்த தாக்குதல், ஒரு வெற்றிகரமான பரிசோதனையாகும் லிபியா.
ஒபாமா சூசகமாகப் பேசினார் என்றால் அவருடைய ஜடம் போன்ற துணை அதிபர் ஜோ பிடென் நறுக்கென்று கூறினார்: 'இந்தப் போரில் அமெரிக்கா 200 கோடி டாலர்கள் செலவழித்தது; ஒரு உயிரைக் கூட இழக்கவில்லை. கடந்த காலத்தைவிட வரும் காலத்தில் உலகை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறையாகும் இது.' உயிர் எனும்போது பிடென் அமெரிக்க உயிரையே குறிப்பிடுகிறார் என்பது கண்கூடு. மிகக் குறைவான மதிப்பீடுகள் கூட லிபியாவில் நடந்த யுத்தம் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் உயிர்களின் இழப்பிற்கு இட்டுச் சென்றது என்று கூறுகின்றன; அவர்களில் பெரும்பாலானோர் நேட்டோ குண்டு வீச்சு விமானங்களாலும், அவற்றின் உள்ளூர் கூட்டாளிகளாலும் கொல்லப்பட்டவர்கள்.
இன்னும் பொதுவாக இங்கு நாம் கூற வருவது என்னவென்றால், மிகவும் முன்னேறிய தொழில்நுட்பங்களைக் கொண்டு யுத்த களத்தை 'இயந்திரமயமாக்கப்பட்ட யுத்தகளமாக' மாற்றுவதும், அதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவு தரைப்படைகளைப் பயன்படுத்தாமலேயே யுத்தங்களை வெல்வது மற்றும் நாடுகளைக் கைப்பற்றுவது என்கிற அமெரிக்காவின் குறிக்கோள்தான். இந்தக் கருத்து முதன் முதலில் வியட்நாம் யுத்தத்தின்போது உருவானது. அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் (ஐரோப்பாவில்), இனி முதற்கொண்டு மேற்கு நாடுகள் இராக்கில் செய்தது போல் லட்சக்கணக்கான வீரர்களை கொண்டு படையெடுப்பதைவிட லிபிய மாதிரி தலையீட்டையே மேற்கொள்ள வேண்டும் என்று இதே கருத்தை பாடி ஆஸ்டவுன் போன்றோர் கூறினர்; ஆஸ்டவுன் ஒரு காலத்தில் போஸ்னியா-ஹெர்சகோவினாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியாகப் பணியாற்றினார்.
இம்மரிதிரியான ஈவிரக்கமற்ற ஆங்கிலோ-சாக்ஸன் ஆணவத்தை தற்போதைய பிரெஞ்சு அதிபர் சர்கோஷி போன்ற பேராசை கொண்ட அரசியல்வாதிகளால் வரலாறு மற்றும் நாகரீகம் பற்றிய உயர் கோட்பாடுகள் கொண்ட பிரெஞ்சு சொல்லாடலின் சொற்புரட்டுகளாக எளிதில் மாற்றிவிட முடியும். 'லா ஹீயூமனைட்' என்கிற பிரெஞ்சு இதழின் முன்னாள் ஆசிரியர் பியர்ரே லெவ்வி 2007ல் சர்கோஷி ஆற்றிய உரையொன்றின் ஒரு பத்தியை சமீபத்தில் நினைவூட்டியிருந்தார். அதில் 'சா£லிமேக்னே (8-9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமப் பேரரசர்-மொர்) மற்றும் புனித ரோமப் பேரரசின் உடைத்தெறியப்பட்ட கனவுகள், புனிதப் போர்கள், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கிறித்துவத்திற்கு இடையிலான மாபெரும் பிளவு, 14ம் லூயி மற்றும் நெப்போலியன்  ஆகியோரின் வீழ்ச்சி.....' போன்றவற்றை சர்கோஷி மிக உயர்வாகப் புகழ்ந்தார். மேலும் தொடர்ந்த அவர் 'ஒரு நாகரீகத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய இன்று ஐரோப்பாவிற்கு மட்டுமே இருக்கிறது' என்றார். நாகரீகமயமாக்கும் ஆற்றல் தங்களுக்கு மட்டுமே இருப்பதாக அவர் கூறிக் கொண்ட உடனேயே அது வென்றடக்குவதற்கான பேராவலுக்கு இட்டுச் சென்றது. '12 நூற்றாண்டுகள் நீடித்த பிரிவினைக்கும், வேதனை மிக்க மோதலுக்கும் பின்னர் மத்திய தரைக் கடல் பகுதிகளை ஒன்றிணைக்கும்போக்கிற்குக் கொண்டு வரும் பிரான்சின் அதிபராக நான் இருக்க விரும்புகிறேன்....அமெரிக்காவும், சீனாவும் ஆப்பிரிக்காவை வென்றடக்கும் வேலையை ஏற்கனவே துவக்கி விட்டன. நாளைய ஆப்பிரிக்காவை நிர்மாணிப்பதற்கு பிரான்ஸ் எவ்வளவு காலம் காத்திருக்கும்? ஐரோப்பா தயங்கிக் கொண்டிருக்கும் போது மற்றவர்கள் முன்னேறுகிறார்கள்.'
லெவ்வி பின்னர் பிரான்ஸ் சோஷலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டொமினிக் ஸ்டிராஸ்-கானை (பாலியல் துர்நடத்தைகளுக்காக சமீபத்தில் செய்திகளில் அதிகமாக அடிபட்டவர்) மேற்கோள் காட்டுகிறார். அவரும் சர்கோஷிக்கு இணையாக ஆராவரமாகப் பேசுகிறார்: 'வடக்கே ஆர்க்டிக்கின் குளிரும் பனியிலிருந்து தெற்கே சகாராவின் சுடும் மணல் வரை விரிந்து கிடக்கும் ஐரோப்பா' வேண்டும் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்துகிறார். அந்த ஐரோப்பா தொடர்ந்து இருந்தால் மத்திய தரைக் கடலை ஒரு நிலப்பரப்பின் உள்புறத்தில் இருக்கும் கடலாக மாற்றி அமைத்து விடும்; ரோமானியர்கள் அல்லது மிகச் சமீபத்தில் நெப்போலியன் ஒன்று சேர்க்க முயற்சித்த பரப்பை மீண்டும் வென்றுவிடும்'.      
இந்த உலகக் கண்ணோட்டத்தின்படி, ரோமானியப் பேரரசிடமிருந்தும்,  நெப்போலியனிய யுத்தங்களிடமிருந்தும் ஒரு பணித் திட்டத்தை மரபுரிமையாக நேட்டோ பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது; அப்படியெனில், வட ஆப்பிரிக்காவை மீண்டும் கைப்பற்றுவதும் அதில் உள்ளடங்கியிருக்கிறது. அல்ஜீரியா ஒரு அந்நிய காலனி நாடு அல்ல, பிரான்சின் தொலைதூர மாகாணம்தான் என்று கொண்டாடி வந்த உரிமையை 50 வருடங்களுக்கு முன்னர்தான் பிரான்ஸ் துறந்தது. எப்படியாயினும், 'நாகரீகத்தை' முதலில் 'நாடுகளைக் கைப்பற்றுவதுடனும்' பின்னர் 'மீண்டும் கைப்பற்றுவதுடனும்' மிக நெருக்கமாகச் சேர்த்து நெய்திருப்பதுதான் கவனத்தை ஈர்க்கின்றது.

ஒபாமா, ஆப்பிரிக்கா மற்றும் ஏகாதிபத்திய திட்டம்

பரிதாபத்திற்குரிய 'பழைய ஐரோப்பா'! அதன் மூர்க்கத்தனமான நாகரீகப் பிதற்றல்களிலும் கூட அதனால் வட ஆப்பிரிக்காவில் இருந்த தன்னுடைய காலனியப் பேரரசை மீண்டும் கைப்பற்றுவது பற்றிதான் கற்பனை செய்ய முடிகின்றது. அதற்கு மாறாக, எப்படி நேரடியாக விஷயத்திற்கு வருவது என்பது அமெரிக்காவிற்குத் தெரிந்திருக்கிறது. லிபியாவிற்கு எதிரான யுத்தம் வெல்லப்பட்டு, ஆனால் கடாபி இன்னும் கொல்லப்படாமலிருந்த அக்டோபர் இரண்டாவது வாரத்தில் அதிபர் ஒபாமா பின்வருமாறு அறிவித்தார்: 'மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள பிராந்திய சக்திகளுக்கு உதவுவதற்காக சிறு எண்ணிக்கையிலான அமெரிக்கப் படைகளை அப்பகுதிக்கு அனுப்புவதற்கு நான் அதிகாரமளித்துள்ளேன்...அக்டோபர் 12ம் தேதி பொருத்தமான போர்க் கருவிகளுடன் அமெரிக்க ராணுவத்தின் முதல் குழு உகாண்டாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் கூடுதலான படைகள் அனுப்பப்படும்...யுத்த களத்திலிருந்து எல்ஆர்ஏவின் (கடவுளின் புரட்சிப் படை) ஜோசப் கோனி மற்றும் அதன் மூத்த தலைமையை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ள கூட்டாளிப் படைகளுக்கு இந்தப் படைகள் ஆலோசகர்களாகச் செயல்படும்....சம்பந்தப்பட்ட நாடுகள் ஒவ்வொன்றின் ஒப்புதலுடன் இது போன்ற அமெரிக்கப் படைகள் உகாண்டா, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளுக்குள் அனுப்பப்படும்'.
எனவே, லிபியாவில் வெற்றி பெற்றவுடன் உடனடியாக அமெரிக்கப் படைகள் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நான்கு நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளன; மனித உரிமைகள் மீறலில் ஈடுபடும், கொடூரமான சர்வாதிகாரச் செயல்கள் புரியும் ஆட்சிகளின் சேர்ந்து ஒத்துழைக்கப் போகிறார்கள். கொடூரமான சர்வாதிகாரிகளில் உகாண்டாவின் 'நிரந்தர அதிபர்' யொவேரி முசெவேனியும் அடங்குவார். உகாண்டாவில் இந்த மனிதாபிமானப் பணித் திட்டத்தை எல்ஆர்ஏ-வை அகற்றுவது என்கிற காரணத்தைக் கூறி ஒபாமா நியாயப்படுத்தினார். இது விநோதமாக இருக்கிறது. எல்ஆர்ஏ சுமார் 25 வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது; அது இப்போது போல் எப்போதும் பலவீனமாக இருந்ததில்லை. ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியில் ஏன் இப்படியொரு நடவடிக்கை திடீரென்று எடுக்கப்பட வேண்டும்? ரொனால்ட் ரீகன் அமைச்சரவையில் நிதித் துறை துணை அமைச்சராக இருந்த (அதனால் இடதுசாரி என்று சொல்ல முடியாத) பால் கிரெய்க் ராபர்ட்ஸ் விஷயத்தை ரத்னச் சுருக்கமாகக் கூறினார்: 'லிபியா கைப்பற்றப்பட்டு விட்டதால், எரிசக்தியிலும் கனிமப் பொருட்களிலும் சீனா முதலீடு செய்துள்ள மற்ற ஆப்பிரிக்க நாடுகளின் மீது ஆப்ரிகாம் தன்னுடைய வேலைகளைத் துவங்கும்.... ஆப்பிரிக்காவிற்கு முதலீடுகளையும், பரிசுகளையும் சீனா கொண்டு வருகின்றது; அமெரிக்கா படைகளையும், குண்டுகளையும், ராணுவத் தளங்களையும் அனுப்பி வைக்கிறது'.
இப்போது இப்படிப் படைவீரர்களை அனுப்பி வைப்பதும் கூட வரப் போகும் பெரிய நடவடிக்கையின் ஒரு அறிகுறி மட்டும்தான். மேற்காசியாவில் எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்காக  'சென்ட்காம்' என்ற ராணுவக் கேந்திரத்தை அமைத்திருப்பது போல் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கு என ஆப்ரிகாம் என்கிற ராணுவ கேந்திரத்தை கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்கா நிர்மாணித்து வருகின்றது. ஆப்பிரிக்காவில் இந்த ஏகாதிபத்தியப் பணித் திட்டத்தின் ஒரு பகுதியாக மாலி, சாட், நைஜர், பெனின், போட்ஸ்வானா, கேமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, எத்தியோப்பியா, காபோன், ஜாம்பியா, உகாண்டா, செனகல், மொசாம்பிக், கானா, மாளாவி மற்றும் மொரிடானியா ஆகிய நாடுகளின் ராணுவங்களுக்கு சுறுசுறுப்பாக பயிற்சி அளித்து வருகின்றது. இதர நேட்டோ நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா எண்ணற்ற ராணுவப் பயிற்சிகளை ஆப்பிரிக்காவில் நடத்தியுள்ளது; இதற்கு நைஜர் டெல்டா பகுதியிலிருந்தும் கினியா வளைகுடாவிலிருந்தும் வரும் எண்ணை விநியோகத்தைப் பாதுகாப்பது என்று வெளித் தோற்றத்திற்குக் காரணம் சொல்லப்பட்டது. அப்பகுதியில் லிபியா தவிர்த்து அங்கோலா, நைஜீரியா, கேமரூன், பூமத்தியரேகை கினியா, சாட் மற்றும் மொரிடானியா ஆகியவை எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கியமானவையாகும். இவை அனைத்தும், அவற்றுடன் மற்றவையும், தேவை ஏற்பட்டால் லிபியாவைப் போலவே பாதுகாக்கப்படும்.
விவரங்களுக்குள் போவதற்கான இடம் இதுவல்ல. ஆப்பிரிக்காவில் மிதமிஞ்சி கிடைக்கும் இயற்கை வளங்களைக் கைப்பற்றுவதற்கான யுத்தத்தில் லிபியாவின் வீழ்ச்சி முதல் படியாக இருக்கும் என்று சொல்வது போதுமானது. பல்வேறு கலகங்களும், ரத்தக்களறிகளும் ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால் இறுதியில் இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செய்தது போலவே ஆப்ரிகாம்-நேட்டோ கூட்டணியின் பல புதிய ராணுவத் தளங்கள் நிர்மாணிக்கப்படப் போவதை நாம் காணப் போகிறோம். ஆப்பிரிக்காவின் இயற்கை வளங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஐரோப்பிய-அமெரிக்க ஏகாதிபத்தியக் கூட்டணிக்காக பாதுகாத்து வைப்பது மட்டுமல்ல நோக்கம்; சீனாவிற்கு அவை கிடைக்காமல் மறுப்பதும் நோக்கம்; சீனா தன்னுடைய எண்ணைத் தேவைகளில் மூன்றில் ஒரு பகுதியை ஆப்பிரிக்காவிலிருந்து, குறிப்பாக அங்கோலா மற்றும் சூடான் ஆகிய நாடுகளிலிருந்து, பெறுகின்றது; அது மட்டுமின்றி பிளாட்டினம், செம்பு, மரம் மற்றும் இரும்புத் தாது ஆகியவற்றையும் பெறுகின்றது. சுமார் 75 சீன நிறுவனங்கள் 36000 ஊழியர்களுடன் லிபியாவில் செயல்பட்டு வந்தன; எண்ணைத் துறையைவிட உள்கட்டமைப்புத் துறையில் அதிகமாகச் செயல்பட்டு வந்தன. போருக்கு முந்தைய லிபியாவின் ஏற்றுமதியில் சீனாவின் பங்கு மட்டும் 11% ஆகும். அது தன்னுடைய ஊழியர்களை லிபியாவிலிருந்து வெளியேற்றியது; லிபிய மக்களைப் பாதுகாப்பது என்ற பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானத்தை ஆட்சியை மாற்றுவது என்பதாக நேட்டோ தன்னிச்சையாக மாற்றிக் கொண்டது என்று குற்றம் சாட்டியது.
லிபியாவிலிருந்து சீனா வெளியேறியதை நிரந்தரமாக்க வேண்டும் என்றும், ஆப்பிரிக்கா எங்கும் அத்தகைய வெளியேற்றம் மீண்டும் மீண்டும் நிகழ வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது. அது நடக்குமா? இப்போதே சொல்ல முடியாது. அமெரிக்காவிடம் ராணுவ பலமும், வீழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வல்லரசின் மூ£க்கத்தனமும் இருக்கின்றது; ஆனால், சீனாவிடம் பணமும், வளரும் ஒரு பொருளாதார சக்திக்கு உரிய பனி போன்ற பொறுமையும் இருக்கிறது. ஒரு மோதல் நடந்து கொண்டிருக்கிறது; அது முடிவதற்கு பல பத்தாண்டுகள் ஆகும்.

நிறைவு

லிபிய யுத்தத்தின் முக்கியத்துவம் தொடர்பான முக்கியமான பிரச்சனைகள் இங்கு விவாதிக்கப்படவில்லை; அரேபிய எழுச்சி என்று சொல்லப்படுகிறதே அதன் மீது இவை எல்லாம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? தூக்கி எறியப்பட்ட கடாபி ஆட்சியின் தன்மை என்ன? உருவாகிக் கொண்டிருக்கும் ஆட்சியில் எந்தெந்த சக்திகள் இருக்கக் கூடும்? லிபிய யுத்தத்தால் சாகேல் பகுதியின் ஸ்திரத்தன்மை குலைக்கப்பட்டிருப்பது மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட உள்நாட்டு யுத்தங்கள் வெடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இன்னும் அது போன்றவை பற்றி இங்கு எழுதப்படவில்லை. இக்கட்டுரையாளர் எதிர்காலத்தில் அவை குறித்து எழுதக் கூடும்.
எனவே, கடாபி உண்மையில் ஒரு உயில் எழுதி வைத்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டும், அவரது இறுதி வார்த்தைகளில் சிலவற்றை நினைவு கூர்ந்தும் இக்கட்டுரையை முடிக்கிறேன்.
''தனிப்பட்ட முறையில் பாதுகாப்பான, நிலையான வாழ்க்கைக்கு கைம்மாறாக எங்களது லட்சியத்தை விட்டுக் கொடுத்து எங்களால் பேரம் பேசியிருக்க முடியும் என்பதை இவ்வுலகின் சுதந்திர சிந்தனை உள்ள மக்கள் தெரிந்து கொள்ளட்டும். அப்படியொரு வாய்ப்பை அளிக்கத் தயாராக இருப்பதாகப் பலர் எங்களிடம் கூறினார்கள்; ஆனால், இந்தப் போரின் முன்னணியில் கடமை மற்றும் கண்ணியத்தின் அடையாளமாக இருப்பது என்று நாங்கள் தீர்மானித்தோம். உடனடியாக நாங்கள் வெல்லவில்லை என்றாலும் தேசத்தைப் பாதுகாக்கத் தீர்மானிப்பது ஒரு கவுரவம் என்றும், அதை விற்றுவிடுவது என்பது, மற்றவர்கள் வேறு மாதிரிச் சொல்ல முயற்சித்தாலும், வரலாறு எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் ஒரு மாபெரும் துரோகமாகும் என்கிற பாடத்தை எதிர்கால தலைமுறைகளுக்கு கொடுத்துச் செல்வோம்.''
அது உண்மைதான். ஆப்பிரிக்க நட்பு நாடுகள் சில பாதுகாப்பான புகலிடம் அளிக்க முன்வந்தன; சில ஐரோப்பிய நாடுகள் அவர் ஒரு கொண்டாடப்படும் தியாகியாக (குறைந்தபட்சம் லிபியாவின் சில பகுதிகளிலாவது) ஆவதைவிட முனை மழுங்கடிக்கப்பட்ட நண்பராக வைத்திருப்பதை விரும்பின. உண்மையில் அவருக்கு வாழ்வதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. இருந்தும் அவர் மரணத்தைத் தேர்வு செய்தார். அந்த சிறிய உயிலில் அவர் ஒரு எளிய ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.
''நான் கொல்லப்பட்டால் இஸ்லாமிய சடங்குகளின் படி, மரணத்தின்போது நான் அணிந்திருந்த உடைகளுடன், குளிப்பாட்டாமல், சிர்டேவில் உள்ள கல்லறையில், என்னுடைய குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு அருகே புதைக்கப்படுவதை விரும்புகிறேன். என்னுடைய மரணத்திற்குப் பின்னர் என்னுடைய குடும்பத்தார், குறிப்பாக பெண்களும் குழந்தைகளும், நன்றாக நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன்.''
இஸ்லாமிய சம்பிராதாயத்தில், இறந்தவர்கள் குளிப்பாட்டுப்பட்டு, புதிய போர்வையால் சுற்றப்பட்டு புதைக்கப்பட வேண்டும் என்கிற விதி தியாகிகளின் விஷயத்தில் தளர்த்தப்படுகின்றது. சரியோ அல்லது தவறோ தன்னை நெருங்கிக் கொண்டிருந்த மரணத்தை வீரமரணம் என்று கடாபி எண்ணினார். நாம் அப்படி நினைக்காமல் இருக்கலாம்; ஆனால் பலர் அப்படித்தான் நினைப்பார்கள். கடாபி மிகப் பெருமளவிற்கு ஒரு கோமாளியாகவே இருந்தார்; பல வகைகளில் மிருகத்தனமானவராக இருந்தார்; வயது ஆக ஆக மிருகத்தனமும் அதிகரித்தது; தான் என்ற அகங்காரமும் அதிகரித்தது; ஆனால், அவருக்கு ஒரு தொலை நோக்குப் பார்வையும் இருந்தது என்பதையும், தன்னுடைய மக்களுக்கு ஆப்பிரிக்காவிலேயே மிகவும் முன்னேறிய ஒரு சமூக நல அரசை நிர்மாணித்தார் என்பதையும் எல்லோரும் மறக்கப் போவதில்லை. அவருடைய மரபு ஒரு முரண்பட்ட மரபாகும். போரில் வெற்றி பெற்றவர்கள் அவருடைய சடலத்திற்கு என்ன செய்தார்கள் என்பதை முன்னர் விவரித்திருக்கிறோம். அவருடைய குடும்பத்தினர் அல்லது அவரது இனக்குழுவினரால் மட்டுமல்ல, எண்ணற்ற வேறு பலராலும் அதை எளிதில் மறந்துவிட முடியாது.

--------------------------------------------நன்றி: பிரன்ட்லைன், நவம்பர் 18, 2011                  
       
   



                             
                       

No comments:

Post a Comment